பெருமான் தங்கியுள்ள கயிலை மலையைக் கண்டு மகிழ்ச்சி கொண்டான். | (43) | | 8746. | வட குண திசையில் தோன்றும், மழுவலான் ஆண்டு வைகும் தட வரை அதனை நோக்கி, தாமரைக் கைகள் கூப்பி, படர்குவான்தன்னை, அன்பால் பரமனும் விசும்பில் பார்த்தான்; தட முலை உமைக்குக் காட்டி, ‘வாயுவின் தனயன்’ என்றான். | வடகுண திசையில் தோன்றும் - வடகிழக்குத் திசையில் தோன்றுகின்றதும்; மழுவலான் ஆண்டு வைகும் - மழுப்படையை உடைய சிவபெருமான் தங்கி இருப்பதும் ஆகிய; தடவரை அதனை நோக்கி தாமரைக் கைகள் கூப்பி - பெரிய மலையினை (கயிலையை)ப்பார்த்துத் தாமரை போலச் சிவந்த கைகளைக் குவித்து வணங்கி; படர்குவான் தன்னை அன்பால் பரமனும் விசும்பில் பார்த்தான் - செல்லுகின்ற அனுமனைப் பெருமையிற் சிறந்தவனாகிய சிவபரம் பொருளும் விரும்பிப் பார்த்து; தடமுலை உமைக்குக் காட்டி ‘வாயுவின் தனையன்’ என்றான் - பருத்த தனங்களை உடைய உமாதேவிக்குக் காண்பித்து, ‘வாயுதேவனுடைய மகன் அனுமன்’ என்று கூறினான். | வடகுணதிசை ஈசான்யம். இதற்குரிய தெய்வம் சிவாம்சம் பெற்ற ஈசானன். மழு-எரியீட்டி. இதனைத் தாருகாவனத்து முனிவர்கள் தமது ஆபிசார யாகத்தால் தோற்றுவித்து அனுப்ப அதனைச் சிவன் வலக்கரம் ஏற்றனன் என்பது புராணம். | (44) | உமையின் வினாவும், ஈசனது உரையும் | | 8747. | ‘என், இவன் எழுந்த தன்மை?’ என்று, உலகு ஈன்றாள் கேட்ப, ‘மன்னவன் இராமன் தூதன் மருந்தின்மேல் வந்தான்; வஞ்சர் தென் நகர் இலங்கைத் தீமை தீர்வது திண்ணம்; சேர்ந்து, நன்னுதல்! நாமும் வெம் போர் காணுதும், நாளை என்றான். |
|
|
|