பி. இ. நூ. நேமி. 592 விரைவாம் கதழ்வும் துனைவும். இல. வி. 2817. கதழ்வும் துனைவும் விரைவு காட்டலும். இளம் வ-று : 1 ‘அண்டர் கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்’ (குறுந். 117) என்றக்கால், விரையுந் துறைவன் என்பதாம். 2 ‘துனைபறை நிவக்கும் புள்ளின்மான’ (மலைபடு.55) என்றக்கால், விரைந்து பறக்கும் என்றவாறாம். சேனா இ-ள் : ‘கதழ்பரி நெடுந்தேர்’ (நற். 203) எனவும், துனைபறை நிவக்கும் புள்ளின்மான’ (மலைபடு. 55) எனவும், கதழ்வும் துனைவும் விரைவாகிய குறிப்புணர்த்தும், எ-று. தெய். இ-ள் : கதழ்வு என்னும் சொல்லும் துனைவு என்னும் சொல்லும் விரைவு என்பதன் பொருள்படும், எ-று. 3கதழ், துனை என்னும் சொற்களை இனிது விளக்குதற்குப் பெயராக்கி ஓதினார். மேற்சொல்லப்பட்டவற்றினும், இனி வருவனவற்றினும் 4குறைச் சொல்லாகி இவ்வாறு வருவன அறிந்து கொள்க.
1. பொருள் : இடையராற் பிணிக்கப்பட்ட கயிற்றை அறுத்துச் செல்லும் எருத்தைப்போல விரைந்து செல்லுதற்கிடமாகிய கடல் துறைவன். 2. பொருள் : விரைந்த பறத்தல் தொழிலில் ஓங்கும் பறவைத் திரள் போல. 3. கதழ், துனை என்பனவே உரிச்சொற்கள். அவற்றை தொழிற்பெயர் விகுதியாகிய ‘வு’ என்பதைச் சேர்த்துக் கதழ்வு, துனைவு என ஓதினார்ஆசிரியர். 4. குறைச்சொல்லாகி இவ்வாறு வருவன-உரிச்சொல்லாகி இவ்வாறு தொழிற்பெயர்ப்படுத்து வருவன. |