73
தலைவி கூற்று

அகன் துறை அணி பெற, புதலொடு தாழ்ந்த
பகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை,
கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தான்,
தண் கமழ் நறுந் தேறல் உண்பவள் முகம் போல,
5வண் பிணி தளை விடூஉம் வயல் அணி நல் ஊர!
'நோதக்காய்' என நின்னை நொந்தீவார் இல்வழி,
'தீது இலேன் யான்' எனத் தேற்றிய வருதிமன்
ஞெகிழ் தொடி இளையவர் இடை முலைத் தாது சோர்ந்து,
இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையாக்கால்?
10கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்வழி,
'மனத்தில் தீது இலன்' என மயக்கிய வருதிமன்
அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின்
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால்?
என்னை நீ செய்யினும், உரைத்தீவார் இல்வழி,
15முன் அடிப் பணிந்து, எம்மை உணர்த்திய வருதிமன்
நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக் கொள்ள,
கரையிடைக் கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால்?
என ஆங்கு
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின்
20தண்டாப் பரத்தை தலைக்கொள்ள, நாளும்
புலத் தகைப் பெண்டிரைத் தேற்றி; மற்று யாம்எனின்,
தோலாமோ, நின் பொய் மருண்டு?

'தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி, "எங்கையர்க்கு உரை" என இரத்தற்கண் தலைவி கூறியது