129
தோழி கூற்று

தொல் ஊழி தடுமாறி, தொகல் வேண்டும் பருவத்தால்,
பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல்,
எல் உறு தெறு கதிர் மடங்கி, தன் கதிர் மாய;
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின்,
5அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம் போல், மயங்கு இருள் தலை வர;
எல்லைக்கு வரம்பு ஆய, இடும்பை கூர், மருள் மாலை
பாய் திரைப் பாடு ஓவாப் பரப்பு நீர்ப் பனிக் கடல்!
'தூ அறத் துறந்தனன் துறைவன்' என்று, அவன் திறம்
10நோய் தெற உழப்பார்கண் இமிழ்தியோ? எம் போலக்
காதல் செய்து அகன்றாரை உடையையோ? நீ
மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்!
'நன்று அறை கொன்றனர், அவர்' எனக் கலங்கிய
என் துயர் அறிந்தனை நரறியோ? எம் போல
15இன் துணைப் பிரிந்தாரை உடையையோ? நீ
பனி இருள் சூழ்தர பைதல் அம் சிறு குழல்!
'இனி வரின், உயரும்மன் பழி' எனக் கலங்கிய
தனியவர் இடும்பை கண்டு இனைதியோ? எம் போல
இனிய செய்து அகன்றாரை உடையையோ? நீ
20என ஆங்கு,
அழிந்து, அயல் அறிந்த எவ்வம் மேற்பட,
பெரும் பேதுறுதல் களைமதி, பெரும!
வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன்
மருந்து அறைகோடலின் கொடிதே, யாழ நின்
25அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே

தன்னுள் கையாறு எய்திடு கிளவி'யால் தலைவி ஆற்றாளாயினவாறு, தோழி தலைவற்குக் கூறியது