84
தலைவி கூற்று


தலைவி தோழியை வினாவுதல்

உறு வளி தூக்கும் உயர் சினை மாவின்

நறு வடி ஆர் இற்றவை போல் அழிய,

கரந்து யான் அரக்கவும், கை நில்லா வீங்கிச்

சுரந்த என் மெல் முலைப் பால் பழுதாக நீ

5

நல் வாயில் போத்தந்த பொழுதினான், 'எல்லா!

கடவுட் கடி நகர்தோறும் இவனை

வலம் கொளீஇ வா' என, சென்றாய் விலங்கினை

ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள்

யார் இல் தவிர்ந்தனை? கூறு


தோழி கூறிய செய்தி உணர்ந்து, தலைவி நெஞ்சொடு கிளத்தல்

10

நீருள் அடை மறை ஆய் இதழ்ப் போதுபோல் கொண்ட

குடைநிழல் தோன்றும் நின் செம்மலைக் காணூஉ,

'இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு, உள்ளா

மகன் அல்லான் பெற்ற மகன்' என்று அகல்நகர்

வாயில் வரை இறந்து போத்தந்து, தாயர்

15

தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன்; மற்று, அவர்

தம்தம் கலங்களுள், 'கையுறை' என்று இவற்கு,

ஒத்தவை ஆராய்ந்து, அணிந்தார் 'பிறன் பெண்டிர்

ஈத்தவை கொள்வானாம், இஃது ஒத்தன்; சீத்தை,

செறு தக்கான் மன்ற பெரிது'


தலைவி புதல்வனொடு புலந்து உரைத்தல்

20

சிறு பட்டி; ஏதிலார் கை, எம்மை எள்ளுபு நீ தொட்ட,

மோதிரம் யாவோ? யாம் காண்கு

அவற்றுள் நறா இதழ் கண்டன்ன செவ் விரற்கு ஏற்பச்

சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள்

குறி அறிந்தேன்; 'காமன் கொடி எழுதி, என்றும்

25

செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பில்

பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல்' என்பது தன்னை

அறீஇய செய்த வினை

அன்னையோ? இஃது ஒன்று

முந்தைய கண்டும், எழுகல்லாத என் முன்னர்,

30

வெந்த புண் வேல் எறிந்தற்றா, இஃது ஒன்று

தந்தை இறைத் தொடி மற்று இவன் தன் கைக்கண்

தந்தார் யார், எல்லாஅ! இது?

'இஃது ஒன்று என் ஒத்துக் காண்க, பிறரும் இவற்கு' என்னும்

தன் நலம் பாடுவி, தந்தாளா நின்னை,

35

'இது தொடுக' என்றவர் யார்


தலைவி தன் நெஞ்சு அழிந்து கூறுதல்

அஞ்சாதி; நீயும் தவறிலை; நின் கை இது தந்த

பூ எழில் உண்கண் அவளும் தவறிலள்;

வேனிற் புனல் அன்ன நுந்தையை நோவார் யார்?

மேல் நின்றும் எள்ளி, இது இவன் கைத் தந்தாள்

40

தான் யாரோ? என்று வினவிய நோய்ப்பாலேன்

யானே தவறுடையேன்!


கடவுட் கடி நகர்தோறும் வலங் கொளீஇ வரற்குச் சேடியரோடு மகற் போக்கிய தலைவி அவன் நீட்டித்து வந்துழி, ' தாயார் கண்ணிய நல் அணிப் புதல்வனை, மாயப் பரத்தை உள்ளியவழி'யின்கண், தந்தை தொடி மகன் கைக் கண்டு புலந்தாள் தன்னுள்ளே அழிந்து கூறியது (19)