| தலைவி
|
| வண்டு ஊது சாந்தம் வடுக் கொள நீவிய, |
| தண்டாத் தீம் சாயற் பரத்தை, வியல் மார்ப! |
| பண்டு, இன்னை அல்லைமன்; ஈங்கு எல்லி வந்தீய, |
| கண்டது எவன்? மற்று உரை |
| தலைவன்
|
5 | நன்றும் தடைஇய மென் தோளாய்! கேட்டீவாயாயின் |
| உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும் |
| கடவுளர்கண் தங்கினேன் |
| தலைவி
|
| சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர், நீ |
| கடவுண்மை கொண்டு ஒழுகுவார் |
10 | அவருள், எக் கடவுள்? மற்று அக் கடவுளைச் செப்பீமன் |
| தலைவன் கூற்றும் தலைவியின் மாற்றமும்
|
| 'முத்து ஏர் முறுவலாய்! நாம் மணம் புக்கக்கால், |
| "இப் போழ்து போழ்து" என்று அது வாய்ப்பக் கூறிய |
| அக் கடவுள், மற்று அக் கடவுள் ' 'அது ஒக்கும் |
| நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும் |
15 | மாயமோ; கைப்படுக்கப்பட்டாய் நீ; கண்டாரை |
| வாயாக யாம் கூற வேட்டீவாய்! கேள், இனி: |
| பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்ப, |
| பறி முறை நேர்ந்த நகாராக, கண்டார்க்கு |
| இறு முறை செய்யும் உருவொடு, நும் இல், |
20 | செறி முறை வந்த கடவுளைக் கண்டாயோ? |
| நறுந் தண் தகரமும் நானமும் நாறும் |
| நெறிந்த குரற் கூந்தல் நாள் அணிக்கு ஒப்ப, |
| நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு, மேல் நாள், நீ |
| பூப் பலி விட்ட கடவுளைக் கண்டாயோ? |
25 | ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்துச் |
| சூர் கொன்ற செவ்வேலாற் பாடி, பல நாளும், |
| ஆராக் கனை காமம் குன்றத்து நின்னொடு |
| மாரி இறுத்த கடவுளைக் கண்டாயோ? |
| கண்ட கடவுளர்தம்முளும், நின்னை |
30 | வெறி கொள் வியல் மார்பு வேறாகச் செய்து, |
| குறி கொளச் செய்தார் யார்? செப்பு: மற்று யாரும் |
| சிறு வரைத் தங்கின் வெகுள்வர்; செறு தக்காய்! |
| தேறினேன்; சென்றீ நீ செல்லா விடுவாயேல், |
| நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய |
35 | நெட்டிருங் கூந்தற் கடவுளர் எல்லார்க்கும் |
| முட்டுப்பாடு ஆகலும் உண்டு' |