தொடக்கம் முகப்பு
குறிஞ்சி
 
201
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! என்னை
தானும் மலைந்தான்; எமக்கும் தழை ஆயின;
பொன் வீ மணி அரும்பினவே
என்ன மரம்கொல், அவர் சாரலவ்வே!
நொதுமலர் வரைவின்கண் செவிலி கேட்குமாற்றால் தலைமகள் தோழிக்கு அறத்தொடுநிலை குறித்து  த்தது. 1
 

 
202
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
குடுமித் தலைய மன்ற
நெடு மலை நாடன் ஊர்ந்த மாவே.
தலைமகன் வரைதல் வேண்டித் தானே வருகின்றமை கண்ட தோழி உவந்த உள்ளத்தளாய்த் தலைமகட்குக் காட்டிச் சொல்லியது. 2
 

 
203
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைத்
தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு
உவலைக் கூவல் கீழ
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே.
உடன்போய் மீண்ட தலைமகள், 'நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; நீ எங்ஙனம் நுகர்ந்தாய்?' எனக் கேட்ட தோழிக்குக் கூறியது. 3
 

 
204
அன்னாய், வாழி, வேண்டு, அன்னை! அஃது எவன்கொல்?
வரையர மகளிரின் நிரையுடன் குழீஇ,
பெயர்வுழிப் பெயர்வுழித் தவிராது நோக்கி,
நல்லள் நல்லள் என்ப;
5
தீயேன் தில்ல, மலை கிழவோற்கே!
வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4
 

 
205
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! என் தோழி
நனி நாண் உடையள்; நின்னும் அஞ்சும்;
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்
மலர்ந்த மார்பின் பாயல்
5
தவ நனி வெய்யள்; நோகோ; யானே.
நொதுமலர் வரைவு வேண்டி விட்டுழித் தலைமகட்கு உளதாகிய வருத்தம் நோக்கி, 'இவள் இவ்வாறு ஆதற்குக் காரணம் என்னை?' என்று வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. 5
 

 
206
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! உவக்காண்
மாரிக் குன்றத்துக் காப்பாள் அன்னன்;
தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள்,
பாசி சூழ்ந்த பெருங் கழல்,
5
தண் பனி வைகிய வரிக் கச்சினனே!
இரவுக்குறிக்கண் தலைமகன் வந்து குறியிடத்து நின்றமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 6
 

 
207
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நன்றும்
உணங்கல கொல்லோ, நின் தினையே? உவக்காண்
நிணம் பொதி வழுக்கின் தோன்றும்,
மழை தலைவைத்து, அவர் மணி நெடுங் குன்றே.
'மழையின்மையால் தினை உணங்கும்; விளையமாட்டா; புனங்காப்பச் சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று' என வெறுத்திருந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. 7
 

 
208
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! கானவர்
கிழங்கு அகழ் நெடுங் குழி மல்க வேங்கைப்
பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு,
மணி நிற மால் வரை மறைதொறு, இவள்
5
அறை மலர் நெடுங் கண் ஆர்ந்தன பனியே.
செவிலிக்கு அறத்தொடு நின்ற தோழி, அவளால் வரைவு மாட்சிமைப் பட்ட பின்பு, 'இவள் இவ்வாறு பட்ட வருத்தம் எல்லாம் நின்னின் தீர்ந்தது' என்பது குறிப்பின் தோன்ற அவட்குச் சொல்லியது. 8
 

 
209
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நீ மற்று
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின்,
கொண்டல் அவரைப் பூவின் அன்ன
வெண் தலை மா மழை சூடி,
5
தோன்றல் ஆனாது, அவர் மணி நெடுங் குன்றே.
வரைவிடை வைத்துப்பிரிவின்கண் அவனை நினைவு விடாது ஆற்றாளாகியவழி, 'சிறிது மறந்து ஆற்ற வேண்டும்' என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 9
 

 
210
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைப்
புலவுச் சேர் துறுகல் ஏறி, அவர் நாட்டுப்
பூக் கெழு குன்றம் நோக்கி நின்று,
மணி புரை வயங்கு இழை நிலைபெறத்
5
தணிதற்கும் உரித்து, அவள் உற்ற நோயே.
காப்பு மிகுதிக்கண் தலைமகள் மெலிவுகண்டு, 'தெய்வத்தினான் ஆயிற்று' என்று வெறியெடுப்புழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10
 

 
211
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன
வயலைஅம் சிலம்பின் தலையது
செயலைஅம் பகைத் தழை வாடும் அன்னாய்!
தலைமகன் ஆற்றாமை கண்டு, கையுறை ஏற்ற தோழி தலைமகள் தழை ஏற்க வேண்டிக் கூறியது. 1
 

 
212
சாத்த மரத்த பூழில் எழு புகை
கூட்டு விரை கமழும் நாடன்
அறவற்கு எவனோ, நாம் அகல்வு? அன்னாய்!
வரைவு எதிர்கொள்ளார் தமர் அவண் மறுத்தவழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 2
 

 
213
நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்ந்த
ஈர்ந் தண் பெரு வடு, பாலையில், குறவர்,
உறை வீழ் ஆலியின், தொகுக்கும் சாரல்
மீமிசை நல் நாட்டவர் வரின்,
5
யான் உயிர் வாழ்தல் கூடும் அன்னாய்!
வரைவொடு வருதலைத் துணிந்தான் என்பது தோழி கூறக் கேட்ட தலைமகள் சொல்லியது. 3
 

 
214
சாரல் பலவின் கொழுந் துணர் நறும் பழம்
இருங் கல் விடர் அளை வீழ்ந்தென, வெற்பில்
பெருந்தேன் இறாஅல் சிதறும் நாடன்,
பேர் அமர் மழைக் கண் கலிழ, தன்
5
சீருடை நல் நாட்டுச் செல்லும் அன்னாய்!
தலைமகன், 'ஒருவழித் தணப்பல்' என்று கூறியவதனை அவன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. 4
 

