தொடக்கம்   முகப்பு
புன்னை
103
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
இவட்கு அமைந்தனனால் தானே;
தனக்கு அமைந்தன்று, இவள் மாமைக் கவினே.
அறத்தொடு நின்ற தோழி, வதுவை நிகழாநின்றுழி, தாய்க்குக் காட்டி உவந்து சொல்லியது. 3

 
110
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னை
பொன் நிறம் விரியும் பூக் கெழு துறைவனை
'என்னை' என்றும், யாமே; இவ் ஊர்
பிறிது ஒன்றாகக் கூறும்;
5
ஆங்கும் ஆக்குமோ, வாழிய, பாலே?
நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10

 
117
அம்ம வாழி, தோழி! நலனே
இன்னது ஆகுதல் கொடிதே! புன்னை
அணி மலர் துறைதொறும் வரிக்கும்
மணி நீர்ச் சேர்ப்பனை மறவாதோர்க்கே.
வரையாது வந்து ஒழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 7

 
132
அம்ம வாழி, பாண! புன்னை
அரும்பு மலி கானல் இவ் ஊர்
அலர் ஆகின்று, அவர் அருளுமாறே.
வாயில் வேண்டி வந்த பாணன், 'நீர் கொடுமை கூற வேண்டா; நும்மேல் அருள் உடையர்' என்றாற்குத் தலைமகள் சொல்லியது. 2

 
161
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
கருங் கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்
பயந்து நுதல் அழியச் சாஅய்,
நயந்த நெஞ்சம் நோய்ப்பாலஃதே!
ஒருவழித் தணந்துழி ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாளாய்ச் சொல்லியது. 1

 
169
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
ஒள் இணர் ஞாழல் முனையின், பொதி அவிழ்
புன்னைஅம் பூஞ் சினைச் சேக்கும் துறைவன்
நெஞ்சத்து உண்மை அறிந்தும்,
5
என் செயப் பசக்கும் தோழி! என் கண்ணே?
காதல் பரத்தையை விட்டு மற்றொருத்தியுடன் ஒழுகாநின்ற தலைமகன் வாயில் வேண்டி விடுத்துழி, வாயில் நேர்தல் வேண்டி, 'நின் கண் பசந்தனகாண்' என்று முகம்புகு தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 9

 
189
புன்னை நுண் தாது உறைத்தரு நெய்தல்
பொன்படு மணியின் பொற்பத் தோன்றும்
மெல்லம் புலம்பன் வந்தென,
நல்லஆயின தோழி! என் கண்ணே.
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வரைவான் வந்துழிக் கண்டு உவகையோடு வந்த தோழி, 'நின் கண் மலர்ச்சிக்குக் காரணம் என்?' என்று வினாவிய தலைவிக்குத் சொல்லியது. 9

 
மேல்