| ஆறு அல்ல மொழி தோற்றி, அற வினை கலக்கிய, |
| தேறுகள் நறவு உண்டார் மயக்கம்போல், காமம் |
| வேறு ஒரு பாற்று ஆனதுகொல்லோ? சீறடிச் |
| சிலம்பு ஆர்ப்ப, இயலியாள் இவள் மன்னோ, இனி மன்னும் |
5 | புலம்பு ஊரப் புல்லென்ற வனப்பினாள் விலங்கு ஆக, |
| வேல் நுதி உற நோக்கி, வெயில் உற, உருகும் தன் |
| தோள் நலம் உண்டானைக் கெடுத்தாள் போல், தெருவில் பட்டு, |
| ஊண் யாதும் இலள் ஆகி, உயிரினும் சிறந்த தன் |
| நாண் யாதும் இலள் ஆகி, நகுதலும் நகூஉம்; ஆங்கே |
10 | பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம்: தோழி! ஓர் |
| ஒண்ணுதல் உற்றது உழைச் சென்று கேளாமோ? |
| இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரோ? ஓஒ! |
| அமையும் தவறிலீர் மற்கொலோ நகையின் |
| மிக்கதன் காமமும் ஒன்று என்ப; அம் மா |
15 | புது நலம் பூ வாடியற்று, தாம் வீழ்வார் |
| மதி மருள நீத்தக்கடை |
| என்னையே மூசி, கதுமென நோக்கன்மின் வந்து |
| கலைஇய கண், புருவம், தோள், நுசுப்பு, ஏஎர் |
| சில மழைபோல் தாழ்ந்து இருண்ட கூந்தல், அவற்றை |
20 | விலை வளம் மாற அறியாது, ஒருவன் |
| வலை அகப்பட்டது என் நெஞ்சு |
| வாழிய, கேளிர்! |
| பலவும் சூள் தேற்றித் தெளித்தவன் என்னை |
| முலையிடை வாங்கி முயங்கினன், நீத்த |
25 | கொலைவனைக் காணேன்கொல், யான்? |
| காணினும், என்னை அறிதிர்; கதிர் பற்றி, |
| ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே! எம் கேள்வன் |
| யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ? காட்டாயேல், |
| வானத்து எவன் செய்தி, நீ? |
30 | ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல, |
| நீருள்ளும் தோன்றுதி, ஞாயிறே! அவ் வழித் |
| தேரை தினப்படல் ஓம்பு |
| நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை, |
| பல் கதிர் சாம்பிப் பகல் ஒழிய, பட்டீமோ |
35 | செல் கதிர் ஞாயிறே! நீ |
| அறாஅல் இன்று அரி முன்கைக் கொட்கும் |
| பறாஅப் பருந்தின்கண் பற்றிப் புணர்ந்தான் |
| கறாஅ எருமைய காடு இறந்தான்கொல்லோ? |
| உறாஅத் தகை செய்து, இவ் ஊர் உள்ளான்கொல்லோ? |
40 | செறாஅது உளனாயின், கொள்வேன்; அவனைப் |
| பெறாஅது யான் நோவேன்; அவனை எற் காட்டிச் |
| சுறாஅக் கொடியான் கொடுமையை, நீயும், |
| உறாஅ அரைச! நின் ஓலைக்கண் கொண்டீ, |
| மறாஅ அரைச! நின் மாலையும் வந்தன்று; |
45 | அறாஅ தணிக, இந் நோய் |
| தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல், யாவர்க்கும் |
| அன்னவோ காம! நின் அம்பு? |
| கையாறு செய்தானைக் காணின், கலுழ் கண்ணால் |
| பையென நோக்குவேன்; தாழ் தானை பற்றுவேன்; |
50 | ஐயம் கொண்டு, என்னை அறியான் விடுவானேல் |
| ஒய்யெனப் பூசல் இடுவேன்மன், யான் அவனை |
| மெய்யாகக் கள்வனோ என்று |
| வினவன்மின் ஊரவிர்! என்னை, எஞ்ஞான்றும் |
| மடாஅ நறவு உண்டார் போல, மருள |
55 | விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண் |
| படாஅமை செய்தான் தொடர்பு |
| கனவினான் காணிய, கண் படாஆயின், |
| நனவினான், ஞாயிறே! காட்டாய் நீஆயின், |
| பனை ஈன்ற மா ஊர்ந்து, அவன் வர, காமன் |
60 | கணை இரப்பேன், கால் புல்லிக்கொண்டு |
| என ஆங்கு, |
| கண் இனைபு, கலுழ்பு ஏங்கினள்; |
| தோள் ஞெகிழ்பு, வளை நெகிழ்ந்தனள்; |
| அன்னையோ! எல்லீரும் காண்மின்; மடவரல் |
65 | மெல் நடைப் பேடை துனைதர, தற் சேர்ந்த |
| அன்ன வான் சேவல் புணர்ச்சிபோல், ஒண்ணுதல் |
| காதலன் மன்ற அவனை வரக் கண்டு, ஆங்கு |
| ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள், பேதை |
| நகை ஒழிந்து, நாணு மெய் நிற்ப, இறைஞ்சி, |
70 | தகை ஆகத் தையலாள் சேர்ந்தாள் நகை ஆக, |
| நல் எழில் மார்பனகத்து |