109
வினை வல பாங்கின் தலைவன் கூற்று

கார் ஆரப் பெய்த கடி கொள் வியன் புலத்துப்
பேராது சென்று, பெரும் பதவப் புல் மாந்தி,
நீர் ஆர் நிழல குடம்சுட்டு இனத்துள்ளும்,
போர் ஆரா ஏற்றின், பொரு நாகு, இளம் பாண்டில்
5தேர் ஊர, செம்மாந்தது போல், மதைஇனள்
பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல்,
மோரோடு வந்தாள் தகை கண்டை; யாரோடும்
சொல்லியாள் அன்றே வனப்பு
பண்ணித் தமர் தந்து, ஒரு புறம் தைஇய
10கண்ணி எடுக்கல்லாக் கோடு ஏந்து அகல் அல்குல்
புண் இல்லார் புண்ணாக நோக்கும்; முழு மெய்யும்
கண்ணளோ? ஆயர் மகள்
இவள்தான் திருத்தாச் சுமட்டினள், ஏனைத் தோள் வீசி,
வரிக் கூழ வட்டி தழீஇ, அரிக் குழை
15ஆடல் தகையள்; கழுத்தினும் வாலிது
நுண்ணிதாத் தோன்றும், நுசுப்பு
இடை தெரியா ஏஎர் இருவரும் தத்தம்
உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார்கொல்லோ?
படை இடுவான்மன் கண்டீர், காமன் மடை அடும்
20பாலொடு கோட்டம் புகின்
இவள் தான், வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால், மருந்து அல்லள்
'யார்க்கும் அணங்காதல் சான்றாள்' என்று, ஊர்ப் பெண்டிர்,
'மாங்காய் நறுங் காடி கூட்டுவேம்; யாங்கும்
எழு நின் கிளையொடு போக' என்று தத்தம்
25கொழுநரைப் போகாமல் காத்து, முழு நாளும்,
வாயில் அடைப்ப, வரும்

வினை வல பாங்கின் தலைவியைக் கண்ட வினை வல பாங்கின் தலைவன் 'காமம் சாலா இளமையோள் வயின்,ஏமம் சாலா இடும்பை எய்தி', கூறியது