9
செவிலி கூற்றும், முக்கோல் பகவர் மாற்றமும்

‘எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்,
உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும்,
நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!
5வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை,
என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,
தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!’
‘காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை;
10ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்
பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
15சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்?
தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?
20சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
என ஆங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே

உடன் போய தலைவி பின் சென்ற செவிலி, இடைச் சுரத்து, முக்கோல் பகவரைக்கண்டு, ‘இவ் வகைப் பட்டாரை ஆண்டுக் காணீரோ?’ என வினவியாட்கு, ‘அவரைக்கண்டு, அஃது அறம் எனவே கருதிப் போந்தேம்; நீரும் அவர் திறத்து எவ்வம்பட வேண்டா’ என எடுத்துக் காட்டி, அவர் தெருட்டியது (8)