 
215
கட்டளை அன்ன மணி நிறத் தும்பி,
இட்டிய குயின்ற துளைவயின் செலீஇயர்,
தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்
தீம் குழல் ஆம்பலின், இனிய இமிரும்
5
புதல் மலர் மாலையும் பிரிவோர்
அதனினும் கொடிய செய்குவர் அன்னாய்!
இரவுக்குறி நயந்த தலைமகள், பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லியது. 5
 

 
216
குறுங் கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை,
நெடும் புதல் கானத்து மடப் பிடி ஈன்ற
நடுங்கு நடைக் குழவி கொளீஇய, பலவின்
பழம் தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்கு,
5
கொய்தரு தளிரின் வாடி, நின்
மெய் பிறிதாதல் எவன்கொல்? அன்னாய்!
வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி கூறியது. 6
 

 
217
பெரு வரை வேங்கைப் பொன் மருள் நறு வீ
மான் இனப் பெருங் கிளை மேயல் ஆரும்
கானக நாடன் வரவும், இவள்
மேனி பசப்பது எவன்கொல்? அன்னாய்!
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீட்சி உணர்ந்த தோழி ஆற்றாளாகிய தலைமகட்குச் சொல்லியது. 7
 

 
218
நுண் ஏர் புருவத்த கண்ணும் ஆடும்;
மயிர் வார் முன்கை வளையும் செறூஉம்;
களிறு கோள் பிழைத்த கதம் சிறந்து எழு புலி
எழுதரு மழையின் குழுமும்
5
பெருங் கல் நாடன் வரும்கொல்? அன்னாய்!
தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அது கேட்டு, 'இஃது என் ஆம் கொல்?' என்று ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி தனக்கு நற்குறி செய்யக்கண்டு, 'கடிதின் வந்து வரைவான்' எனச் சொல்லியது. 8
 

 
219
கருங் கால் வேங்கை மாத் தகட்டு ஒள் வீ
இருங் கல் வியல் அறை வரிப்பத் தாஅம்
நல் மலை நாடன் பிரிந்தென,
ஒள் நுதல் பசப்பது எவன்கொல்? அன்னாய்!
வரைவிடை வைத்துப் பிரிந்த அணுமைக்கண்ணே ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி கூறியது. 9
 

 
220
அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி
ஆடுகழை அடுக்கத்து இழிதரு நாடன்
பெரு வரை அன்ன திரு விறல் வியல் மார்பு
முயங்காது கழிந்த நாள், இவள்
5
மயங்கு இதழ் மழைக்கண் கலிழும் அன்னாய்!
நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10
 

 
221
அம்ம வாழி, தோழி! காதலர்
பாவை அன்ன என் ஆய்கவின் தொலைய,
நல் மா மேனி பசப்ப,
செல்வல்' என்ப தம் மலை கெழு நாட்டே.
'ஒருவழித் தணந்து வரைதற்கு வேண்டுவன முடித்து வருவல்' என்று தலைமகன் கூறக்கேட்ட தலைமகள் அவன் சிறைப்புறத்தானாய்க் கேட்ப, தோழிக்குச்சொல்லியது. 1
 

 
222
அம்ம வாழி, தோழி! நம் ஊர்
நளிந்து வந்து உறையும் நறுந் தண் மார்பன்
இன்னினி வாராமாறுகொல்
சில் நிரை ஓதி! என் நுதல் பசப்பதுவே?
குறி இரண்டன்கண்ணும் வந்தொழுகும் தலைமகன் இடையிட்டு வந்து, சிறைப்புறத்து நின்றுழி, 'நின் நுதல் பசத்தற்குக் காரணம் என்னை?' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 2
 

 
223
அம்ம வாழி, தோழி! நம் மலை
வரை ஆம் இழிய, கோடல் நீட,
காதலர்ப் பிரிந்தோர் கையற, நலியும்
தண் பனி வடந்தை அற்சிரம்
5
முந்து வந்தனர் நம் காதலோரே.
வரைவிடை வைத்துப்பிரிந்த தலைமகன் குறித்த பருவத்திற்கு முன்னே வருகின்றமை அறிந்த தோழி தலைமகட்கு மகிழ்ந்து சொல்லியது. 3
 

 
224
அம்ம வாழி, தோழி! நம் மலை
மணி நிறம் கொண்ட மா மலை வெற்பில்
துணி நீர் அருவி நம்மோடு ஆடல்
எளிய மன்னால், அவர்க்கு; இனி,
5
அரிய ஆகுதல் மருண்டனென், யானே,
இற்செறிப்பு உணர்ந்த தலைமகள் ஆற்றாளாய், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது. 4
 

 
225
அம்ம வாழி, தோழி! பைஞ் சுனைப்
பாசடை நிவந்த பனி மலர்க் குவளை
உள்ளகம் கமழும் கூந்தல் மெல்லியல்
ஏர் திகழ் ஒள் நுதல் பசத்தல்
5
ஓரார்கொல் நம் காதலோரே?
மெலிவு கூறி வரைவு கடாவக் கேட்ட தலைமகன் தான் வரைதற்பொருட்டால் ஒருவழித் தணந்து நீட்டித்தானாக, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி கூறியது. 5
 

 
226
அம்ம வாழி,தோழி!நம் மலை
நறுந்தண் சிலம்பின் நாறு குலைக் காந்தள்
கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி, நின்
வன்புடை விறல் கவின் கொண்ட
5
அன்பிலாளன் வந்தனன், இனியே.
வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் நீட்டித்து வந்துழித் தோழி தலைமகட்குச் சொல்லியது. 6

