சிறப்புப் பெயர் தாங்கியவனும் ஆகிய சோழனுடையதுமாகிய; தெய்வப் பொன்னி நாட்டு உவமை வைப்பை - தெய்வத்தன்மையுடைய காவிரி பாயும் சோழ நாட்டுக்கு உவமையாகத் தக்க அந்த உத்தரகுருவை; புலன் கொள நோக்கிப் போனான் - அனுமன் கட்புலன் கொள்ளுமாறு கருத்தொடு நோக்கிச் சென்றான். |
வன்னி - ஓர்மரம். அதன் இலை சிவபெருமான் சூடுதற்குரியது. முன்பு கோசலத்தை “காவிரிநாடன்ன கழனி நாடு ஓரீஇ” (குகப்-1) எனக் கூறிய கம்பநாடன் இங்கு உத்தர குருவைக் காவிரி பாயும் நாட்டிற்கு உவமையாகத் தக்கதென்று கூறித்தனது நாட்டுப்பற்றைக் காட்டுகின்றான். ‘தியாகமாவிநோதன்’ என்பது முதற்குலோத்துங்கன் முதல் பல சோழ மன்னர்க்குப் பெயராக வருதலின் இதனைக் கொண்டு கம்பனின் காலத்தை வரையறுத்தற்கியலாமற் போகின்றது. |
(58) |
நீலமலைக்கு அப்பால் மருத்துமலையை அனுமன் காணுதல் |
| 8761. | விரிய வன் மேரு என்னும் வெற்பினின்மீது செல்லும் பெரியவன், அயனார் செல்வம் பெற்றவன், பிறப்பும் போர்ந்தான், அரியவன், உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து தோன்றும் கரியவன் என்ன நின்ற, நீல மால் வரையைக் கண்டான். |
வன்மேரு என்னும் வெற்பினின் மீதுவிரிய செல்லும் பெரியவன் - வலிய மேரு என்னும் மலையின் மீது (வேகந்தாங்காது) பிளவுறுமாறு செல்லும் பெரிய தோற்றத்தை உடையவனும்; அயனார் செல்வம் பெற்றவன் பிறப்பும் பேர்ந்தான் அரியவன் - பிரமனுடைய பட்டத்தைப் பெறப் போகின்றவனும், பிறவித் துன்பத்தினின்றும் நீங்கியவனும், குரங்கு வடிவினனுமாகிய அனுமன்; உலகம் எல்லாம் அளந்தநாள் வளர்ந்து தோன்றும் - உலகம் அனைத்தையும் அளந்த காலத்தில் பேருரு வினனாக வளர்ந்து தோன்றுகின்ற; கரியவன் என்ன நின்ற நீல மால் வரையைக் கண்டான் - திருவிக்கிரமனாகிய கரியவன் போல நின்ற பெரிய நீலமலையைக் கண்டான். |
(59) |