| சான்றவிர், வாழியோ! சான்றவிர்! என்றும் |
| பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி, அறன் அறிதல் |
| சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால், இவ் இருந்த |
| சான்றீர்! உமக்கு ஒன்று அறிவுறுப்பேன்: மான்ற |
5 | துளி இடை மின்னுப் போல் தோன்றி, ஒருத்தி, |
| ஒளியோடு உரு என்னைக் காட்டி, அளியள், என் |
| நெஞ்சு ஆறு கொண்டாள்; அதற்கொண்டும் துஞ்சேன், |
| அணி அலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின் |
| பிணையல் அம் கண்ணி மிலைந்து, மணி ஆர்ப்ப, |
10 | ஓங்கு இரும் பெண்ணை மடல் ஊர்ந்து, என் எவ்வ நோய் |
| தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பாக |
| வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று, நீங்காது, |
| பாடுவேன், பாய் மா நிறுத்து |
| யாமத்தும் எல்லையும் எவ்வத் திரை அலைப்ப, |
15 | 'மா மேலேன்' என்று, மடல் புணையா நீந்துவேன் |
| தே மொழி மாதர் உறாஅது உறீஇய |
| காமக் கடல் அகப்பட்டு |
| உய்யா அரு நோய்க்கு உயவாகும் மையல் |
| உறீஇயாள் ஈத்த இம் மா |
20 | காணுநர் எள்ளக் கலங்கி, தலை வந்து, என் |
| ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும் |
| 'மாண் இழை மாதராள் ஏஎர்' என, காமனது |
| ஆணையால் வந்த படை |
| காமக் கடும் பகையின் தோன்றினேற்கு ஏமம் |
25 | எழிநுதல் ஈத்த இம் மா |
| அகை எரி ஆனாது, என் ஆர் உயிர் எஞ்சும் |
| வகையினால், உள்ளம் சுடுதரும் மன்னோ |
| முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர் |
| தகையால் தலைக்கொண்ட நெஞ்சு! |
30 | அழல் மன்ற, காம அரு நோய்; நிழல் மன்ற, |
| நேரிழை ஈத்த இம் மா |
| ஆங்கு அதை, |
| அறிந்தனிர் ஆயின், சான்றவிர்! தான் தவம் |
| ஒரீஇ, துறக்கத்தின் வழீஇ, ஆன்றோர் |
35 | உள் இடப்பட்ட அரசனைப் பெயர்த்து, அவர் |
| உயர்நிலை உலகம் உறீஇயாங்கு, என் |
| துயர் நிலை தீர்த்தல் நும்தலைக் கடனே |