தொடக்கம்   முகப்பு
151 - 160 வெள்ளாங்குருகுப்பத்து
151
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
மிதிப்ப, நக்க கண் போல் நெய்தல்
கள் கமழ்ந்து ஆனாத் துறைவற்கு
5
நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே.
வாயில் வேண்டிய தோழிக்கு தலைமகள் வாயில் மறுப்பாள் சொல்லியது. 1
152
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
கையறுபு இரற்று கானல்அம் புலம்பந்
துறைவன் வரையும் என்ப;
5
அறவன் போலும்; அருளுமார் அதுவே.
தலைமகள் வாயில் மறுத்துழி, 'இவன் நின்மேல் தொடர்ச்சியில் குறைவிலன்; அருளும் உடையான்; ஆதலால் நீ இவனோடு புலத்தல் தகாது' என நெருங்கி, வாயில் நேர்விக்கும் தோழிக்கு அவள் சொல்லியது. 2
153
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
உளர, ஒழிந்த தூவி குவவு மணல்
போர்வில் பெறூஉம் துறைவன் கேண்மை
5
நல்நெடுங் கூந்தல் நாடுமோ மற்றே?
பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிய தலைமகன் கேட்குமாற்றால் வாயிலாய்ப் புகுந்தாற்குத் தோழி கூறியது. 3
154
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
கானல் சேக்கும் துறைவனோடு
யான் எவன் செய்கோ? பொய்க்கும் இவ் ஊரே?
தோழி வாயில் வேண்டி நெருங்கியவழி, வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது. 4
155
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
பதைப்ப, ததைந்த நெய்தல் கழிய
ஓதமொடு பெயரும் துறைவற்குப்
5
பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென், யானே!
பல வழியானும் வாயில் நேராளாகிய தலைமகள், 'மகப் பேற்றிற்கு உரித்தாகிய காலம் கழிய ஒழுகுகின்றாய்' என நெருங்கிய தோழிக்குச் சொல்லியது. 5
156
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
பதைப்ப, ஒழிந்த செம் மறுத் தூவி
தெண் கழிப் பரக்கும் துறைவன்
5
எனக்கோ காதலன்; அனைக்கோ வேறே!
பரத்தையிடத்து வாயில் விட்டு ஒழுகுகின்ற தலைமகனது வாயிலாய் வந்தார்க்குத் தோழி வாயில் மறுத்தது. 6
157
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
காலை இருந்து மாலைச் சேக்கும்
தெண் கடற் சேர்ப்பனொடு வாரான்,
5
தான் வந்தனன், எம் காதலோனே!
பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டி ஒழுகுகின்ற தலைமகன், 'புதல்வன் வாயிலாக வரும்' எனக் கேட்டு, அஞ்சிய தலைமகள் புதல்வன் விளையாடித் தனித்து வந்துழிச் சொல்லியது. 7
158
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
கானல்அம் பெருந் துறைத் துணையொடு கொட்கும்
தண்ணம் துறைவ! கண்டிகும்,
5
அம் மா மேனி எம் தோழியது துயரே.
பரத்தை புலந்துழிப் புலவி நீக்குவானாய், அஃது இடமாக வந்தமை அறிந்த தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. 8
159
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
பசி தின, அல்கும் பனி நீர்ச் சேர்ப்ப!
நின் ஒன்று இரக்குவென் அல்லேன்;
5
தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே?
மறாமற்பொருட்டு உண்டிக் காலத்து வாயில் வேண்டி வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 9
160
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
நொந்ததன் தலையும் நோய் மிகும் துறைவ!
பண்டையின் மிகப் பெரிது இனைஇ,
5
முயங்குமதி, பெரும! மயங்கினள் பெரிதே!
புலந்த காதல் பரத்தை புலவி தீராது தலைமகன் வாயில் வேண்டி வந்தான் என்றது அறிந்த தலைமகள் வாயில் மறுத்தது. 10
மேல்