 
227
அம்ம வாழி! தோழி! நாளும்,
நல் நுதல் பசப்பவும், நறுந் தோள் ஞெகிழவும்,
'ஆற்றலம் யாம்' என மதிப்பக் கூறி,
நப் பிரிந்து உறைந்தோர் மன்ற; நீ
5
விட்டனையோ அவர் உற்ற சூளே?
ஒருவழித் தணந்து வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. 7
 

 
228
அம்ம வாழி, தோழி! நம் ஊர்
நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன்
இரந்து குறையுறாஅன் பெயரின்,
என் ஆவதுகொல் நம் இன் உயிர் நிலையே?
தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி அறத்தொடு நின்றது. 8

 
229
அம்ம வாழி, தோழி! நாம் அழப்
பல் நாள் பிரிந்த அறனிலாளன்
வந்தனனோ, மற்று இரவில்?
பொன் போல் விறல் கவின் கொள்ளும், நின் நுதலே.
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீண்டான் என்பது கேட்டு, தலைமகட்கு எய்திய கவினைத் தோழி, தான் அறியாதாள் போன்று, அவளை வினாவியது. 9
 

 
230
அம்ம வாழி, தோழி! நம்மொடு
சிறு தினைக் காவலன் ஆகி, பெரிதும் நின்
மென் தோள் ஞெகிழவும், திரு நுதல் பசப்பவும்,
பொன் போல் விறல் கவின் தொலைத்த
5
குன்ற நாடற்கு அயர்வர் நன் மணனே.
தலைமகன் வரைவு வேண்டித் தமரை விடுத்துழி, மறுப்பர்கொல்லோ? என்று அச்சம் உறுகின்ற தலைவிக்குத் தோழி சொல்லியது. 10
 

 
231
யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப!
இரும் பல் கூந்தல் திருந்துஇழை அரிவை
திதலை மாமை தேயப்
பசலை பாயப் பிரிவு? தெய்யோ!
ஒருவழித் தணந்து வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 1
 

 
232
போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க
ஏதிலாட்டியை நீ பிரிந்ததற்கே,
அழல் அவிர் மணிப்பூண் நனையப்
பெயல்ஆனா, என் கண்ணே தெய்யோ!
ஒருவழித் தணந்து வந்த தலைமகன் 'நான் பிரிந்த நாட்கண் நீர் என் செய்தீர்?' எனக் கேட்க, தோழி அவற்குச் சொல்லியது. 2
 

 
233
வருவைஅல்லை; வாடை நனி கொடிதே
அரு வரை மருங்கின் ஆய்மணி வரன்றி,
ஒல்லென இழிதரும் அருவி நின்
கல்லுடை நாட்டுச் செல்லல் தெய்யோ!
ஒருவழித் தணந்து வரைய வேண்டும் என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. 3
 

 
234
'மின் அவிர் வயங்குஇழை ஞெகிழச் சாஅய்,
நன்னுதல் பசத்தல் யாவது?' துன்னிக்
கனவில் காணும் இவளே
நனவில் காணாள், நின் மார்பே தெய்யோ!'
இடைவிடாது வந்தொழுகாநின்றே களவு நீடாமல் வரைதற்கு முயல்கின்ற தலைமகன் தலைமகள் வேறுபாடு கண்டு, 'இதற்குக் காரணம் என்?' என்று வினாவியவழி, 'நின்னைக் கனவில் கண்டு, விழித்துக் காணாளாய் வந்தது' எனத் தோழி சொல்லி வரைவு முடுக்
 

 
235
கையற வீழ்ந்த மை இல் வானமொடு
அரிது காதலர்ப் பொழுதே; அதனால்,
தெரிஇழை தெளிர்ப்ப முயங்கி,
பிரியலம் என்கமோ? எழுகமோ? தெய்யோ!
உடன்போக்கு நேர்வித்த பின்பு தலைமகன் உடன்கொண்டு போவான் இடை யாமத்து வந்துழி, தலைமகட்குத் தோழி சொல்லியது. 5
 

 
236
அன்னையும் அறிந்தனள்; அலரும் ஆயின்று;
நல் மனை நெடு நகர் புலம்பு கொள உறுதரும்,
இன்னா வாடையும் மலையும்;
நும் ஊர்ச் செல்கம்; எழுகமோ? தெய்யோ!
களவொழுக்கம் வெளிப்பட்டமையும் தம் மெலிவும் உணர்த்தி, தோழி உடன்போக்கு நயந்தாள் போன்று, வரைவு கடாயது. 6
 

 
237
காமம் கடவ, உள்ளம் இனைப்ப,
யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின்,
ஓங்கித் தோன்றும் உயர் வரைக்கு
யாங்கு எனப்படுவது, நும் ஊர்? தெய்யோ!
அல்லகுறிப்பட்டு நீங்கிய தலைமகனை வந்திலனாகக் கொண்டு, அவன் பின்பு வந்துழி, அவற்குத் தோழி சொல்லியது. 7
 

 
238
வார் கோட்டு வயத் தகர் வாராது மாறினும்,
குரு மயிர்ப் புருவை நசையின் அல்கும்
மாஅல் அருவித் தண் பெருஞ் சிலம்ப!
நீ இவண் வரூஉம்காலை,
5
மேவரும் மாதோ, இவள் நலனே தெய்யோ!
வரையாது வந்தொழுகும் தலைமகனுக்கு, 'இவள் கவின் நீ வந்த காலத்து வருதலால், நீ போன காலத்து அதன் தொலைவு உனக்கு அறியப்படாது' எனத் தோழி சொல்லி, வரைவு கடாயது. 8
 

