தொடக்கம்   முகப்பு
ஞாழல்
103
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
இவட்கு அமைந்தனனால் தானே;
தனக்கு அமைந்தன்று, இவள் மாமைக் கவினே.
அறத்தொடு நின்ற தோழி, வதுவை நிகழாநின்றுழி, தாய்க்குக் காட்டி உவந்து சொல்லியது. 3

 
141
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண் துளி வீசிப்
பசலை செய்தன பனி படு துறையே.
வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றாளாகின்ற தலைமகள், 'அவன் வரைதற்குப் பிரியவும், நீ ஆற்றாய் ஆகின்றது என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது. 1

 
146
எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர்
நறிய கமழும் துறைவற்கு
இனியமன்ற என் மாமைக் கவினே.
வரைவு கடாவவும் வரையாது ஒழுகுகின்றுழி, நம்மை எவ்வகை நினைத்தார் கொல்லோ?' என்று ஐயுற்றிருந்த தலைமகள் வரைவு தலைவந்துழித் தோழிக்குச் சொல்லியது. 6

 
147
எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர்
ஒண் தழை அயரும் துறைவன்
'தண் தழை விலை' என நல்கினன், நாடே.
சுற்றத்தார் வேண்டிய கொடுத்துத் தலைமகன் வரைவு மாட்சிப்படுத்தமை அறிந்த தோழி உவந்த உள்ளத்தாளாய்த் தலைமகட்குச் சொல்லியது. 7

 
149
எக்கர் ஞாழல் பூவின் அன்ன
சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு
அணங்கு வளர்த்து, அகறல் வல்லாதீமோ!
வரைந்து எய்திய தலைமகன் தலைவியோடு பள்ளியிடத்து இருந்துழித் தோழி வாழ்த்தியது. 9

 
150
எக்கர் ஞாழல் நறு மலர்ப் பெருஞ் சினைப்
புணரி திளைக்கும் துறைவன்
புணர்வின் இன்னான்; அரும் புணர்வினனே.
முன் ஒருகால் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பிரிந்து வந்துழி அவனை முயங்காளாக, தோழி, 'நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?' என்று வினவியவழி, தலைமகள் தோழிக்குத் தலைமகன் கேட்பச் சொல்லியது. 10

 
169
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
ஒள் இணர் ஞாழல் முனையின், பொதி அவிழ்
புன்னைஅம் பூஞ் சினைச் சேக்கும் துறைவன்
நெஞ்சத்து உண்மை அறிந்தும்,
5
என் செயப் பசக்கும் தோழி! என் கண்ணே?
காதல் பரத்தையை விட்டு மற்றொருத்தியுடன் ஒழுகாநின்ற தலைமகன் வாயில் வேண்டி விடுத்துழி, வாயில் நேர்தல் வேண்டி, 'நின் கண் பசந்தனகாண்' என்று முகம்புகு தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 9

 
மேல்