93
தலைவியின் புலவி


தலைவி

வண்டு ஊது சாந்தம் வடுக் கொள நீவிய,
தண்டாத் தீம் சாயற் பரத்தை, வியல் மார்ப!
பண்டு, இன்னை அல்லைமன்; ஈங்கு எல்லி வந்தீய,
கண்டது எவன்? மற்று உரை

தலைவன்

5நன்றும் தடைஇய மென் தோளாய்! கேட்டீவாயாயின்
உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும்
கடவுளர்கண் தங்கினேன்

தலைவி

சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர், நீ
கடவுண்மை கொண்டு ஒழுகுவார்
10அவருள், எக் கடவுள்? மற்று அக் கடவுளைச் செப்பீமன்

தலைவன் கூற்றும் தலைவியின் மாற்றமும்

'முத்து ஏர் முறுவலாய்! நாம் மணம் புக்கக்கால்,
"இப் போழ்து போழ்து" என்று அது வாய்ப்பக் கூறிய
அக் கடவுள், மற்று அக் கடவுள் ' 'அது ஒக்கும்
நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும்
15மாயமோ; கைப்படுக்கப்பட்டாய் நீ; கண்டாரை
வாயாக யாம் கூற வேட்டீவாய்! கேள், இனி:
பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்ப,
பறி முறை நேர்ந்த நகாராக, கண்டார்க்கு
இறு முறை செய்யும் உருவொடு, நும் இல்,
20செறி முறை வந்த கடவுளைக் கண்டாயோ?
நறுந் தண் தகரமும் நானமும் நாறும்
நெறிந்த குரற் கூந்தல் நாள் அணிக்கு ஒப்ப,
நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு, மேல் நாள், நீ
பூப் பலி விட்ட கடவுளைக் கண்டாயோ?
25ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்துச்
சூர் கொன்ற செவ்வேலாற் பாடி, பல நாளும்,
ஆராக் கனை காமம் குன்றத்து நின்னொடு
மாரி இறுத்த கடவுளைக் கண்டாயோ?
கண்ட கடவுளர்தம்முளும், நின்னை
30வெறி கொள் வியல் மார்பு வேறாகச் செய்து,
குறி கொளச் செய்தார் யார்? செப்பு: மற்று யாரும்
சிறு வரைத் தங்கின் வெகுள்வர்; செறு தக்காய்!
தேறினேன்; சென்றீ நீ செல்லா விடுவாயேல்,
நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய
35நெட்டிருங் கூந்தற் கடவுளர் எல்லார்க்கும்
முட்டுப்பாடு ஆகலும் உண்டு'

'காவற் பாங்கின் ஆங்கு ஓர் பக்கமும், என்புழி, 'ஆங்கு ஓர் பக்கமான கடவுளரைக் கண்டு தங்கினேன்' என்ற தலைவற்கு, 'நீ கண்ட கடவுளர் இவர்' எனக் கூறிப் புலந்தது