 
239
சுரும்பு உணக் களித்த புகர் முக வேழம்
இரு பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம் நின்
குன்று கெழு நல் நாட்டுச் சென்ற பின்றை,
நேர் இறைப் பணைத் தோள் ஞெகிழ,
5
வாராய்ஆயின், வாழேம் தெய்யோ!
'வரைவிடை வைத்துப் பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி கூறியது. 9
 

 
240
அறியேமஅல்லேம்; அறிந்தனம் மாதோ
பொறி வரிச் சிறைய வண்டினம் மொய்ப்பச்
சாந்தம் நாறும் நறியோள்
கூந்தல் நாறும் நின் மார்பே தெய்யோ!
தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதானமை அறிந்து தலைமகள் புலந்துவழி, அவன் அதனை 'இல்லை' என்று மறைத்தானாக, தோழி சொல்லியது. 10
 

 
241
நம் உறு துயரம் நோக்கி, அன்னை
வேலன் தந்தனள் ஆயின், அவ் வேலன்
வெறி கமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல? செறி எயிற்றோயே!
இற்செறித்தவழித் தலைமகட்கு எய்திய மெலிவு கண்டு, 'இஃது எற்றினான் ஆயிற்று?' என்று வேலனைக் கேட்பத் துணிந்துழி, அறத்தொடுநிலை துணிந்த தோழி செவிலி கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லியது. 1
 

 
242
அறியாமையின், 'வெறி' என மயங்கி,
அன்னையும் அருந் துயர் உழந்தனள்; அதனால்,
எய்யாது விடுதலோ கொடிதே நிரை இதழ்
ஆய் மலர் உண்கண் பசப்ப,
5
சேய் மலை நாடன் செய்த நோயே.
தலைமகள் அறத்தொடுநிலை நயப்ப வேண்டித் தோழி அவட்குச் சொல்லியது. 2
 

 
243
கறி வளர் சிலம்பிற் கடவுள் பேணி,
அறியா வேலன், 'வெறி' எனக் கூறும்;
அது மனம் கொள்குவை, அனை! இவள்
புது மலர் மழைக் கண் புலம்பிய நோய்க்கே.
தாயுழை அறியாமை கூறித் தோழி வெறி விலக்கியது. 3
 

 
244
அம்ம வாழி, தோழி! பல் மலர்
நறுந் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை
குன்றம் பாடான் ஆயின்,
என் பயம் செய்யுமோ வேலற்கு வெறியே?
வெறியாடல் துணிந்துழி, விலக்கலுறுந் தோழி செவிலி கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லியது. 4
 

 
245
பொய்யா மரபின் ஊர் முது வேலன்
கழங்கு மெய்ப்படுத்து, கன்னம் தூக்கி,
'முருகு' என மொழியும்ஆயின்,
கெழுதகைகொல் இவள் அணங்கியோற்கே?
தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. 5
 

 
246
வெறி செறித்தனனே, வேலன் கறிய
கல் முகை வயப் புலி கழங்கு மெய்ப்படூஉ,
..................................................................................................................
மெய்ம்மை அன்ன பெண்பாற் புணர்ந்து,
5
மன்றில் பையுள் தீரும்
குன்ற நாடன் உறீஇய நோயே.
வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாய் நின்றுழி, அவன் கேட்குமாற்றால் வெறி நிகழாநின்றமை தோழி தலைமகட்குச் சொல்லியது. 6
 

 
247
அன்னை தந்தது ஆகுவது அறிவென்:
பொன் நகர் வரைப்பில் கன்னம் தூக்கி,
'முருகு' என மொழியும் ஆயின்,
அரு வரை நாடன் பெயர்கொலோ, அதுவே?
வெறி விலக்கலுறும் தோழி தமர் கேட்பத் தலைமகளை வினவுவாளாய்ச் சொல்லியது. 7
 

 
248
பெய்ம்மணல் முற்றம் கவின் பெற இயற்றி,
மலை வான் கொண்ட சினைஇய வேலன்
கழங்கினான் அறிகுவது என்றால்,
நன்றால்அம்ம, நின்ற இவள் நலனே!
'தலைமகள் வேறுபாடு கழங்கினால் தெரியும்' என்று வேலன் கூறியவழி, அதனைப் 'பொய்' என இகழ்ந்த தோழி வெறி விலக்கிச் செவிலிக்கு அறத்தொடு நின்றது. 8
 

 
249
பெய்ம்மணல் வரைப்பில் கழங்கு படுத்து, அன்னைக்கு,
'முருகு' என மொழியும் வேலன்; மற்று அவன்
வாழிய இலங்கும் அருவிச்
சூர் மலை நாடனை அறியாதோனே!
வேலன் கூறிய மாற்றத்தை மெய்யெனக் கொண்ட தாய் கேட்பத் தலைமகட்குத் தோழி கூறியது. 9
 

 
250
பொய் படுபு அறியாக் கழங்கே! மெய்யே
மணி வரைக் கட்சி மட மயில் ஆலும் நம்
மலர்ந்த வள்ளிஅம் கானங் கிழவோன்;
ஆண்தகை விறல் வேள் அல்லன் இவள்
5
பூண் தாங்கு இளமுலை அணங்கியோனே.
'தலைமகட்கு வந்த நோய் முருகனால் வந்தமை இக் கழங்கு கூறிற்று' என்று வேலன் சொன்னான் என்பது கேட்ட தோழி அக் கழங்கிற்கு  ப்பாளாய், செவிலி கேட்குமாற்றால் அறத்தொடுநிலை குறித்துச் சொல்லியது. 10
 

 
251
குன்றக் குறவன் ஆர்ப்பின், எழிலி
நுண் பல் அழி துளி பொழியும் நாட!
நெடு வரைப் படப்பை நும் ஊர்க்
கடு வரல் அருவி காணினும் அழுமே.
வரையாது வந்தொழுகும் தலைமகற்கு வரைவு வேட்ட தோழி கூறியது. 1
 

