87
தலைவி கூற்று


தலைவி

ஒரூஉ நீ; எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை

வெரூஉதும், காணுங்கடை


தலைவன்

தெரியிழாய்! செய் தவறு இல்வழி, யாங்குச் சினவுவாய்,

மெய் பிரிந்து, அன்னவர்மாட்டு?


தலைவி

5

ஏடா! நினக்குத் தவறு உண்டோ? நீ வீடு பெற்றாய்;

இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி;

நிலைப் பால் அறியினும், நின் நொந்து நின்னைப்

புலப்பார் உடையர், தவறு


தலைவன்

அணைத் தோளாய்! தீயாரைப் போல, திறன் இன்று உடற்றுதி;

10

காயும் தவறு இலேன் யான்


தோழி

மான் நோக்கி! நீ அழ நீத்தவன் ஆனாது

நாணிலன்ஆயின், நலிதந்து அவன்வயின்

ஊடுதல் என்னோ, இனி?


தலைவி நெஞ்சொடு கூறல்

'இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம்' என்னும்

15

தகையது காண்டைப்பாய், நெஞ்சே! பனி ஆனாப்

பாடு இல் கண் பாயல் கொள


பரத்தையர் சேரி் சென்றமை அறிந்திலள் எனத் தலைவிமாட்டுச் சென்றவனோடு அவள் ஊடி உறழ்ந்து கூறி, தோழி வாயிலாக ஊடல் தீர்வாள், தன் நெஞ்சொடு கூறியது