134
வாயில்கள் கூற்று

மல்லரை மறம் சாய்த்த மலர்த் தண் தார் அகலத்தோன்,
ஒல்லாதார் உடன்று ஓட, உருத்து, உடன் எறிதலின்,
கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல்,
கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின்,
5இருங் கடல் ஒலித்து ஆங்கே இரவுக் காண்பது போல,
பெருங் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர,
போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய்,
பாயல் கொள்பவை போல, கய மலர் வாய் கூம்ப,
ஒருநிலையே நடுக்குற்று, இவ் உலகெலாம் அச்சுற,
10இரு நிலம் பெயர்ப்பு அன்ன, எவ்வம் கூர் மருள் மாலை
தவல் இல் நோய் செய்தவர்க் காணாமை நினைத்தலின்,
இகல் இடும் பனி தின, எவ்வத்துள் ஆழ்ந்து, ஆங்கே,
கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர, கடல் நோக்கி,
அவலம் மெய்க் கொண்டது போலும் அஃது எவன்கொலோ?
15நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின்,
கடும் பனி கைம்மிக, கையாற்றுள் ஆழ்ந்து, ஆங்கே,
நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய, மணல் நோக்கி,
இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்கொலோ?
வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின்,
20கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து, ஆங்கே,
மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால், மரன் நோக்கி,
எவ்வத்தால் இயன்ற போல், இலை கூம்பல் எவன் கொலோ?
என ஆங்கு,
கரை காணாப் பௌவத்து, கலம் சிதைந்து ஆழ்பவன்
25திரை தரப் புணை பெற்று, தீது இன்றி உய்ந்தாங்கு,
விரைவனர் காதலர் புகுதர,
நிரை தொடி துயரம் நீங்கின்றால், விரைந்தே

பிரிவிடை மாலைப்பொழுது கண்டு ஆற்றாத தலைவி, 'இவ் வகைப்பட்டனவும் நமது இடுக்கண் கண்டு எவ்வம் கொண்டன போன்ற; அவரும் நமக்கு அருளுவார் கொல்லோ?' எனச் சொல்லிய நேரத்துக்கண், தலைவன் புக, அவ்வளவில் அவள் அவலம் நீங்கினமை கண்டு, வாயில்கள் தம்முள்ளே கூறியது (17)