|
|
| மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின், |
| மெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட, |
| புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை, |
| வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன் |
5 | தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய |
| நல் இனத்து ஆயர், ஒருங்கு தொக்கு, எல்லாரும் |
| வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக்கொடிப் |
| பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும், |
| பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித் |
10 | திரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரியும், |
| மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல் |
| முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும், |
| மா கடல் கலக்குற மா கொன்ற மடங்காப் போர் |
| வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும், ஆங்கு அப் |
15 | பொரு வரும் பண்பினவ்வையும், பிறவும் |
| உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போல, |
| புரிபு புரிபு புகுத்தனர், தொழூஉ |
| அவ் வழி, 'முள் எயிற்று ஏஎர் இவளைப் பெறும், இது ஓர் |
| வெள் ஏற்று எருத்து அடங்குவான் |
20 | ஒள்ளிழை வாருறு கூந்தல் துயில் பெறும், வை மருப்பின் |
| காரி கதன் அஞ்சான் கொள்பவன் ஈர் அரி |
| வெரூஉப் பிணை மான் நோக்கின் நல்லாட் பெறூஉம், இக் |
| குரூஉக் கண் கொலை ஏறு கொள்வான். வரிக் குழை |
| வேய் உறழ் மென் தோள் துயில் பெறும், வெந் துப்பின் |
25 | சேஎய் சினன் அஞ்சான் சார்பவன்' என்று ஆங்கு |
| அறைவனர், நல்லாரை, ஆயர் முறையினால், |
| நாள்மீன் வாய் சூழ்ந்த மதி போல், மிடைமிசைப் |
| பேணி நிறுத்தார் அணி |
| அவ் வழி, பறை எழுந்து இசைப்ப, பல்லவர் ஆர்ப்ப, |
30 | குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த |
| நறை வலம் செய விடா இறுத்தன ஏறு |
| அவ் ஏற்றின் |
| மேல் நிலை மிகல் இகலின், மிடை கழிபு இழிபு, மேற்சென்று, |
| வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான், |
35 | பால் நிற வெள்ளை எருத்தத்துப் பாய்ந்தானை |
| நோனாது குத்தும் இளங் காரித் தோற்றம் காண் |
| பால் மதி சேர்ந்த அரவினைக் கோள் விடுக்கும் |
| நீல் நிற வண்ணனும் போன்ம் |
| இரிபு எழுபு அதிர்பு அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க, |
40 | வரி பரிபு இறுபு இறுபு குடர் சோரக் குத்தி, தன் |
| கோடு அழியக் கொண்டானை ஆட்டித் திரிபு உழக்கும் |
| வாடா வெகுளி எழில் ஏறு கண்டை, இஃது ஒன்று |
| வெரு வரு தூமம் எடுப்ப, வெகுண்டு |
| திரிதரும் கொல் களிறும் போன்ம் |
45 | தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றித் தலைச் சென்று, |
| தோள் வலி துணி பிணி, துறந்து இறந்து எய்தி, மெய் சாய்ந்து, |
| கோள் வழுக்கித் தன் முன்னர் வீழ்ந்தான்மேல் செல்லாது, |
| மீளும் புகர் ஏற்றுத் தோற்றம் காண் மண்டு அமருள் |
| வாள் அகப்பட்டானை, 'ஒவ்வான்' எனப் பெயரும் |
50 | மீளி மறவனும் போன்ம் |
| ஆங்க, செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப, |
| மறுத்து மறுத்து மைந்தர் சார, |
| தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப, |
| இடி உறழ் இசையின் இயம் எழுந்து ஆர்ப்ப |
55 | பாடு ஏற்றுக் கொள்பவர், பாய்ந்து மேல் ஊர்பவர், |
| கோடு இடை நுழைபவர், கோள் சாற்றுபவரொடு |
| புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க, |
| வரி புனை வல்வில் ஐவர் அட்ட |
| பொரு களம் போலும், தொழூஉ |
60 | தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக, தண்டாச் சீர், |
| வாங்கு எழில், நல்லாரும் மைந்தரும், மல்லல் ஊர் |
| ஆங்கண் அயர்வர், தழூஉ |
| தலைவியையும் ஆயத்தையும் தன்னுடன் பாடத் தோழி அழைத்தல்
|
| பாடுகம், வம்மின் பொதுவன் கொலை ஏற்றுக் |
| கோடு குறி செய்த மார்பு |
| தலைவி
|
65 | நெற்றிச் சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில், |
| செற்றார் கண் சாய, யான் சாராது அமைகல்லேன்; |
| பெற்றத்தார் கவ்வை எடுப்ப, அது பெரிது |
| உற்றீயாள், ஆயர் மகள் |
| தொழீஇஇ! ஒருக்கு நாம் ஆடும் குரவையுள், நம்மை |
70 | அருக்கினான் போல் நோக்கி, அல்லல் நோய் செய்தல், |
| 'குரூஉக் கண் கொலை ஏறு கொண்டேன், யான்' என்னும் |
| தருக்கு அன்றோ ஆயர் மகன்? |
| தோழி
|
| நேரிழாய்! கோள் அரிதாக நிறுத்த கொலை ஏற்றுக் |
| காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே, |
75 | ஆர்வுற்று, எமர், கொடை நேர்ந்தார் அலர் எடுத்த |
| ஊராரை உச்சி மிதித்து |
| ஆங்கு, |
| தொல் கதிர்த் திகிரியாற் பரவுதும் ஒல்கா |
| உரும் உறழ் முரசின் தென்னவற்கு |
80 | ஒரு மொழி கொள்க, இவ் உலகு உடன்! எனவே |