தொடக்கம்   முகப்பு
371 - 380 மகட்போக்கியவழித்தாயிரங்குபத்து
371
மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர் நெடுங் குன்றம் படு மழை தலைஇச்
சுரம் நனி இனிய ஆகுக தில்ல
'அறநெறி இது' எனத் தெளிந்த என்
பிறை நுதல் குறுமகள் போகிய சுரனே! 1
 
372
என்னும் உள்ளினள்கொல்லோ தன்னை
நெஞ்சு உணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு,
அழுங்கல் மூதூர் அலர் எழ,
செழும் பல் குன்றம் இறந்த என் மகளே? 2
 
373
நினைத்தொறும் கலிழும் இடும்பை எய்துக
புலிக் கோள் பிழைத்த கவைக் கோட்டு முது கலை
மான்பிணை அணைதர, ஆண் குரல் விளிக்கும்
வெஞ் சுரம் என் மகள் உய்த்த
5
அம்பு அமை வல் வில் விடலை தாயே!
தலைமகளைத் தலைமகன் கொண்டு கழிந்த கொடுமை நினைந்து, நற்றாய் சொல்லியது. 3
 
374
பல் ஊழ் நினைப்பினும், நல்லென்று ஊழ
மீளி முன்பின் காளை காப்ப,
முடி அகம் புகாஅக் கூந்தலள்
கடுவனும் அறியாக் காடு இறந்தோளே.
தலைமகள் உடன்போயவழி, அவள் இளமை நினைந்து இரங்கித் தாய் கூறியது. 4
 
375
'இது என் பாவைக்கு இனிய நன் பாவை;
இது என் பைங்கிளி எடுத்த பைங்கிளி;
இது என் பூவைக்கு இனிய சொல் பூவை' என்று,
அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல்
5
காண்தொறும் காண்தொறும் கலங்க,
நீங்கினளோ என் பூங் கணோளே?
சேரியும் அயலும் தேடிக் காணாது வந்தாரைக் கண்டு தலைமகள் தாய் சொல்லியது. 5
 
376
நாள்தொறும் கலிழும் என்னினும் இடை நின்று
காடு படு தீயின் கனலியர் மாதோ
நல் வினை நெடு நகர் கல்லெனக் கலங்க,
பூப் புரை உண்கண் மடவரல்
5
போக்கிய புணர்த்த அறன் இல் பாலே!
தலைமகள் போயவழி, நற்றாய் விதியை வெகுண்டு சொல்லியது. 6
 
377
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்
சென்றனள் மன்ற, என் மகளே
பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே.
தலைமகள் உடன்போயவழி, அவள் பந்து முதலாகிய கண்ட நற்றாய் கலங்கிச் சொல்லியது. 7
 
378
செல்லிய முயலிப் பாஅய சிறகர்
வாவல் உகக்கும் மாலை, யாம் புலம்பப்
போகிய அவட்கோ நோவேன்; தே மொழித்
துணை இலள் கலிழும் நெஞ்சின்
5
இணை ஏர் உண்கண் இவட்கு நோவதுவே.
தலைமகள் உடன்போயவழி, அவள் தோழி ஆற்றாமை கண்ட நற்றாய் சொல்லியது. 8
 
379
தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியின்
இனிது ஆம்கொல்லோ தனக்கே பனி வரை
இனக் களிறு வழங்கும் சோலை
வயக்குறு வெள் வேலவற் புணர்ந்து செலவே?
புணர்ந்து உடன்போகியவழி, தோழி அறத்தொடு நிற்பக் கேட்ட நற்றாய், 'அதனை முன்னே அறிவித்து, நாம் மணம் புணர்த்த ஒழுகாது போயினள்' என நொந்து சொல்லியது. 9
 
380
அத்த நீள் இடை அவனொடு போகிய
முத்து ஏர் வெண் பல் முகிழ் நகை மடவரல்
தாயர் என்னும் பெயரே வல்லாறு
எடுத்தேன் மன்ற, யானே;
5
கொடுத்தோர் மன்ற, அவள் ஆயத்தோரே.
தலைமகள் உடன்போகியவழித் தெருட்டுவார்க்குச் செவிலித்தாய் சொல்லியது. 10
 
மேல்