 
252
குன்றக் குறவன் புல் வேய் குரம்பை
மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன்
புரையோன் வாழி, தோழி! விரை பெயல்
அரும் பனி அளைஇய கூதிர்ப்
5
பெருந் தண் வாடையின் முந்து வந்தனனே.
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் குறித்த பருவத்துக்கு முன்னே வந்தானாக, உவந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 2
 

 
253
குன்றக் குறவன் சாந்த நறும் புகை
தேம் கமழ் சிலம்பின் வரையகம் கமழும்
கானக நாடன் வரையின்,
மன்றலும் உடையள்கொல் தோழி! யாயே?
'வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வரைவொடு புகுதராநின்றான்' என்பது தோழி கூறக் கேட்ட தலைமகன் அவட்குச் சொல்லியது. 3
 

 
254
குன்றக் குறவன் ஆரம் அறுத்தென,
நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும்
வண்டு இமிர் சுடர் நுதல் குறுமகள்!
கொண்டனர், செல்வர் தம் குன்று கெழு நாட்டே.
உடன்போக்கு உடன்பட வேண்டிய தோழி தலைமகட்குச் சொல்லியது. 4
 

 
255
குன்றக் குறவன் காதல் மட மகள்
வரையர மகளிர்ப் புரையும் சாயலள்;
ஐயள்; அரும்பிய முலையள்;
செய்ய வாயினள்; மார்பினள், சுணங்கே.
'நின்னால் காணப்பட்டவள் எத்தன்மையள்?' என்ற பாங்கற்குத் தலைமகன் சொல்லியது. 5
 

 
256
குன்றக் குறவன் காதல் மட மகள்
வண்டு படு கூந்தல் தண் தழைக் கொடிச்சி;
வளையள்; முளை வாள் எயிற்றள்;
இளையள் ஆயினும், ஆர் அணங்கினளே.
'நீ கூறுகின்றவள் நின்னை வருத்தும் பருவத்தாள் அல்லள்' என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது. 6
 

 
257
குன்றக் குறவன் கடவுள் பேணி,
இரந்தனன் பெற்ற எல் வளைக் குறுமகள்
ஆய் அரி நெடுங் கண் கலிழ,
சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே.
'வரைவிடை வைத்துப் பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி உடன்படாது கூறியது. 7
 

 
258
குன்றக் குறவன் காதல் மட மகள்
அணி மயில் அன்ன அசை நடைக் கொடிச்சியைப்
பெரு வரை நாடன் வரையும் ஆயின்,
கொடுத்தனெம் ஆயினோ நன்றே
5
இன்னும் ஆனாது, நன்னுதல் துயரே.
வரைவு வேண்டிவிட மறுத்துழித் தமர்க்கு  ப்பாளாய், வரையாது வந்தொழுகும் தலைமகற்குத் தோழி, அவன் மலை காண்டலே பற்றாகத் தாங்கள் உயிர் வாழ்கின்றமை தோன்றச் சொல்லியது. 8
 

 
259
குன்ற குறவன் காதல் மட மகள்
மன்ற வேங்கை மலர் சில கொண்டு,
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி,
தேம் பலிச் செய்த ஈர் நறுங் கையள்;
5
மலர்ந்த காந்தள் நாறிக்
கலிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோளே.
வரையத் துணிந்த தலைமகன் வரைவு முடித்தற்குத் தலைமகள் வருந்துகின்ற வருத்தம் தோழி காட்டக் கண்டு, 'இனி அது கடுக முடியும்' என உவந்த உள்ளத்தனாய், தன்னுள்ளே சொல்லியது. 9
 

 
260
குன்றக் குறவன் காதல் மட மகள்,
மென் தோள் கொடிச்சியைப் பெறற்கு அரிது தில்ல
பைம் புறப் படு கிளி ஓப்பலர்;
புன்புல மயக்கத்து விளைந்தன தினையே!
பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி, 'இனிப் புனங்காவற்கு வாரோம்' எனக்கூறி வரைவு கடாயது. 10
 

 
261
மென் தினை மேய்ந்த தறுகண் பன்றி
வன் கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன்
எந்தை அறிதல் அஞ்சிக்கொல்?
அதுவே மன்ற வாராமையே.
அல்லகுறிப்பட்டுத் தலைமகன் நீங்கினமை அறியாதாள் போன்று தோழி, பிற்றை ஞான்று அவன் சிறைப்புறத்தானாய் நிற்ப, தலைமகட்குச் சொல்லியது. 1
 

 
262
சிறு தினை மேய்ந்த தறுகண் பன்றி
துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும்
இலங்குமலை நாடன் வரூஉம்;
மருந்தும் அறியும்கொல் தோழி! அவன் விருப்பே?
'வரைந்து கொள்ள நினைக்கிலன்' என்று வேறுபட்ட தலைமகள், 'அவன் நின்மேல் விருப்பமுடையன்; நீ நோகின்றது என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது. 2
 

 
263
நன் பொன் அன்ன புனிறு தீர் ஏனல்
கட்டளை அன்ன கேழல் மாந்தும்
குன்று கெழு நாடன் தானும்
வந்தனன்; வந்தன்று தோழி! என் நலனே!
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன், மீண்டமை அறிந்த தலைமகள், 'நீ தொலைந்த நலம் இன்று எய்திய காரணம் என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது. 3
 

 
264
இளம் பிறை அன்ன கோட்ட கேழல்
களங்கனி அன்ன பெண்பாற் புணரும்
அயம் திகழ் சிலம்ப! கண்டிகும்
பயந்தன மாதோ, நீ நயந்தோள் கண்ணே!
வரையாது வந்து ஒழுகும் தலைமகனைப் பகற்குறிக்கண்ணே எதிர்ப்பட்டுத் தோழி வரைவு கடாயது. 4
 

