137
தலைவி கூற்று

அரிதே, தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்;
பெரிதே காமம்; என் உயிர் தவச் சிறிதே;
பலவே யாமம்; பையுளும் உடைய;
சிலவே, நம்மோடு உசாவும் அன்றில்;
5அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப, உலமந்து,
எழில் எஞ்சு மயிலின் நடுங்கி, சேக்கையின்
அழல் ஆகின்று, அவர் நக்கதன் பயனே
மெல்லிய நெஞ்சு பையுள் கூர, தம்
சொல்லினான் எய்தமை அல்லது, அவர் நம்மை
10வல்லவன் தைஇய, வாக்கு அமை கடு விசை
வில்லினான் எய்தலோ இலர்மன்; ஆயிழை!
வில்லினும் கடிது, அவர் சொல்லினுள் பிறந்த நோய்,
நகை முதலாக, நட்பினுள் எழுந்த
தகைமையின் நலிதல் அல்லது, அவர் நம்மை
15வகைமையின் எழுந்த தொல் முரண் முதலாக,
பகைமையின் நலிதலோ இலர்மன்; ஆயிழை!
பகைமையின் கடிது, அவர் தகைமையின் நலியும் நோய்,
நீயலேன்' என்று என்னை அன்பினால் பிணித்து, தம்
சாயலின் சுடுதல் அல்லது, அவர் நம்மைப்
20பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடுஞ் சுடர்த்
தீயினால் சுடுதலோ இலர்மன்; ஆயிழை!
தீயினும் கடிது, அவர் சாயலின் கனலும் நோய்
ஆங்கு
அன்னர் காதலராக, அவர் நமக்கு
25இன் உயிர் பேர்த்தரும மருத்துவர் ஆயின்,
யாங்கு ஆவதுகொல்? தோழி! எனையதூஉம்
தாங்குதல் வலித்தன்று ஆயின்,
நீங்கரிது உற்ற அன்று, அவர் உறீஇய நோயே

வரைவு நீட ஆற்றாளாயின இடத்து, தலைவி ஆற்றாமையை அவள்தன்னாலே தலைவற்கு அறிவிக்கல் உற்ற தோழி, தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவியை வற்புறுக்க, அவள் வன்புறை எதிர் அழிந்து கூறியது