95
தலைவி கூற்று


தலைவி

நில், ஆங்கு; நில், ஆங்கு; இவர்தரல் எல்லா! நீ
நாறு இருங் கூந்தலார் இல் செல்வாய், இவ் வழி,
ஆறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே
மாறு, இனி, நின் ஆங்கே, நின் சேவடி சிவப்ப

தலைவன்

5செறிந்து ஒளிர் வெண் பல்லாய்! யாம் வேறு இயைந்த
குறும்பூழ்ப் போர் கண்டேம்; அனைத்தல்லது, யாதும்
அறிந்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது

தலைவி

குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன், நீ என்றும்;
புதுவன ஈகை வளம் பாடி, காலின்
10பிரியாக் கவி கைப் புலையன் தன் யாழின்
இகுத்த செவி சாய்த்து, இனி இனிப் பட்டன
ஈகைப் போர் கண்டாயும் போறி; மெய் எண்ணின்,
தபுத்த புலர்வில் புண்
ஊரவர் கவ்வை உளைந்தீயாய், அல்கல் நின்
15தாரின்வாய்க் கொண்டு முயங்கி, பிடி மாண்டு,
போர் வாய்ப்பக் காணினும் போகாது கொண்டு, ஆடும்
பார்வைப் போர் கண்டாயும் போறி; நின் தோள் மேலாம்
ஈரமாய்விட்டன புண்
கொடிற்றுப் புண் செய்யாது, மெய்ம் முழுதும் கையின்
20துடைத்து, நீ வேண்டினும் வெல்லாது கொண்டு, ஆடும்
ஒட்டிய போர் கண்டாயும் போறி; முகம்தானே
கொட்டிக் கொடுக்கும் குறிப்பு

தலைவன்

ஆயின், ஆயிழாய்! அன்னவை யான் ஆங்கு அறியாமை
போற்றிய, நின் மெய் தொடுகு

தலைவியின் இகழ்ச்சியும் தலைமகன் மாற்றமும்

25'அன்னையோ!' 'மெய்யைப் பொய் என்று மயங்கிய, கை ஒன்று
அறிகல்லாய் போறிகாண், நீ
நல்லாய்! பொய் எல்லாம் ஏற்றி, தவறு தலைப்பெய்து,
கையொடு கண்டாய்; பிழைத்தேன்; அருள், இனி'

'அருள்' என்ற தலைவனுக்குத் தலைவி

அருளுகம் யாம்; யாரேம், எல்லா! தெருள?
30அளித்து, நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும்
விளித்து, நின் பாணனோடு ஆடி அளித்தி
விடலை நீ நீத்தலின், நோய் பெரிது ஏய்க்கும்;
நடலைப்பட்டு, எல்லாம் நின் பூழ்

'கொடியோர் கொடுமை சுடும் என ஒடியாது, நல் இசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ, பகுதியின் நீங்கிய தகுதிக்கண்' தலைவி பரத்தையரைப் பூழ் ஆக்கிக் கூறியது