பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 241

1706. ‘‘மண் செய்த பாவம் உளது’
     என்பார்; ‘மா மலர்மேல்
பெண் செய்த பாவம் அதனின்
     பெரிது ’ என்பார்;
‘புண் செய்த நெஞ்சை, விதி’
     என்பார்; ‘ பூதலத்தோர்
கண் செய்த பாவம்
     கடலின் பெரிது ’ என்பார்.

     (நகர மாந்தர்) ‘மண்செய்த பாவம் உளது’ என்பார் -  ‘நிலமகள்
செய்த தீவினை மிகுதியாக உள்ளது’  என்பர்; ‘ மாமலர் மேல் பெண்
செய்த பாவம் அதனின் பெரிது’
- சிறந்த தாமரை மலர்மேல் வீற்றிருக்கும்
திருமகள் செய்த தீவினை அதைக்காட்டிலும் மிகுதி; ’ என்பார்-; ‘புண்
செய்த நெஞ்சை விதி
- புண்பட்ட மனத்தைப் பார்த்து  இது  விதியால்
விளைந்தது;’  என்பார் - ;  பூதலத்தோர் கண் செய்த பாவம் கடலின்
பெரிது’
- இப்பூமியில்  உள்ளவர்களின் கண் செய்த தீவினை
கடலைக்காட்டிலும்  மிகுதி;’  என்பார் - .

     இராமனால் ஆளப் பெறாமையால்  பூமியும்,  அனுபவிக்கப்
பெறாமையால் செல்வமகளும் பாவம்  செய்தவர் ஆயினர்.  மணி முடி
தரித்துச் செல்லும் காட்சியைக் காணவேண்டிய கண்கள் மரவுரி தரித்துக்
காடு செல்லும் காட்சியைக் காண நேரிட்டமையின் கண் செய்த பாவம்
மிகுதியாம்.                                                  101

1707. ‘ஆளான் பரதன் அரசு’
     என்பார்; ‘ஐயன், இனி
மீளான்; நமக்கு விதி
     கொடிதேகாண்’ என்பார்;
‘கோள் ஆகி வந்தவா,
     கொற்ற முடிதான்’ என்பார்;
‘மாளாத நம்மின் மனம்
     வலியார் ஆர்?’ என்பார்.

     ‘பரதன் அரசு ஆளான் - பரதன் அரசாட்சியை  ஏற்கமாட்டான்;’
என்பார் - ; ‘ ஐயன் இனி மீளான் - இராமன் இனிமேல் நாடு திரும்ப
மாட்டான்;  நமக்கு விதி கொடிதே காண்’ - நமக்கு ஊழ் வினை மிகவும்
கொடுமையானது;’  என்பார் - ; ‘ கொற்ற முடிதான் - வெற்றியுடைய
மகுடம்; கோள் ஆகி வந்தவா‘ - தீய இடையூறாகி வந்து  சேர்ந்தபடி
என்னே;’ என்பார் - ;  மாளாத  நம்மின் மனம் வலியார் ஆர்?’ -
(இத்தனையும் கேட்டு வைத்தும் கண்டு வைத்தும் ) இறந்துபடாத நம்மைக்
காட்டிலும் உலகில் கொடுமனம்