| 1701. | கிள்ளையொடு பூவை அழுத; கிளர் மாடத்து - உள் உறையும் பூசை அழுத; உரு அறியாப் பிள்ளை அழுத; பெரியோரை என் சொல்ல? - ‘வள்ளல் வனம் புகுவான் ’ என்று, உரைத்த மாற்றத்தால். |
வள்ளல் - இராமன்; ‘வனம் புகுவான் - காடு செல்வான்;’ என்று உரைத்த மாற்றத்தால் - என்று சொல்லிய சொல்லால்; கிள்ளையொடு பூவை அழுத -கிளியும், நாகணவாய்ப் பறவையும் அழுதன; கிளர் மாடத்து உள் உறையும் பூசை அழுத -விளங்குகின்ற மாளிகையின் உள்ளே வசிக்கின்ற வீட்டுப் பூனைகள் அழுதன; உரு அறியாப்பிள்ளை அழுத - வடிவத்தைப் பார்த்து அறிய மாட்டாத சிறு குழந்தைகள் அழுதன; பெரியோரை என் சொல்ல? - பெரியோர்கள் அழுதமைமையப் பற்றி என்னவென்று சொல்வது? அஃறிணைப் பொருள்களும் இராமன் பிரிவால் துயர் உறுவனவாகச் சொல்கிறார். ‘ உரு அறியாப் பிள்ளை’ கருவில் இருக்கும் வடிவு காணாத குழந்தைகளும் அழுதன என்று துக்கத்தின் உச்சநிலையைக் காட்டிப் பொருள் உரைப்பினும் அமையும். இவையே இவ்வாறாயினமையின் பெரியோர்கள்அழுதமைபற்றிச் சொல்ல வேண்டுவதில்லை. 96 | 1702. | சேதாம்பல் போது அனைய செங் கனி வாய் வெண் தளவப் போது ஆம் பல் தோன்ற, புணர் முலைமேல் பூந் தரளம் மா தாம்பு அற்றென்ன மழைக் கண்ணீர் ஆலி உக, நா தாம் பற்றா மழலை நங்கைமார் ஏங்கினார். |
நா தாம் பற்றா மழலை நங்கைமார் - நாவின் கண் பிடிப்புப் பொருந்தாத மழலைச்சொற்களைப் பேசுகின்ற இனிய இளமகளிர்; சேதாம்பல் போது அனைய செங்கனிவாய் -செவ்வல்லிப் பூவை ஒத்த சிவந்த பழம் போன்ற வாயிலிருந்து; வெண் தளவப் போது ஆம்பல் தோன்ற - வெண்மையான முல்லையின் மலர் அரும்பு ஆகிய பல் வெளித் தெரிய; புணர்முலைமேல் - இரண்டாகச் சேர்ந்த மார்பகங்களின் மேல்; மழைக் கண்ணீர் ஆலி -மழை போன்ற கண்ணீர்த் |