54
தலைவி கூற்று

"கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெற,
பொடி அழல் புறந்தந்த பூவாப் பூம் பொலன் கோதை,
தொடி செறி யாப்பு அமை அரி முன்கை, அணைத் தோளாய்!
அடி உறை அருளாமை ஒத்ததோ, நினக்கு?" என்ன,
5நரந்தம் நாறு இருங் கூந்தல் எஞ்சாது நனி பற்றி,
பொலம் புனை மகரவாய் நுங்கிய சிகழிகை,
நலம் பெறச் சுற்றிய குரல் அமை ஒரு காழ்
விரல் முறை சுற்றி, மோக்கலும் மோந்தனன்;
நறாஅ அவிழ்ந்தன்ன என் மெல் விரற் போது கொண்டு,
10செறாஅச் செங் கண் புதைய வைத்து,
பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்;
தொய்யில் இள முலை இனிய தைவந்து,
தொய்யல் அம் தடக் கையின், வீழ் பிடி அளிக்கும்
மையல் யானையின், மருட்டலும் மருட்டினன்
15அதனால்,
அல்லல் களைந்தனன், தோழி! நம் நகர்
அருங் கடி நீவாமை கூறின், நன்று’ என
நின்னொடு சூழ்வல், தோழி! ‘நயம் புரிந்து,
இன்னது செய்தாள் இவள்’ என,
20மன்னா உலகத்து மன்னுவது புரைமே

‘கைப்பட்டுக் கலங்கிய வருத்தத்தைக் களைந்தேன் என உரை’ எனத் தோழிக்கு உரைத்தற்கண் தலைவி கூறியது. அது நொதுமலர் வரைவிற்கு மண முரசு இயம்பிய வழி, ஆண்டானும், பிற ஆண்டானும், தோழிக்கு, ‘இன்னவாறு கூட்டம் நிகழ்ந்தது’ எனக்கூறி, ‘அதனை நமர் அறியக் கூறல் வேண்டும்’ என்றும், தலைவற்கு நம் வருத்தம் அறியக் கூறல் வேண்டும்' என்றும், தலைவி கூறுதற்கண் நிகழ்வது (18)