 
265
புலி கொல் பெண்பால் பூ வரிக் குருளை
வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும்
குன்று கெழு நாடன் மறந்தனன்
பொன்போல் புதல்வனோடு என் நீத்தோனே.
பரத்தை இடத்தானாக ஒழுகுகின்ற தலைமகன் விடுத்த வாயில்மாக்கட்குத் தலைமகள் சொல்லியது. 5
 

 
266
சிறு கண் பன்றிப் பெருஞ் சின ஒருத்தலொடு
குறுக் கை இரும் புலி பொரூஉம் நாட!
நனி நாண் உடையை மன்ற
பனிப் பயந்தன, நீ நயந்தோள் கண்ணே!
நொதுமலர் வரைவு பிறந்துழி, தலைமகட்கு உளதாகிய வேறுபாடு தோழி கூறி, தலைமகனை வரைவு கடாயது. 6
 

 
267
சிறு கண் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்
துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி,
ஐவனம் கவரும் குன்ற நாடன்
வண்டு படு கூந்தலைப் பேணி,
5
பண்பு இல சொல்லும், தேறுதல் செத்தே.
'தலைமகளைத் தலைமகன் வரைவல்' எனத் தெளித்தான் என்று அவள் கூறக் கேட்ட தோழி, அவன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. 7
 

 
268
தாஅய் இழந்த தழு வரிக் குருளையொடு
வள மலைச் சிறு தினை உணீஇ, கானவர்
வரை ஓங்கு உயர் சிமைக் கேழல் உறங்கும்
நல் மலை நாடன் பிரிதல்
5
என் பயக்குமோ நம் விட்டுத் துறந்தே?
'அவன் குறிப்பு இருந்தவாற்றால் நம்மைப் பிரிந்து வந்தல்லது வரைய மாட்டான் போன்று இருந்தது' எனத் தலைமகள் கூறக்கேட்ட தோழி, அவட்குத் தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. 8
 

 
269
கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை
விளைந்த செறுவின் தோன்றும் நாடன்
வாராது அவண் உறை நீடின் நேர் வளை
இணை ஈர் ஓதி! நீ அழ
5
துணை நனி இழக்குவென், மடமையானே.
குறை நயப்பக் கூறி தலைமகளைக் கூட்டிய தோழி, அவன் இடையிட்டு வந்து சிறைப்புறத்து நின்றுழி, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. 9
 

 
270
கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில்
தலை விளை கானவர் கொய்தனர் பெயரும்
புல்லென் குன்றத்துப் புலம்பு கொள் நெடு வரை
காணினும் கலிழும் நோய் செத்து,
5
தாம் வந்தனர், நம் காதலோரே.
வரைவு காரணமாக நெட்டிடை கழிந்து, பொருள்வயிற் போகிய தலைமகன் வந்தமை அறிந்த தோழி, உவந்த உள்ளத்தளாய், தலைமகட்குச் சொல்லியது. 10
 

 
271
அவரை அருந்த மந்தி பகர்வர்
பக்கின் தோன்றும் நாடன் வேண்டின்,
பசுப்போல் பெண்டிரும் பெறுகுவன்;
தொல் கேள் ஆகலின், நல்குமால் இவட்கே.
தலைமகன் வரைவுவேண்டிவிடத் தமர் மறுத்துழி, செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. 1
 

 
272
கரு விரல் மந்திக் கல்லா வன் பறழ்
அரு வரைத் தீம் தேன் எடுப்பி, அயலது
உரு கெழு நெடுஞ் சினைப் பாயும் நாடன்
இரவின் வருதல் அறியான்;
5
'வரும் வரும்' என்ப தோழி! யாயே.
அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் சிறைப்புறத்தானாக, முன்னை நாள் நிகழ்ந்ததனைத் தோழிக்குச் சொல்லுவாள் போன்று, தலைமகள் சொல்லியது. 2
 

 
273
அத்தச் செயலைத் துப்பு உறழ் ஒண் தளிர்
புன் தலை மந்தி வன் பறழ் ஆரும்
நல் மலை நாட! நீ செலின்,
நின் நயந்து உறைவி என்னினும் கலிழ்மே.
வரைவிடை வைத்துப் பிரியும் தலைமகன் 'நின் துணைவியை உடம்படுவித்தேன்; இனி நீயே இதற்கு உடம்படாது கலிழ்கின்றாய்' என்றாற்குத் தோழி கூறியது. 3
 

 
274
மந்திக் கணவன் கல்லாக் கடுவன்,
ஒண் கேழ் வயப்புலி குழுமலின், விரைந்து, உடன்
குன்று உயர் அடுக்கம் கொள்ளும் நாடன்
சென்றனன் வாழி, தோழி! என்
5
மென் தோள் கவினும், பாயலும், கொண்டே.
வரைவிடை வைத்துப் பிரிந்துழி, ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 4
 

 
275
குரங்கின் தலைவன் குரு மயிர்க் கடுவன்
சூரல்அம் சிறு கோல் கொண்டு, வியல் அறை
மாரி மொக்குள் புடைக்கும் நாட!
யாம் நின் நயந்தனம் எனினும், எம்
5
ஆய்நலம் வாடுமோ அருளுதி எனினே?
வரையாது வந்தொழுகும் தலைமகன் இடையிட்டு வருதலால், எதிர்ப்பாடு பெறாத தோழி குறியிடத்து எதிர்ப்பட்டு, அவன் கொடுமை கூறி, நெருங்கிச் சொல்லியது. 5
 

 
276
மந்திக் காதலன் முறி மேய் கடுவன்
தண் கமழ் நறைக் கொடி கொண்டு, வியல் அறைப்
பொங்கல் இள மழை புடைக்கும் நாட!
நயவாய்ஆயினும் வரைந்தனை சென்மோ
5
கல் முகை வேங்கை மலரும்
நல் மலை நாடன் பெண்டு எனப் படுத்தே!
வரையாது வந்தொழுகும் தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லியது. 6
 

