| தொல் இயல் ஞாலத்துத் தொழில் ஆற்றி, ஞாயிறு, |
| வல்லவன் கூறிய வினை தலை வைத்தான்போல், |
| கல் அடைபு, கதிர் ஊன்றி, கண் பயம் கெடப் பெயர; |
| அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல, |
5 | மல்லல் நீர்த் திரை ஊர்பு, மால் இருள் மதி சீப்ப; |
| இல்லவர் ஒழுக்கம் போல், இருங் கழி மலர் கூம்ப; |
| செல்லும் என் உயிர்ப் புறத்து இறுத்தந்த மருள் மாலை! |
| மாலை நீ |
| இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்மன்; |
10 | அன்புற்றார் அழ, நீத்த அல்லலுள், கலங்கிய |
| துன்புற்றார்த் துயர் செய்தல் தக்கதோ, நினக்கு? |
| மாலை நீ |
| கலந்தவர் காமத்தைக் கனற்றலோ செய்தாய்மன்; |
| நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின்கண் |
15 | அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ, நினக்கு? |
| மாலை நீ |
| எம் கேள்வற் தருதலும் தருகல்லாய்; துணை அல்லை; |
| பிரிந்தவர்க்கு நோய் ஆகி, புணர்ந்தவர்க்குப் புணை ஆகி, |
| திருந்தாத செயின் அல்லால் இல்லையோ, நினக்கு? |
20 | என ஆங்கு |
| ஆய் இழை மடவரல் அவலம் அகல, |
| பாய் இருட் பரப்பினைப் பகல் களைந்தது போல, |
| போய் அவர் மண் வௌவி வந்தனர் |
| சேய் உறை காதலர் செய் வினை முடித்தே |