| தொல் ஊழி தடுமாறி, தொகல் வேண்டும் பருவத்தால், |
| பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல், |
| எல் உறு தெறு கதிர் மடங்கி, தன் கதிர் மாய; |
| நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின், |
5 | அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா |
| மெல்லியான் பருவம் போல், மயங்கு இருள் தலை வர; |
| எல்லைக்கு வரம்பு ஆய, இடும்பை கூர், மருள் மாலை |
| பாய் திரைப் பாடு ஓவாப் பரப்பு நீர்ப் பனிக் கடல்! |
| 'தூ அறத் துறந்தனன் துறைவன்' என்று, அவன் திறம் |
10 | நோய் தெற உழப்பார்கண் இமிழ்தியோ? எம் போலக் |
| காதல் செய்து அகன்றாரை உடையையோ? நீ |
| மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்! |
| 'நன்று அறை கொன்றனர், அவர்' எனக் கலங்கிய |
| என் துயர் அறிந்தனை நரறியோ? எம் போல |
15 | இன் துணைப் பிரிந்தாரை உடையையோ? நீ |
| பனி இருள் சூழ்தர பைதல் அம் சிறு குழல்! |
| 'இனி வரின், உயரும்மன் பழி' எனக் கலங்கிய |
| தனியவர் இடும்பை கண்டு இனைதியோ? எம் போல |
| இனிய செய்து அகன்றாரை உடையையோ? நீ |
20 | என ஆங்கு, |
| அழிந்து, அயல் அறிந்த எவ்வம் மேற்பட, |
| பெரும் பேதுறுதல் களைமதி, பெரும! |
| வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன் |
| மருந்து அறைகோடலின் கொடிதே, யாழ நின் |
25 | அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே |