பக்கம் எண் : 34
  

பதிப்புரை
 

வடமொழி இலக்கண மரபையும் கூறும் வீரசோழியம், பிரயோக விவேகம் போன்ற
நூல்களுக்கு விளக்கவுரை எழுதவும் முயலவில்லை; வடமொழி நூல் எதையும
தமிழாக்கம் செய்யவும் அவர் முனையவில்லை. நற்றமிழ் இலக்கணமாகிய நன்னூலுக்கே
அவர் உரை இயற்றத் துணிந்தார். ஆகவே வடமொழிப் புலமையும் வடநூல் பயிற்சியும்
சங்கர நமச்சிவாயருக்கு மிகுதியாக இல்லை என்பது ஒரு குறை ஆகாது. வடநூல்
உணர்ந்தார்க்கே தமிழியல்பு விளங்கும் என்பது சிவஞான முனிவர்
(தொல். விரு. பக். 47) கொள்கை. அதனால் அவர் சங்கர நமச்சிவாயரை இவ்வாறு
குறைத்து மதிப்பிடுகிறார். ஆனால் அது நடுநிலையான மதிப்பீடு அல்ல.

     சங்கர நமச்சிவாயர் வரலாற்றை விரிவாக ஆராய்ந்த சாமிநாதையர்,
“வடநூற்கடலையும் தென்றமிழ்க் கடலையும் நிலைகண்டு உணர்ந்த ஸ்ரீ சிவஞான
யோகிகள் இருமொழிக்கண்ணும் தாம் ஆராய்ந்தறிந்த அரிய விதிகளை
அமைத்தற்குத் தக்க இடம் என்று கொள்வார் ஆயின் சங்கர நமச்சிவாயருடைய
உரையின் பெருமையைக் கூற வல்லவன் யானோ?”
(1925. முகவுரை பக். 22) என்று
தமக்கே உரிய முறையில் முடிவுரை40 கூறுகிறார். அப்படி ஒன்றும் அரிய இலக்கண
விதிகளைச் சங்கர நமச்சிவாயர் உரையில் சிவஞான முனிவர் புதிதாக அமைத்துவிடவும்
இல்லை; அவற்றால் சங்கர நமச்சிவாயர் உரையின் பெருமை உயர்ந்துவிடவும் இல்லை
என்பதே உண்மை.

     ஒரு பேருரையின் நடுநடுவே முனிவர் சேர்த்தவை சிற்சில அடிக்குறிப்புகளே;
அவற்றுள்ளும் செம்பாதி பிற உரைகளிலிருந்து எடுக்கப்பட்டவை என்பது அடுத்த
பகுதியில் சான்றுகளோடு விளக்கிக் காட்டப்படும். உண்மையில், அரிய விதிகளை
அமைக்க விரும்புவோர் தனியாக உரை எழுதுவதே நேரிய முறை; சிறப்பு. அதற்குரிய
திறமையும் புலமையும் முனிவர்க்கு உண்டு. அவ்வாறு செய்யாமல் சங்கர நமச்சிவாயர்
உரையைத் திருத்தியது முனிவர் பெருமைக்குப் பொருந்தவில்லை. உண்மை இவ்வாறு
இருக்கவும் நன்னூல் முழுவதற்கும் சிவஞான முனிவர் புத்தம் புதிய உரை ஒன்றை
இயற்றிவிட்டதுபோல் இலக்கிய வரலாறுகள் அவரைப் போற்றுவது விளங்கவில்லை.
சங்கர நமச்சிவாயர் உரையோடு சிவஞான முனிவர் வலிந்து கொண்ட தொடர்பால
சிறப்பும் சீர்மையும் சிவஞான முனிவருக்கே பெருகின; சங்கர நமச்சிவாயருக்கு அல்ல.
இக்கருத்தை ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தத் தயங்கிவிட்டனர்.
------------------------------
     40ச. தண்டபாணி தேசிகர் (நன்னூல் விருத்தியுரை, திருவாவடுதுறை, 1957.
பக். 23), க. ப. அறவாணன் (1977. பக். 160), கி. நாச்சிமுத்து (1986. பக். 72),
க. விநாயகம் (சிவஞான முனிவர் உரைத்திறன், மயிலம், 1991. பக். 18)
முதலியோரும் இக்கருத்தை எடுத்து எழுதுவார்கள்.