பக்கம் எண் :

672யுத்த காண்டம் 

அந்தர வான நாடர் அடி தொழ, முரசம் ஆர்ப்ப,
இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து, இறைஞ்சிப்
                                  போனான்.*

 

சந்திரன்    அனைய கொற்றத் தனிக்குடை தலையிற்று ஆக -
சந்திரனைப்    போன்ற    வெற்றிமைந்த  ஒப்பற்ற  குடை  தலைமீது
நிழற்றவும்; சுந்தர மகளிர்  அங்கைச்  சாமரை  தென்றல்  தூற்ற -
அழகிய  பெண்கள்  தம் அழகிய கையில் தாங்கிய   வெண்சாமரைகள்
தென்றல்  (போலும்)  இளங்காற்றை  வீசவும்; அந்தரவானநாடர்  அடி
தொழமுரசம்  ஆர்ப்ப
- ‘அந்தரம்’ எனப்படும் வான் நாட்டில் உள்ள
தேவர்கள்  அடிவணங்கி  நிற்க,  முரசங்கள்  ஆரவாரிக்க;   இந்திரன்
இருந்த தன்மை கண்டு  உவந்து இறைஞ்சிப் போனான்
- இந்திரன்
அரியணையில்  இருந்த  தன்மையைக்  கண்டு  மகிழ்ந்து    வணங்கிப்
போனான்.
 

                                                (52)
 

8755.

பூ அவர் மரத்தைப் போர்ப்ப அந்தரம் விரிந்து பொங்கும்
தேவர்தம் இருக்கையான் மேருவின் சிகர வைப்பில்,
மூவகை உலகும் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும்
காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரியக் கண்டான்.*

 

பூ அலர் மரத்தைப்  போர்ப்ப அந்தரம் விரிந்து  பொங்கும் -
மலர்கள்  விரிந்து  கற்பகத்  தருவைச்  சூழுமாறு  போல   விண்ணில்
விரிந்து உயர்ந்திருக்கின்ற; தேவர்தம் இருக்கை ஆன மேருவின் சிகர
வைப்பில்
   -     தேவர்களின்     இருப்பிடமான   மேருமலையின்
சிகரங்களாகிய  இடங்களில்; மூவகை  உலகும்  சூழ்ந்த முரண் திசை
முறையின்  காக்கும்
 -  மூவகையான  உலகத்தைச்  சூழ்ந்திருக்கின்ற
முரண்பட்ட  திசைகள்  எட்டையும்  முறைமையாகக்  காத்து  நிற்கின்ற;
காவலர் எண்மர் நின்ற தன்மையும்  தெரியக்  கண்டான் - திசைக்
காவலர்  எண்மரும்   நிற்கின்ற  தன்மையையும் தெளிவாகக் கண்டான்.
(அனுமன்).
 

                                                (53)
 

8756.

அத் தடங் கிரியை நீங்கி, அத் தலை அடைந்த வள்ளல்,
உத்தரகுருவை உற்றான்; ஒளியவன் கதிர்கள் ஊன்றி,