94
குறளும் கூனும் உறழ்ந்து கூறல்


குறளன்

என் நோற்றனைகொல்லோ
நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல்
ஈங்கு உருச் சுருங்கி
இயலுவாய்! நின்னோடு உசாவுவேன்; நின்றீத்தை

கூனி

5அன்னையோ! காண் தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான்,
ஆண்தலைக்கு ஈன்ற பறழ் மகனே நீ! எம்மை,
'வேண்டுவல்' என்று விலக்கினை; நின் போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று?

குறளன்

மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி,
10நெறித்துவிட்டன்ன நிறை ஏரால் என்னைப்
பொறுக்கல்லா நோய் செய்தாய்; பொறீஇ நிறுக்கல்லேன்;
நீ நல்கின் உண்டு, என் உயிர்

கூனி

குறிப்புக் காண் வல்லுப் பலகை எடுத்து நிறுத்தன்ன
கல்லாக் குறள! கடும் பகல் வந்து எம்மை,
15'இல்லத்து வா' என, மெய் கொளீஇ, எல்லா! நின்
பெண்டிர் உளர்மன்னோ? கூறு

குறளன்

நல்லாய்! கேள்: உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய
கொக்கு உரித்தன்ன கொடு மடாய்! நின்னை யான்
புக்கு அகலம் புல்லின், நெஞ்சு ஊன்றும்; புறம் புல்லின்,
20அக்குளுத்து; புல்லலும் ஆற்றேன்; அருளீமோ,
பக்கத்துப் புல்லச் சிறிது

கூனி குறளனை இகழ்ந்து செல்லுதலும், அவள் செலவு நோக்கிக் குறளன் தன் நெஞ்சிற்கு உரைத்தலும்

'போ, சீத்தை! மக்கள் முரியே! நீ மாறு, இனி; தொக்க
மரக் கோட்டம் சேர்ந்து எழுந்த பூங் கொடி போல,
நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர், எம்மைப்
25புரப்பேம் என்பாரும் பலரால்; பரத்தை என்
பக்கத்துப் புல்லீயாய் என்னுமால்; தொக்க
உழுந்தினும் துவ்வா, குறு வட்டா! நின்னின்
இழிந்ததோ, கூனின் பிறப்பு?' 'கழிந்து ஆங்கே,
"யாம் வீழ்தும்" என்று தன் பின் செலவும், உற்றீயாக்
30கூனி குழையும் குழைவு காண்'

'காமனார் நடக்கும் நடைகாண்' என்ற கூனியின்முன், குறளன் நடந்து காட்டுதல்

'யாமை எடுத்து நிறுத்தற்றால், தோள் இரண்டும் வீசி,
யாம் வேண்டேம் என்று விலக்கவும், எம் வீழும்
காமர் நடக்கும் நடை காண்' 'கவர் கணைச்
சாமனார் தம்முன் செலவு காண்'

குறளனின் சூளுரை

35ஓஒ! காண், நம்முள் நகுதல் தொடீஇயர், நம்முள் நாம்
உசாவுவம்; கோன் அடி தொட்டேன்

கூனி குறளனை விரும்பி மொழிதல்

ஆங்கு ஆக! சாயல் இன் மார்ப! அடங்கினேன்; 'ஏஎ!
பேயும் பேயும் துள்ளல் உறும்' எனக்
கோயிலுள் கண்டார் நகாமை வேண்டுவல்;
40தண்டாத் தகடு உருவ! வேறாகக் காவின் கீழ்ப்
போதர்; அகடு ஆரப் புல்லி முயங்குவேம்
துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை
முகடு காப்பு யாத்துவிட்டாங்கு

'அடியோர் பாங்கினும் வினை வல பாங்கினும், கடி வரை இல புறத்து என்மனார் புலவர்' என்பதனால், அடியோராகிய கூனும் குறளும் உறழ்ந்து கூறிக் கூடியது