பக்கம் எண் :

அறத்துப் பால்
இல்லறவியல்

அதிகாரம் 24. புகழ்

அஃதாவது, ஒருவர்க்கு உலகமுள்ள அளவும் அழியாது நிற்குங்கீர்த்தி. இது ஈகையால் நிகழ்வதால் அதன்பின் வைக்கப்பட்டது.

 

ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதிய மில்லை யுயிர்க்கு.

 

ஈதல்-வறியார்க்கு வேண்டியலற்றை இயன்ற வரை ஈக; இசைபட வாழ்தல்-அதனாற் புகழுண்டாக வாழ்க; அது அல்லது உயிர்க்கு ஊதியமில்லை-அப்புகழன்றி மக்களுக்கு இவ்வுலகத்திற் பெறக்கூடிய நிலையான பேறு வேறு ஒன்றுமில்லை.

இடத்தில் வறியார்க்கு நிலமும் கருவியில் வறியார்க்குப் பொறியும் நலத்தில் வறியார்க்கு மருந்தும் அறிவில் வறியார்க்கு நூலும் காப்பில் வறியார்க்குப் பாதுகாப்பும் அளிப்பதும் ஈதல் வகைகளேயாயினும்,

"உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம்"

என்று குடபுவியனாரும் (புறம் : 18).

"உடம்பா ரழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ் ஞானஞ் சேரவு மாட்டார்"

என்று திருமூலரும் (திருமந்திரம், 724) கூறுவதால், பொருளில் வறியார்க்கு உணவேனும் அதற்குரிய பொருளேனும் ஈதலே முன்மையும் (Priority) முதன்மையும் பெறுவதாம். ' ஈதல் ', ' வாழ்தல் ' இரண்டும் தல்லீற்று வியங்கோள். ஈதல் வேறுயிரினங்கட்கு இன்மையின், இங்கு உயிரென்றது மக்களுயிரை.