| பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அற, |
| செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின், |
| தணிவு இல் வெங் கோடைக்குத் தண் நயந்து அணி கொள்ளும் |
| பிணி தெறல் உயக்கத்த பெருங் களிற்றினம் தாங்கும் |
5 | மணி திகழ் விறல் மலை வெம்ப, மண் பக, |
| துணி கயம் துகள் பட்ட தூங்கு அழல் வெஞ் சுரம் |
| ‘கிளி புரை கிளவியாய்! நின் அடிக்கு எளியவோ, |
| தளி உறுபு அறியாவே, காடு?’ எனக் கூறுவீர்! |
| வளியினும் வரை நில்லா வாழு நாள், நும் ஆகத்து |
10 | அளி என, உடையேன் யான்; அவலம் கொண்டு அழிவலோ? |
| ‘ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய்! நீ உணல் வேட்பின், |
| ஆறு நீர் இல’ என, அறன் நோக்கிக் கூறுவீர்! |
| யாறு நீர் கழிந்தன்ன இளமை, நும் நெஞ்சு என்னும் |
| தேறு நீர், உடையேன் யான்; தெருமந்து ஈங்கு ஒழிவலோ? |
15 | ‘மாண் எழில் வேய் வென்ற தோளாய்! நீ வரின், தாங்கும் |
| மாண் நிழல் இல, ஆண்டை மரம்’ எனக் கூறுவீர்! |
| நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன்; நும் |
| தாள் நிழல் கைவிட்டு யான் தவிர்தலைச் சூழ்வலோ? |
| என ஆங்கு, |
20 | ‘அணை அரும் வெம்மைய காடு’ எனக் கூறுவீர்! |
| கணை கழிகல்லாத கல் பிறங்கு ஆர் இடை, |
| பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர்ப் |
| பிணையும் காணிரோ? பிரியுமோ, அவையே? |