1.2 தமிழகத்தில் நாயக்கர் அரசு விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தில், தஞ்சை, செஞ்சி, மதுரை ஆகிய தமிழ்நாட்டு நகரங்களில், நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது. தஞ்சையில் கி.பி. 1532-இல் நாயக்கர் ஆட்சி தொடங்கியது; செஞ்சியில் கி.பி. 1526-இல் தொடங்கியது; மதுரையில் கி.பி. 1529-இல் தொடங்கியது. தொடக்க காலத்தில் இப்பகுதிகள் விஜயநகரப் பேரரசுக்கு அடங்கியிருந்து, பின்னர் முழு உரிமை பெற்ற அரசுகளாக மாறின. மதுரை நாயக்கர்களே நீண்ட காலம் அரசு செய்தவர்கள். 1529-ஆம் ஆண்டு தொடங்கி கி.பி. 1736-ஆம் ஆண்டு வரை இவர்கள் ஆட்சி நிலவியது. 1.2.1 மதுரை நாயக்கர்கள் கம்பணர் காலத்தில் மதுரையில் நாயக்கர் ஆட்சி தொடங்கியது. எனினும் விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தில்தான் மதுரையில் நாயக்கர் ஆட்சி வலிவுபெற்றது. விசுவநாத நாயக்கர் கி.பி. 1529இல் மதுரை ஆட்சியை ஏற்றார். அது முதற்கொண்டு நாயக்கராட்சி மதுரையில் வளம் பெற்றது. இவரே பாளையப்பட்டு ஆட்சிமுறையை வலிவு கொண்டதாக மாற்றி அமைத்தார். 72 பாளையப்பட்டுகளின் பொறுப்பில் நாட்டின் பகுதிகள் ஆட்சி செய்ய அனுமதிக்கப் பெற்றன. பாளையக்காரர்கள் தாங்கள் ஆளும் பகுதிகளில் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியைத் தங்கள் செலவுகளுக்கும், இன்னொரு பகுதியைப் படைவீரர்களுக்கும், மற்றொரு பகுதியை மதுரை நாயக்கர்க்கும் என ஒதுக்க வேண்டி இருந்தது. மதுரை அரசு வேண்டும் போது படையுதவி செய்ய வேண்டி இருந்தது. இதுவே பாளையப்பட்டு ஆட்சி முறையாகும். விசுவநாதருக்குப் பின் நாயக்க மன்னர் பலர் மதுரையை ஆண்டனர். அவர்களில் புகழ்மிக்கவர்கள் திருமலை நாயக்கர், சொக்கநாத நாயக்கர், இராணி மங்கம்மாள் என்ற மூவராவர். மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் வம்சவழி
1.2.2 திருமலை நாயக்கர் இதோ முறுக்கிய மீசையும் உருட்டி வழிக்கும் விழிகளும் கொண்ட திருமலை நாயக்கர் சிலையைக் காணுங்கள்! இது மதுரைக் கோயிலில் உள்ளது. இவர் 1623 முதல் கி.பி. 1659 வரை மதுரை நாட்டை ஆட்சி செய்த புகழ் மிக்க பெருமன்னர். தன் ஒப்பற்ற கலை ஆர்வத்தால் மதுரை நகரைக் கலையழகு கொஞ்சும் ஏதன்ஸ் நகரம் ஆக்கினார். திருமலை மன்னர் தம் முன்னோர்கள் வழியில் திருச்சியைத் தலைநகராகக் கொண்டிருந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையைத் தலைநகராக மாற்றினார். மைசூர், திருவனந்தபுரம் ஆகிய அரசுகளை இவர் வென்றார். விஜயநகரத்தோடு போரிட்டு வென்று முழுஉரிமை படைத்த மன்னரானார். இவர் 75 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தார். இவர் காலத்தில் மறவர் சீமை எனப்பட்ட இராமநாதபுரம், சிவகங்கை, திருவாடானைப் பகுதிகளில் அமைதி நிலவியது. சேதுபதி அரசரான இரகுநாததேவர் திருமலை மன்னருக்கு உறுதுணையாக இருந்தார். 1.2.3 சொக்கநாத நாயக்கர், இராணி மங்கம்மாள் நாயக்க மன்னர்களின் வரிசையில் மற்றொரு குறிப்பிடத்தக்க
மன்னர் சொக்கநாத
நாயக்கர். இவர் 23 ஆண்டுகள் மதுரை
நாட்டை ஆண்டார். இவருக்குப் பல சோதனைகளும்
தோல்விகளும் ஏற்பட்டன. செஞ்சிப் பகுதி முன்னரே பிஜப்பூர்
சுல்தான் வசப்பட்டுவிட்டது.
