பக்கம் எண் :

642ஆரணிய காண்டம்

     மான் இது நானே பற்றி வல்லையின் வருவென் நன்றே
    கான் இயல் மயில் அன்னாளைக் காத்தனை இருத்தி" (3305)

என்று இராமன் கூறிவிட்டுச் சென்ற படி

     "பொன் அனாள் புக்க சாலை
    காத்தனன், புறத்து நின்றே (3306)

காத்து நின்றதையும், அப்போது மாரீசனின் மாயக் குரல் கேட்டுச் சீதை
கலங்கி உயிர் ஒழியப் போனதையும், அதனால்தான்

     போகின்றேன் அடியனேன்; புகுந்து வந்து, கேடு
    ஆகின்றது; அரசன் தன் ஆணை நீர் மறுத்து
    ஏகு என்றீர்; இருக்கின்றீர் தமியிர்' என்று பின்
    வேகின்ற சிந்தையான் விடைகொண்டு ஏகினான். (3334)

    சீதையைப் பிரிந்து செல்ல வேண்டி வந்தது என நிகழ்ந்ததையும்
கூறினான் என்று விளக்கலாம்.

     "அம்சொல் மயிலை, அருந்ததியை நீங்கினிரோ
    எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும்"

என்று சடாயு கேட்ட கேள்விக்கு விடையாக இலக்குவன் கூறியது இப்பாடல்
என்க.                                                     104

சடாயு ஆறுதல் கூறுதல்

3507. ஆற்றலோன் அவ் உரை
     அறைய, ஆணையால்
ஏற்று, உணர்ந்து, எண்ணி,
     அவ் எருவை வேந்தனும்,
'மாற்ற அருந் துயர் இவர்
     மனக் கொளாவகை
தேற்றுதல் நன்று' என,
     இனைய செப்புவான்:

    ஆற்றலோன் - சொல் ஆற்றல் உடைய இலக்குவன்; ஆணையால்
-
(இராமனது) கட்டளையினால்; அவ்உரை அறைய - அந்த (வகையான)
சொற்களைச் சொல்ல; ஏற்று உணர்ந்து எண்ணி - (அவற்றைக்) கேட்டு
உணர்ந்து எண்ணிப் பார்த்து; அவ் எருவை வேந்தனும் - அந்தக் கழுகு
அரசனாகிய (சடாயுவும்); மாற்ற அருந்துயர் - நீக்க முடியாத துன்பத்தை;
இவர்மனக் கொளா வகை - இவர்கள் மனதில் கொள்ளாத படி;
தேற்றுதல் நன்று என - தேறுதல் சொல்வது நல்லது என்று எண்ணி;
இனைய செப்புவான் - இத்தகைய சொற்களைச் சொல்பவனானான்.