 
277
குறவர் முன்றில் மா தீண்டு துறுகல்
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
குன்ற நாட! நின் மொழிவல்; என்றும்,
பயப்ப நீத்தல் என் இவள்
5
கயத்து வளர் குவளையின் அமர்த்த கண்ணே.
வரையாது வந்தொழுகும் தலைமகன் புணர்ந்து நீங்குழி, எதிர்ப்பட்ட தோழி வரைவு கடாயது. 7
 

 
278
சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்
குரங்கின் வன் பறழ் பாய்ந்தென, இலஞ்சி
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன்
உற்றோர் மறவா நோய் தந்து,
5
கண்டோர் தண்டா நலம் கொண்டனனே!
வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 8
 

 
279
கல் இவர் இற்றி புல்லுவன ஏறிக்
குளவி மேய்ந்த மந்தி துணையொடு
வரைமிசை உகளும் நாட! நீ வரின்,
கல் அகத்தது எம் ஊரே;
5
அம்பல் சேரி அலர் ஆங்கட்டே.
இரவுக்குறி வேண்டும் தலைமகனைத் தோழி வரவு அருமை கூறி மறுத்தது. 9
 

 
280
கரு விரல் மந்திக் கல்லா வன் பார்ப்பு
இரு வெதிர் ஈர்ங் கழை ஏறி, சிறு கோல்
மதி புடைப்பது போல் தோன்றும் நாட!
வரைந்தனை நீ எனக் கேட்டு யான்
5
 த்தனென்அல்லெனோ அஃது என் யாய்க்கே?
புணர்ந்து உடன்போகிய தலைமகன் தலைமகளைக் கரண வகையான் வரைந்தானாக, எதிர் சென்ற தோழிக்கு, 'இனி யான் இவளை வரைந்தமை நுமர்க்கு உணர்த்த வேண்டும்' என்றானாக, அவள் சொல்லியது. 10
 

 
281
வெள்ள வரம்பின் ஊழி போகியும்
கிள்ளை வாழிய, பலவே ஒள் இழை
இரும் பல் கூந்தல் கொடிச்சி
பெருந் தோள் காவல் காட்டியவ்வே.
ஆயத்தோடு விளையாட்டு விருப்பினால் பொழிலகம் புகுந்த தலைவியை எதிர்ப்பட்டு ஒழுகுகின்ற தலைமகன், அவள் புனங்காவற்கு உரியளாய் நின்றது கண்டு, மகிழ்ந்து சொல்லியது. 1
 

 
282
சாரல் புறத்த பெருங் குரல் சிறு தினைப்
பேர் அமர் மழைக்கண் கொடிச்சி கடியவும்
சோலைச் சிறு கிளி உன்னும் நாட!
ஆர் இருள் பெருகின; வாரல்
5
கோட்டு மா வழங்கும் காட்டக நெறியே.
இரவுக்குறி நேர்ந்த தோழி தலைமகன் வந்து புணர்ந்து நீங்குழி, அவனை எதிர்ப்பட்டுச் சொல்லியது. 2
 

 
283
வன்கட் கானவன் மென் சொல் மட மகள்
புன்புல மயக்கத்து உழுத ஏனல்
பைம் புறச் சிறு கிளி கடியும் நாட!
பெரிய கூறி நீப்பினும்,
5
பொய்வலைப் படூஉம் பெண்டு தவப் பலவே.
தோழி வாயில் மறுக்கவும், தலைமகன் ஆற்றாமை கண்டு, தலைமகள் வாயில் நேர, அவன் பள்ளியிடத்தானாய் இருந்துழிப் புக்க தோழி கூறியது. 3
 

 
284
அளியதாமே, செவ் வாய்ப் பைங் கிளி
குன்றக் குறவர் கொய் தினைப் பைங் கால்
இருவி நீள்புனம் கண்டும்.
பிரிதல் தேற்றாப் பேர் அன்பினவே.
தினை அரிந்துழி, கிளியை நோக்கிக் கூறுவாள் போல், சிறைப்புறமாக ஒம்படுத்தது. 4
 

 
285
பின் இருங் கூந்தல் நல் நுதல் குறமகள்
மென் தினை நுவணை உண்டு, தட்டையின்
ஐவனச் சிறு கிளி கடியும் நாட!
வீங்குவளை நெகிழப் பிரிதல்
5
யாங்கு வல்லுநையோ, ஈங்கு இவள் துறந்தே?
ஒருவழித் தணந்து வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 5
 

 
286
சிறு தினை கொய்த இருவி வெண் கால்
காய்த்த அவரைப் படு கிளி கடியும்
யாணர் ஆகிய நல் மலை நாடன்
புகர் இன்று நயந்தனன் போலும்;
5
கவரும் தோழி! என் மாமைக் கவினே.
உடன்போக்குத் துணிந்த தலைமகன் அஃது ஒழிந்து, தானே வரைவிடை வைத்துப் பிரிய நினைந்ததனைக் குறிப்பினான் உணர்ந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தலைமகன், 'வரைவிடை வைத்துப் பிரிவல்' என்றவழித் தலைமகள் தோழிக்குச் சொல்ல
 

 
287
நெடு வரை மிசையது குறுங் கால் வருடை
தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட!
வல்லை மன்ற பொய்த்தல்;
வல்லாய் மன்ற, நீ அல்லது செயலே.
'இன்ன நாளில் வரைவல்' எனக் கூறி, அந்நாளில் வரையாது, பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது. 7
 