தஞ்சையும் இம்மன்னர் காலத்தில்
சுல்தானால் கைப்பற்றப்பட்டது. சுல்தானின் பிரதிநிதியாக
இருந்த ஏகோஜி இந்தப் பகுதிகளை அரசாண்டான். இந்த
ஏகோஜி மராட்டிய சிவாஜியின் தம்பியாவான்.
சுல்தானின்
மறைவுக்குப் பிறகு ஏகோஜி
தஞ்சையில் உரிமைமிக்க
மராட்டிய ஆட்சியை நிறுவினான். தமிழகத்தின் ஒரு பகுதியில்
மராட்டியர் ஆட்சி ஏற்பட்டு, அதன் பண்பாட்டுக் கூறுகளும்
தமிழகத்தில் பரவின. சொக்கநாதர் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது; பசியால்
துன்புற்று ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். ஏகோஜி
தஞ்சையைக் கைப்பற்றுவதற்கு முன்னர், தஞ்சையை ஆண்ட
விஜயராகவ நாயக்கர், தமக்குப் பெண் கொடுக்க
மறுத்தமையால் சொக்கநாதர் அவர் மீது போர் தொடுத்தார்.
விஜயராகவர் குடும்பத்தையே சொக்கநாதர் அழித்தார்.
சொக்கநாதர் இறுதிக்காலத்தில் அவருக்கு வேண்டியவர்களாலேயே சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு அவருடைய
குதிரைப் படைத் தலைவரால் விடுவிக்கப் பெற்று
மறுபடியும்
நாட்டை ஆண்டார். சொக்கநாதர் அவசரபுத்தி உடையவர்;
பழிவாங்கும் குணம் படைத்தவர். பிடிவாதம் கொண்டவர்.
எனவே அவர் காலத்தில் நாயக்கர் ஆட்சி
நிலை தாழ்ந்தது. சொக்கநாத நாயக்கரின் மனைவியே இராணி மங்கம்மாள். இவர்களின் மகன், முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சி செய்த போது, அவுரங்கசீப் என்ற மொகலாய மன்னர், தம் செருப்பை, நாடெங்கும் ஊர்வலமாக அனுப்பினார். அச்செருப்புக்கு எல்லாரும் மரியாதை செய்ய வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வீரமிக்க முத்துவீரப்பர் அந்தச் செருப்பைத் தன் காலில் அணிந்து கொண்டு “உங்கள் மன்னர் இன்னொரு செருப்பை அனுப்பவில்லையா?” எனக் கேட்டார். ஏழே ஆண்டுகள் வாழ்ந்த முத்து வீரப்பர் இறந்த போது அவர் மனைவி கருவுற்றிருந்தாள். பிள்ளையைப் பெற்றுவிட்டு அவ்வரசியும் உயிர் விட்டாள். இதனால் சொக்கநாத நாயக்கரின் மனைவி மங்கம்மாள் அரசப் பொறுப்பை ஏற்றார். இராணி மங்கம்மாள் வீரமிக்கவர். அவர் தன் தளபதி நரசப்பய்யாவின் துணையால் தஞ்சை, மைசூர், திருவனந்தபுரப் படைகளை வென்றார். தம் கணவர் காலத்தில் இழந்த பகுதிகளை மீட்டார். மங்கம்மாள் செய்த அறச் செயல்கள் பலப்பல. சாலைகள், தண்ணீர்ப் பந்தல்கள், வாய்க்கால் சீரமைப்பு, சாலை ஓரம் மரம் நடுதல், அன்ன சத்திரங்கள் ஆகியன மங்கம்மாள் ஆட்சியில் சிறப்புநிலை அடைந்தன. |