‘நீர் உண் வேட்கை மிகவே - நீர் உண்ணுகின்ற விருப்பம் மிகுதலால்; உயங்கும் எந்தைக்கு - வருந்துகின்ற என் தந்தைக்கு; ஒரு நீ - ஒப்பற்ற நீ; தண்ணீர் கொடுபோய் அளித்து - குளிர்ந்த நீரைக் கொண்டுபோய்க் கொடுத்து; என் சாவும் உரைத்து - என் இறப்பையும் அவர்களுக்குத் தெரிவித்து; ‘உம் புதல்வன்விண்மீது அடைவான் தொழுவான்’ எனவும் விளம்பு - உம் மகன் இறந்து சுவர்க்கம் செல்கின்றவன் உம்மை வணங்கினான் என்கின்ற செய்தியையும் அறிவிப்பாயாக; என்று -எனச் சொல்லி; எண் நீர்மையினான் - புகழத்தக்க நற்குண நற் செயல்களால்; விண்ணோர் எதிர்கொண்டிட - தேவர்கள் வரவேற்க; ஏகினன் -(பரலோகத்திற்குச்) சென்றான். ‘எந்தை’ எனவே தாயும் அடங்கியது. ‘அவர்’ என்று பின்வரும் பன்மையும் - ‘உம்’ என்ற முன்னிலையும் அதுபற்றி வந்தனவே. செய்த குற்றத்தை நினைத்துக்கசிந்துருகித் துடிக்கும் மனம் உடையவனாயினமை பற்றித் தயரதனை ‘ஒரு நீ’ என்றான் முனிகுமரன்.‘ஆல்’ அசை. 78 | 1684. | ‘மைந்தன் வரவே நோக்கும், வள மாதவன் பால், மகனோடு அம் தண் புனல் கொண்டு அணுக, “ஐயா, இதுபோது அளவாய் வந்து இங்கு அணுகாய்; என்னோ வந்தது? என்றே, நொந்தேம்; சந்தம் கமழும் தோளாய், தழுவிக் கொள வா" எனவே. |
‘மைந்தன் வரவே நோக்கும் - மகனது வருகையையே எதிர் பார்த்துக்கொண்டிருக்கின்ற; வள மாதவன்பால் - மிக்க தவத்தை உடைய முனிவனிடம்; மகனோடு - (இறந்த) மகனோடு; அம் தண்புனல் கொண்டு அணுக - அழகிய குளிர்ந்த நீரை எடுத்துக் கொண்டு நெருங்கிச் செல்ல; ‘ஐயா! - மகனே; இது போது அளவாய் -இவ்வளவு நேரமாய்; வந்து இங்கு அணுகாய் - இங்கு வந்து சேராமையால்; என்னோ வந்தது? - உனக்கு என்ன நேர்ந்ததோ; என்றே - என்று நினைத்து; நொந்தேம்- வருந்தினோம்; சந்தம் கமழும் தோளாய்! - சந்தனம் மணக்கின்ற தோளைஉடைய மகனே; தழுவிக் கொள வா’ - நாங்கள் தழுவிக் கொள்ளும்படி (அருகில்) வா; என - என்று சொல்லி. தசரதன் இறந்த மகன் உடலை எடுத்துக்கொண்டு தண்ணீருடன் கண் இழந்த முனி தம்பதிகளைஅணுக, அவர்கள் தம் மகன் வந்ததாகவே கருதினர் என்பது இதனால் விளங்கும். ‘ஏ’ ஈற்றசை. 79 |