8256.‘”தான் அந்தம் இல்லை; பல” என்னும், ஒன்று;
    “தனி” என்னும், ஒன்று; “தவிரா
ஞானம் தொடர்ந்த சுடர்” என்னும், ஒன்று;
    “நயனம் தொடர்ந்த ஒளியால்,
வானம் தொடர்ந்த பதம்” என்னும், ஒன்று; மறை
    நாலும் அந்தம் அறியாது,
“ஆனந்தம்” என்னும்; “அயல்” என்னும்!-ஆர், இவ்
    அதிரேக மாயை அறிவார்?
 

மறைநாலும்  - வேதங்கள் நான்கும்; அந்தம் அறியாது - உண்மை
முடிவு  தெரியாத காரணத்தால்; ஒன்று - (அவற்றில்) ஒரு  மறை; தான்
அந்தம்  இல்லை பல என்னும்
- உன் சொரூபம் எல்லையில்லாத பல
படித்தானது என்று கூறும்; ஒன்று - பிறிதொரு  மறை; தனி என்னும் -
ஒரே  மூர்த்தம்  என்று  கூறும்; ஒன்று  -  பிறிதொரு  மறை;  தவிரா
ஞானம் தொடர்ந்த  சுடர் என்னும்
- நீங்காத  ஞானம்  பொருந்திய
ஒளி என்று  கூறும்; ஒன்று - மற்றொரு  மறை;  நயனம்  தொடர்ந்த
ஒளியால் வானம் தொடர்ந்த பதம் என்னும்
- புறக்கண்ணால் காணக்
கூடிய  ஒளி  வடிவாகி  ஆகாயத்தை  இடமாகக்  கொண்டு  பொருந்தி
உள்ளது  என்று   கூறும்;   மறை  நாலும்  -  இவ்வாறு  வேதங்கள்
நான்கும்;   அந்தம்   அறியாது  -  உண்மைத்  தன்மையை  அறிய
முடியாமல்; ஆனந்தம்   என்னும் - பேரானந்த  மயமானது  என்னும்;
அயல்  என்னும் - வாக்கு  காயங்களுக்குக்  கோசரமாகாதது  என்றும்
கூறித் தடுமாறும் ஆகவே; இவ்  அதிரேகமாயை  - இந்த  மிக்கமாயச்
செயலை; ஆர் அறிவார் - யார் அறிவார்கள்.
 

திருமால்    இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் என்று சுட்டி
உணரப்படாது  வேதம் கிடந்து தடுமாறும்  வஞ்சவெளியாக இருப்பதை
இப்பாடல் உணர்த்தி நிற்கிறது.
 

                                                 (255)