பக்கம் எண் :

கைகேயி சூழ்வினைப் படலம் 169

     ஆர்கலி அகழ்ந்தவர் சகரர்;  கங்கை தந்தோன் - பகீரதன்; அசுரரை
வென்றோர் -ககுத்தன், முசுகுந்தன் முதலியோர். ஐயன் திரள்
தோற்களுக்குத் தாடகைவதம்,  சிவனது வில்லைமுறித்தது,  பரசுராமனை
அடக்கியது. ஆகியவற்றால் புகழ் உண்டாயிற்று. புலவர் -அறிவினையுடைய
தேவர்கள். அசுரர் - சுரர்க்குப் பகைவர்.  சுரர் - தேவர்;  அமுதத்தை
(சுராவை)உண்டவர்.                                           96

பலர் செயல்  

கலிவிருத்தம்

1587.‘சந்தம் இவை; தா இல்மணி
     ஆரம் இவை; யாவும்
சிந்துரமும் இங்கு இவை;
     செறிந்த மத வேழப்
பந்திகள், வயப் பரி,
     பசும் பொனின் வெறுக்கை,
மைந்த! வறியோர் கொள
     வழக்கு’ என நிரைப்பார்.

     மைந்த - வீரனே!;  இவை சத்தம் - இவை சந்தனக் கலவைகள்;
இவை தாஇல் மணி ஆரம் - இவை குற்றமில்லாத இரத்தின மாலைகள்;
இங்கு இவை -இவ்விடத்திலுள்ள இவை; சிந்துரமும் - திலகமும்; யாவும்-
மற்றை எல்லாஅணிகளும் ஆகும்;  செறிந்த மதவேழப் பந்திகள் -
பொருந்திய மதயானை வரிசைகள்; வயப் பரி - வெற்றியையுடைய
குதிரைகள்; பசும் பொனின் வெறுக்கை - பசும்பொன்னாலாகிய
செல்வங்கள்; வறியோர் கொள - (இவற்றையெல்லாம்) பொருளில்லாத
ஏழைகள் பெற்றுக்கொள்ளும்படி; வழக்கு - (உன்கையால்) எடுத்துக் கொடு;
எனநிரைப்பார் - என்று வரிசையாகக் கொண்டுவந்து வைப்பவர் சிலர்.

     இராமனுக்கு முடிசூட்டுவிழா நிகழும் காலத்தில் அவனுக்கு நன்மை
விளைய வேண்டும் என்று கருதிய சிலர் தம்முடைய பொருளான சந்தனம்
முதலியவற்றை அவன் கையில்கொடுத்து வறியவர்களுக்கு வழங்க வேண்டும்
என்று வேண்டினர்.  வழங்குதல் - வரம்பு இல்லாமல் கொடுத்தல்.       97

1588.மின் பொருவு தேரின்மிசை
     வீரன் வரு போழ்தில்,
தன் பொருவு இல் கன்று தனி
     தாவி வரல் கண்டாங்கு
அன்பு உருகு சிந்தையொடும்
     ஆ உருகுமாபோல்,
என்பு உருகி, நெஞ்சு உருகி,
     யார் உருககில்லார்?