மட்டுமின்றிப் பிறரையும் செய்ய ஒட்டாமல் தடுத்து வந்தான். முனிவர்கள் பலரின் நல்லுரைகளைக் கேளாமல் விலக்கி வாழ்ந்தான். மக்கள் நலம் நாடிய முனிவர்கள் அவனைத் தருப்பைப் புல்லால் அடித்துக் கொன்றனர். மக்கள் தலைவனை இழந்தனர். தலைவன் இல்லாத நாடு நாடாக இராது என்பதனால் முனிவர்கள், அவனின் வலக்கையைக் கடைந்து தீ உண்டாக்கி, அத்தீயைக் கொண்டு பிரம்மனை நினைத்து யாகம் செய்தனர். அந்த யாகத்தில் வேள்வியில் பிருது என்பான் தோன்றினன். அவன் நாட்டின் மன்னன் ஆனான். ஆயினும் சிலகாலம் தலைவன் இல்லாது இருந்த நாட்டில் அராஜகம், முறையின்மைகள் பல தோன்றின; பூமி வளம் இழந்தது; வானம் பொய்த்து வறட்சி ஏற்பட்டது; மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகி இருந்தனர். முடி மன்னன் வந்த பின்னர் தங்கள் குறைகளைக் கூறி மக்கள் அழுதனர். உணவின்றி வருந்தும் தங்கட்கு உணவு உற்பத்திக்கு வழிகோலுமாறு வேண்டினர். அவர்களைக் காப்பதாகக் கூறிய பிருது மன்னன், யாகத்தில் தன்னொடு பிறந்த அறகவம் என்ற வில்லையும், உயர்ந்து நிறைந்த அம்புகளையும் கொண்டு தற்காப்போடு நில அன்னையை எதிர்த்து நின்றான். நில அன்னை பசு உருக்கொண்டு ஓடினாள்; அரசனும் விடாமல் பின் தொடர்ந்தான். பசு எங்கு ஓடினும் அதற்குப் புகல் இடம் ஒன்றும் கிடைக்காமையால் அரசனை அடைந்து'' எல்லா உணவுப் பொருள்களும் என்னிடம் பாலின் வடிவாக இருக்கின்றன. கன்று ஒன்றை உண்டாக்கி என்பால் அன்பு பெருகச் செய்து பாலை சுரக்கச் செய்து பலன் அடைந்து கொள்ளுங்கள். மேலும் என் பால் பூமியின் மேடு பள்ளங்களால் பாழ்பட்டும் பலர்க்குக் கிடைக்காமலும் போதல் ஆகாது. எனவே மேடு பள்ளமற்ற நிலையில் பூமியைச் சமப்படுத்திப் பயன் கொள்க எனவும் கூறியதாம். அரசன் அவ்வாறே தன் வில்லின் நுனியால் மேடுகளைத் தள்ளிப் பள்ளங்களை நிரப்பி, கன்று ஒன்றினை உருவாக்கிப் பசுவினிடம் நிறுத்தினான். |