முகப்பு    

 வாகை 


40
40.கொடைச் சிறப்பு

போர் நிழல் புகன்ற சுற்றமொடு ஊர்முகத்து
இறாஅலியரோ, பெரும! நின் தானை!
இன் இசை இமிழ் முரசு இயம்பக் கடிப்பு இகூஉ,
புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப,
காய்த்த கரந்தை மாக் கொடி விளை வயல்  
5
வந்து இறைகொண்டன்று, தானை: 'அந்தில்,
களைநர் யார் இனிப் பிறர்?' எனப் பேணி,
மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க,
ஒன்னார் தேய, பூ மலைந்து உரைஇ,
வெண் தோடு நிரைஇய வேந்துடை அருஞ் சமம்
10
கொன்று புறம்பெற்று, மன்பதை நிரப்பி,
வென்றி ஆடிய தொடித் தோள் மீ கை,
எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து,
பொன்அம் கண்ணி, பொலந் தேர் நன்னன்
சுடர் வீ வாகைக் கடி முதல் தடிந்த
15
தார் மிகு மைந்தின், நார்முடிச் சேரல்!
புன் கால் உன்னம் சாய, தெண் கண்
வறிது கூட்டு அரியல் இரவலர்த் தடுப்ப,
தான் தர உண்ட நனை நறவு மகிழ்ந்து,
நீர் இமிழ் சிலம்பின் நேரியோனே:
20
செல்லாயோதில், சில் வளை விறலி!
மலர்ந்த வேங்கையின் வயங்கு இழை அணிந்து,
மெல் இயல் மகளிர் எழில் நலம் சிறப்ப,
பாணர் பைம் பூ மலைய, இளையர்
இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து,
25
நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்த,
தோட்டி நீவாது, தொடி சேர்பு நின்று,
பாகர் ஏவலின், ஒண் பொறி பிசிர,
காடு தலைக் கொண்ட நாடு காண் அவிர் சுடர்
அழல் விடுபு, மரீஇய மைந்தின்,
30
தொழில் புகல் யானை நல்குவன், பலவே.

துறை:விறலி ஆற்றுப்படை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:நாடு காண் அவிர் சுடர் 

உரை
 
43
43.மன்னனின் செல்வ மகிழ்ச்சி

கவரி முச்சி, கார் விரி கூந்தல்,
ஊசல் மேவல், சேயிழை மகளிர்
உரல் போல் பெருங் கால், இலங்கு வாள் மருப்பின்,
பெருங் கை, மதமாப் புகுதரின், அவற்றுள்
விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ:
5
கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை
வட திசை எல்லை இமயம் ஆக,
தென்அம் குமரியொடு ஆயிடை அரசர்
முரசுடைப் பெருஞ் சமம் ததைய, ஆர்ப்பு எழ,
சொல் பல நாட்டைத் தொல் கவின் அழித்த
10
போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ!
இரும் பணை திரங்கப் பெரு பெயல் ஒளிப்ப,
குன்று வறம் கூரச் சுடர் சினம் திகழ,
அருவி அற்ற பெரு வறற் காலையும்,
அருஞ் செலல் பேர் ஆற்று இருங் கரை உடைத்து,
15
கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய,
வரைவு இல் அதிர்சிலை முழங்கி, பெயல் சிறந்து,
ஆர் கலி வானம் தளி சொரிந்தாஅங்கு,
உறுவர் ஆர ஓம்பாது உண்டு,
நகைவர் ஆர நன் கலம் சிதறி,  
20
'ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல்
பாடு விறலியர் பல் பிடி பெறுக!
துய் வீ வாகை, நுண் கொடி உழிஞை,
வென்றி மேவல், உரு கெழு சிறப்பின்,
கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக!
25
மன்றம் படர்ந்து, மறுகு சிறைப் புக்கு,
கண்டி நுண் கோல் கொண்டு, களம் வாழ்த்தும்
அகவலன் பெறுக, மாவே!' என்றும்,
இகல் வினை மேவலை ஆகலின், பகைவரும்
தாங்காது புகழ்ந்த, தூங்கு கொளை முழவின்,
30
தொலையாக், கற்ப!   நின் நிலை கண்டிகுமே!
நிணம் சுடு புகையொடு கனல் சினம் தவிராது,
நிரம்பு அகல்பு அறியா ஏறா ஏணி,
நிறைந்து நெடிது இராத் தசும்பின், வயிரியர்
உண்டெனத் தவாஅக் கள்ளின்  
35
வண் கை வேந்தே! நின் கலி மகிழானே.