 
288
நன்றே செய்த உதவி நன்று தெரிந்து
யாம் எவன் செய்குவம்? நெஞ்சே! காமர்
மெல் இயல் கொடிச்சி காப்பப்
பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே.
'கிளிகள் புனத்தின்கண் படியாநின்றன' என்று, தலைவியைக் காக்க ஏவியவழி, அதனை அறிந்த தலைமகன் உவந்து, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 8
 

 
289
'கொடிச்சி இன் குரல் கிளி செத்து, அடுக்கத்துப்
பைங் குரல் ஏனல் படர்தரும் கிளி' எனக்
காவலும் கடியுநர் போல்வர்
மால் வரை நாட! வரைந்தனை கொண்மோ!
இற்செறித்த பின்னர்த் தோழி வரைவு கடாவுழி, 'முதிர்ந்த தினைப்புனம் இவள் காத்தொழிந்தால் வரைவல்' என்றாற்கு அவள் சொல்லியது. 9
 

 
290
அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி
சிறந்தன போலும், கிள்ளை பிறங்கிய
பூக் கமழ் கூந்தல் கொடிச்சி
நோக்கவும் படும்; அவள் ஓப்பவும் படுமே.
காவல் மிகுதியான் இரவுக்குறி மறுக்கப்பட்டு நீங்கிய தலைமகன் வந்துழி, அவன் கேட்டு வெறுப்புத் தீர்த்தற் பொருட்டால், தினைப்புனம் காவல் தொடங்காநின்றாள் என்பது தோன்ற, தோழி கூறியது. 10
 

 
291
மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும்
துறுகல் அடுக்கத்ததுவே பணைத் தோள்,
ஆய் தழை நுடங்கும் அல்குல்,
காதலி உறையும் நனி நல் ஊரே.
வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்ற தலைமகன் சொல்லியது. 1
 

 
292
மயில்கள் ஆல, பெருந் தேன் இமிர,
தண் மழை தழீஇய மா மலை நாட!
நின்னினும் சிறந்தனள், எமக்கே நீ நயந்து
நல் மனை அருங் கடி அயர,
5
எம் நலம் சிறப்ப, யாம் இனிப் பெற்றோளே.
பின்முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவை முடித்தவளை இல்லத்துக் கொண்டு புகுந்துழி, தலைமகள் உவந்து சொல்லியது. 2
 

 
293
சிலம்பு கமழ் காந்தள் நறுங் குலை அன்ன
நலம் பெறு கையின் என் கண் புதைத்தோயே!
பாயல் இன் துணை ஆகிய பணைத் தோள்
தோகை மாட்சிய மடந்தை!
5
நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே?
பகற்குறியிடம் புக்க தலைமகன், தலைவி பின்னாக மறைய வந்து கண் புதைத்துழி, சொல்லியது. 3
 

 
294
எரி மருள் வேங்கை இருந்த தோகை
இழை அணி மடந்தையின் தோன்றும் நாட!
இனிது செய்தனையால்; நுந்தை வாழியர்!
நல் மனை வதுவை அயர, இவள்
5
பின் இருங் கூந்தல் மலர் அணிந்தோயே!
வதுவை செல்லாநின்றுழித் தலைமகற்குத் தோழி கூறியது. 4
 

 
295
வருவதுகொல்லோ தானே வாராது
அவண் உறை மேவலின், அமைவது கொல்லோ
புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை,
இருவி இருந்த குருவி வருந்துற,
5
பந்து ஆடு மகளிரின் படர்தரும்
குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே?
தலைமகன் வரைவிடை வைத்துப் பிரிந்து நீட்டித்துழி, உடன்சென்ற நெஞ்சினைத் தலைமகள் நினைந்து கூறியது. 5
 

 
296
கொடிச்சி காக்கும் பெருங் குரல் ஏனல்
அடுக்கல் மஞ்ஞை கவரும் நாட!
நடுநாள் கங்குலும் வருதி;
கடு மா தாக்கின், அறியேன் யானே.
இரவுக்குறி வருகின்ற தலைமகற்குத் தோழி ஆற்றருமை கூறி மறுத்தது. 6
 

 
297
விரிந்த வேங்கைப் பெருஞ் சினைத் தோகை
பூக் கொய் மகளிரின் தோன்றும் நாட!
பிரியினும், பிரிவது அன்றே
நின்னொடு மேய மடந்தை நட்பே.
ஒருவழித் தணந்து வரைய வேண்டும் என்ற தலைமகற்குத் தோழி கூறியது. 7
 

 
298
மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும்
அடுக்கல் நல் ஊர் அசைநடைக் கொடிச்சி
தான் எம் அருளாள்ஆயினும்,
யாம் தன் உள்ளுபு மறந்தறியேமே!
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்கு உணர்த்திய வழி, அவள் நாணத்தினால் மறைத்து ஒழுகிய அதனைக் கூறக்கேட்ட தலைமகன் சொல்லியது. 8
 

 
299
குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன்,
பைஞ் சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்
அம் சில் ஓதி அசைநடைக் கொடிச்சி
கண்போல் மலர்தலும் அரிது; இவள்
5
தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய நிலைமைக்கண், தலைமகள் ஆய வெள்ளத்தோடு கூடி நிற்கக் கண்ட தலைமகன் மகிழ்ந்த உள்ளத்தானாய்த் தன்னுள்ளே சொல்லியது. 9
 

 
300
கொடிச்சி கூந்தல் போலத் தோகை
அம் சிறை விரிக்கும் பெருங் கல் வெற்பன்
வந்தனன்; எதிர்ந்தனர் கொடையே;
அம் தீம் கிளவி! பொலிக, நின் சிறப்பே!
தலைமகன் தானே வரைவு வேண்டிவிட, சுற்றத்தார் கொடை நேர்ந்தமை தலைமகட்குத் தோழி சொல்லியது.
 

 
மேல்