| ‘ஈதலில் குறை காட்டாது, அறன் அறிந்து ஒழுகிய |
| தீதிலான் செல்வம் போல், தீம் கரை மரம் நந்த; |
| பேதுறு மட மொழி, பிணை எழில் மான் நோக்கின்; |
| மாதரார் முறுவல் போல், மண மௌவல் முகை ஊழ்ப்ப; |
5 | காதலர்ப் புணர்ந்தவர் கதுப்புப் போல், கழல்குபு |
| தாதொடும் தளிரொடும், தண் அறல் தகை பெற; |
| பேதையோன் வினை வாங்க, பீடு இலா அரசன் நாட்டு, |
| ஏதிலான் படை போல, இறுத்தந்தது, இளவேனில் |
| நிலம் பூத்த மரமிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள, |
10 | நலம் பூத்த நிறம் சாய, நம்மையோ மறந்தைக்க; |
| கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய, |
| புலம் பூத்து, புகழ்பு ஆனாக் கூடலும் உள்ளார்கொல்? |
| கல்மிசை மயில் ஆல, கறங்கி ஊர் அலர் தூற்ற, |
| தொல் நலம் நனி சாய, நம்மையோ மறந்தைக்க; |
15 | ஒன்னாதார்க் கடந்து அடூஉம், உரவு நீர் மா கொன்ற, |
| வென் வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல்? |
| மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள, |
| பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க; |
| தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும் |
20 | வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்கொல்?’ |
| என ஆங்கு, |
| நோய் மலி நெஞ்சமோடு இனையல், தோழி! |
| நாம் இல்லாப் புலம்பாயின், நடுக்கம் செய் பொழுதாயின், |
| காமவேள் விழவாயின், ‘கலங்குவள் பெரிது’ என, |
25 | ஏமுறு கடுந் திண் தேர் கடவி, |
| நாம் அமர் காதலர் துணை தந்தார், விரைந்தே |