துறை:
இயல்மொழி வாழ்த்து
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:றா ஏணி 

உரை
 
66
66.வென்றிச் சிறப்புடன் படுத்து, கொடைச் சிறப்புக்    கூறுதல்

வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனிய
இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணி,
படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல!
'இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து, ஒன்னார்
வேலுடைக் குழூஉச் சமம் ததைய நூறி,  
5
கொன்று புறம் பெற்ற பிணம் பயில் அழுவத்து,
தொன்று திறை தந்த களிற்றொடு, நெல்லின்
அம்பண அளவை விரிந்து உறை போகிய
ஆர் பதம் நல்கும்' என்ப கறுத்தோர்
உறு முரண் தாங்கிய தார் அருந் தகைப்பின்,
10
நாள் மழைக் குழூஉச் சிமை கடுக்கும் தோன்றல்
தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின்,
தார் புரிந்தன்ன வாளுடை விழவின்,
போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த
கடவுள் வாகைத் துய் வீ ஏய்ப்ப,
15
பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை
கடத்திடைப் பிடவின் தொடைக் குலைச் சேக்கும்,
வான் பளிங்கு விரைஇய, செம் பரல் முரம்பின்,
இலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே.
20

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:புதல் சூழ் பறவை 

உரை
 
88
88.கொடைச் சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன்
   கூறி, வாழ்த்துதல்

வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது,
கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து,
தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து,
தம் பெயர் போகிய ஒன்னார் தேய,
துளங்கு இருங் குட்டம் தொலைய, வேல் இட்டு;
            5

அணங்குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து;
பொரு முரண் எய்திய கழுவுள் புறம் பெற்று;
நாம மன்னர் துணிய நூறி,
கால் வல் புரவி அண்டர் ஓட்டி,
சுடர் வீ வாகை நன்னற் தேய்த்து,
                       10

குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு
உரு கெழு மரபின் அயிரை பரைஇ,
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய,
கொற்றம் எய்திய பெரியோர் மருக!
வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில்!
              15

விரவுப் பணை முழங்கும், நிரை தோல் வரைப்பின்,
உரவுக் களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறை,
ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை
நார் அரி நறவின் கொங்கர் கோவே!
உடலுநர்த் தபுத்த பொலந் தேர்க் குருசில்!
                20

வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந!
நீ நீடு வாழிய, பெரும! நின்வயின்
துவைத்த தும்பை நனவுற்று வினவும்
மாற்று அருந் தெய்வத்துக் கூட்டம் முன்னிய
புனல் மலி பேரியாறு இழிதந்தாங்கு,
                     25

வருநர் வரையாச் செழும் பல் தாரம்
கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப,
ஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர்,
பாவை அன்ன மகளிர் நாப்பண்,
புகன்ற மாண் பொறிப் பொலிந்த சாந்தமொடு
             30

தண் கமழ் கோதை சூடி, பூண் சுமந்து,
திருவில் குலைஇத் திருமணி புரையும்
உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து,
வேங்கை விரிந்து, விசும்புறு சேட்சிமை,
அருவி அரு வரை அன்ன மார்பின்
                    35

சேண் நாறு நல் இசைச் சேயிழை கணவ!
மாகம் சுடர மா விசும்பு உகக்கும்
ஞாயிறு போல விளங்குதி, பல் நாள்!
ஈங்குக் காண்கு வந்தனென், யானே
உறு கால் எடுத்த ஓங்கு வரல் புணரி                  
40

நுண் மணல் அடை கரை உடைதரும்
தண் கடல் படப்பை நாடு கிழவோயே!

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:கல் கால் கவணை

உரை
 

    மேல்