எண்ணத்தை அழகாக
எடுத்துச் சொல்வது கவிதை. சொல்வதையும் அழகிய வகையில் சொல்லப்பயன்படுவது பா
வடிவங்களாகும். காலந்தோறும் மாறிய பா, பாவினம் பற்றி அறிந்து கொள்ளலாம்.
மரபுக் கவிதை
ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மரபுக்கவிதை வடிவம் இன்றும் நிலைபெற்று
வருகின்றது. இலக்கியம் என்றாலே அது மரபுக்கவிதைதான் என்று விளங்கிய கால கட்டங்களைப் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் காண முடிகின்றது.
‘முதலில் தோன்றியது, மிகுந்த கட்டுப்பாடு இல்லாததாகிய
ஆசிரியப்பாவாகும்; வரவர
ஓசை நலம் கருதியும் செப்பமான
நிலையை எண்ணியும் சிற்சில கட்டுப்பாடுகள் தோன்றியிருக்கும்.
ஆசிரியப்பாவை அடுத்து அதனோடொத்த இயல்புடைய வஞ்சிப்பா
தோன்றியதெனலாம். அடுத்துக்
குறள் வெண்பா உள்ளிட்ட பலவகை
வெண்பாக்களும், பிறகு மருட்பாவும், அதன் பிறகு கலிப்பாவும்,
பரிபாடலும் தோன்றியிருத்தல் வேண்டும். அடுத்து வந்த காலத்தில்
விருத்தப்பா, தாழிசை,
துறை என்பன பயன்பாட்டிலமைந்தன’ என்பார்
அ.கி.பரந்தாமனார்.
யாப்பிலக்கணம் குறித்து
அகத்தியம், அவிநயம்,
காக்கைபாடினியம், கையனார் யாப்பியல், சங்க யாப்பு,
பல்காயம், பனம்பாரம், பெரிய பம்மம், மயேச்சுரர் யாப்பு,
மாபுராணம், வாய்ப்பியம், யாப்பருங்கலம்
எனப் பல்வேறு
இலக்கண நூல்கள் காலந்தோறும்
தோன்றி வந்துள்ளன. இந்நூல்கள்
தொல்காப்பியக் காலம் சார்ந்தும்,
காரிகைக்கு முன்னரும்
தோன்றியனவாகும்.
காரிகைக்குப்
பின், வீரசோழியம், இலக்கண விளக்கம்,
தொன்னூல் விளக்கம்,
சுவாமிநாதம், முத்துவீரியம், அறுவகை
இலக்கணம் என்னும் நூல்களும் யாப்பிலக்கணம்
உரைப்பனவாய்
அமைந்துள்ளன.
இருபதாம் நூற்றாண்டிலும் யாப்பிலக்கண
வழிகாட்டி நூல்கள் பல தோன்றியுள்ளன.
அவற்றுள் குறிப்பிடத்தக்கன:
(1) புலவர் குழந்தை - யாப்பதிகாரம், தொடையதிகாரம் (உரை)
(2) அ.கி.பரந்தாமனார் - கவிஞராக (உரைநடை)
(3) கி.வா.ஜகந்நாதன் - கவி பாடலாம் (உரைநடை)
(4) த.சரவணத் தமிழன் - யாப்பு நூல் (நூற்பா)
(5) ச.பாலசுந்தரம் - தென்னூல் (நூற்பா)
(6) இரா.திருமுருகன் - சிந்துப் பாவியல் (நூற்பா)
சங்க இலக்கியத்தில் அகவலும், நீதி இலக்கியத்தில் வெண்பாவும், பிற்காலக் காப்பியங்களில்
விருத்தமும், குறவஞ்சி, பள்ளு முதலியவற்றில் சிந்துப் பாடலுமாக மரபுக்கவிதை வடிவம்
சிறந்து வந்துள்ளது.
புதுக்கவிதை
கி.பி.1930-1945 காலகட்டத்தில் மணிக்கொடிக் குழுவினர், பாரதியாரை அடுத்துப்
புதுக்கவிதை இயற்றியவர்களாவர். அவர்களுள்
கு.ப.இராசகோபாலன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன்,
வல்லிக்கண்ணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மணிக்கொடி
இதழின் காலகட்டத்திலேயே
ஜெயபாரதி, சூறாவளி, கிராம
ஊழியன், கலாமோகினி போன்ற இதழ்களிலும் புதுக்கவிதைகள்
பல
இடம் பெற்றன.
கி.பி.1950-1970 ஆண்டுகளில் இரண்டாம் நிலை வளர்ச்சி அமைந்தது என்பார்
ந.சுப்புரெட்டியார். எழுத்து, இலக்கிய வட்டம், நடை
போன்ற இதழ்களில் புதுக்கவிதைகள்
வெளிவந்தன. 1962-ஆம்
ஆண்டு புதுக்கவிதை வரலாற்றில் சிறப்புடையதாகும்.
எழுபதுகளில் தாமரை, கசடதபற, வானம்பாடி போன்ற இதழ்களில் புதுக்கவிதைகள்
வெளியிடப் பெற்றுச் சிறப்புற்றன.
புள்ளி, வெள்ளம், உதயம், கதம்பம், ரசிகன், நீ, அலைகள், ஐ என்னும் புதுக்கவிதைச் சிறு தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
புதுக்கவிதை நூல்கள் பலவும் எழுபதுகள் தொடங்கி வெளிவரலாயின. அவற்றுள் சில:
(1) ந.பிச்சமூர்த்தி - காட்டுவாத்து
(2) வேணுகோபாலன் - கோடை வயல்
(3) வைத்தீஸ்வரன் - உதய நிழல்
(4) நா.காமராசன் - கறுப்பு மலர்கள்
(5) இன்குலாப் - இன்குலாப் கவிதைகள்
(6) ஞானக்கூத்தன் - அன்று வேறு கிழமை
(7) கலாப்ரியா - தீர்த்த யாத்திரை
(8) சி.சு.செல்லப்பா - புதுக்குரல்கள்
(9) தமிழன்பன் - தோணி வருகிறது
(10) வல்லிக்கண்ணன் - அமர வேதனை
(11) ப.கங்கை கொண்டான் - கூட்டுப் புழுக்கள்
(12) சி.மணி - வரும் போகும்
புதுக்கவிதை, ஈழத்திலும் மறுமலர்ச்சி, பாரதி, ஈழகேசரி, மல்லிகை, க-வி-தை
போன்ற இதழ்களில் சிறப்புற வளர்ந்து வந்துள்ளமையும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
புதுக்கவிதை குறித்த செய்திகளையும் தெளிவினையும் புலப்படுத்தி வரன்முறைப் படுத்திய
பெருமை திறனாய்வு நூல்களுக்கு உண்டு. இவை ஒரு வகையில் மரபுவழி யாப்பிலக்கண நூல்களை ஒத்தன
எனலாம். ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்பது
வல்லிக்கண்ணன் எழுதியது.
புதுக்கவிதை போக்கும்
நோக்கும் என்னும் நூல் ந.சுப்புரெட்டியாரால் எழுதப்பட்டது.
புதுக்கவிதை - ஒரு புதுப்பார்வை என்பது கவிஞர் பாலாவின் படைப்பு. புதுக்கவிதை வளர்ச்சிக்கு இத்தகு நூல்களும் பெரும்பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
|