பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 655

அம்மலையின்   அகலம்   எண்ணின்   முப்பத்து    ஈர்ஆயிரம்
யோசனையின்  முற்றும்
 - அம்மேருமலையின் அகலம்  எண்ணினால்
முப்பத்து இரண்டாயிரம் யோசனையில் முடிவு அடையும்.
 

                                                (25)
 

8728.

மேருவினைக் கடந்து, அப்பால் ஒன்பதினாயிரம்
        உள ஓசனையை விட்டால்,
நேர் அணுகும் நீலகிரிதான் இரண்டா-
        யிரம் உள யோசனையின் நிற்கும்;
மாருதி! மற்று அதற்கு யோசனை
      
  நாலாயிரத்தின் மருந்து வைகும்,
கார் வரையைக் காணுதி; மற்று, அது காண,
        இத் துயர்க்குக் கரையும் காண்டி;
 

மாருதி - ‘அனுமனே! மேருவினைக் கடந்து -  மேருமலையினைக்
கடந்து; அப்பால் ஒன்பதினாயிரம்  உள  ஓசனையை  விட்டால் -
அப்பால்  உள்ள  ஒன்பதினாயிரம்  யோசனையைக்  கடந்தால்;   நேர்
நீலகிரி  அணுகும்
 - நினக்குநேராக நீலகிரி என்னும் மலைநெருங்கித்
தோன்றும்; தான்   இரண்டாயிரம்  உளயோசனையின்   நிற்கும் -
அந்நீலகிரிதான்  இரண்டாயிரம் ஆக உள்ள யோசனை அளவில்  பரவி
நிற்கும்;  மற்று அதற்கு  யோசனை நாலாயிரத்தின் - அந்நீலகிரிக்கு
யோசனை நாலாயிரத்துக்கு அப்பால்; மருந்து வைகும் கார் வரையைக்
காணுதி  
-  மருந்து  தங்கியுள்ள கரிய மருத்துமலையைக்   காண்பாய்;
மற்று, அதுகாண, இத் துயர்க்கும் கரையுங் காண்டி - அம்மலையைக்
காணவே இத் துயர்க்கு எல்லையுங் காண்பாய்’.
 

                                                (26)
 

8729.

‘மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்,
      உடல் வேறு வகிர்களாகக்
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும்,
     படைக்கலங்கள் கிளைப்பது ஒன்றும்,
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம்
     மருந்தும் உள; நீ, வீர!
ஆண்டு ஏகி, கொணர்தி’ என அடையாளத்தொடும்
     உரைத்தான், அறிவின் மிக்கான்.