(ப. இ.) சிவகுருவானவர் வடக்கு நோக்கி அமர்வர். சீவதீக்கை பெறுவோராகிய மாணவர் மெய்கண்டார் எனப்படுவர். அவர் சிவகுருவின் இடப்பாலாகிய மேற்பக்கம் அமர்வர். மேற்குத் திக்குப் பச்சிமம் எனப்படும். அந்நிலையில் சிவகுருவானவர் நாடொறும் மாணவரை நினையும்படி ஆணை ஈந்தது 'சிவசிவ' என்னும் செந்தமிழ் மறையே. அச் சிவன் உறையுமிடம் உச்சிக்குக் கீழும் உண்ணாக்குக்கு மேலும் ஆகும். அச் சிவனை விட்டு நீங்காத ஆவிக்கும் நனவில் உயிர்ப் படங்கலாகிய சாக்கிரத்தே அதீதத்தைப் புரியும் தவநிலையும் அதுவேயாம். அந் நிலையில் பிறப்புவழி உண்டாகாது. (அ. சி.) பச்சி......ஆசாரியன் - தீக்கை செய்யும்போது ஆசாரியன் வடக்கு முகமும் மாணவன் கிழக்கு முகமாகவும் இருக்க வேண்டும். ஆதலால் ஆசாரியனுக்கு மாணவன் மேற்கே வீற்றிருப்பதால் பச்சிம திக்கிலே என்றார். உச்சி.....வாதே - சிவம் இருக்கும் இடம். அதுதான் உயிர் நிலையும். உயிரைவிட்டு என்றும் பிரியாதவன். (3) 1750. பொட்டடித் தெங்கும் பிதற்றித் திரிவேனைப் பொட்டடித் துள்ளமர் மாசெலாம் வாங்கிப்பின் தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும் வட்டம1 தொத்தது வாணிபம் 2வாய்த்ததே. (ப. இ.) விரும்பியவாறு எல்லா இடங்களிலும் பிதற்றித் திரியும் அறிவில்லாத என்னை, விரும்பியவாறு தீவழியில் செல்லாது தடுத்து, ஆவியோடு ஒட்டி உள்ளுறைந்துள்ள மாசனைத்தும் அருளால் நீக்கினன். தன்னையும் என்னையும் தட்டொக்கமாறினன் என்பது சிவயநம - என்ற நிலையினைச் சிவசிவ என்றருள்வது. இம் மாறுதலாகிய வாணிபத்தால் பெரிய உழைப்பின்றிப் பண்டமாற்றுதலின்றிப் பெறும் ஊதியமாகிய வட்டம் வாய்த்தது. 'நம' வொடு இருந்த ஆருயிரைச் 'சிவ'வொடு இருக்குமாறு மாறினன் என்பதே மாறுதல். வட்டம் - வாசி. (அ. சி.) பொட்டடித்து - வெறும் வாயாடியாக. பொட்டடித்து - மாயையை நீக்கி. உள்ளமர் மாசு - கன்மமலம். தட்டொக்க - இருவினை ஒப்பு, மலபரிபாகம் உண்டாக. வட்.......த்தே-உலகப் பழமொழி. (4) 1751. தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன் இருக்கின்ற தன்மையை யேதும் உணரார் பிரிக்கின்ற விந்து பிணக்கறுத் தெல்லாங் கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே. (ப. இ.) சார்ந்திருக்கின்ற உலகுடல் உயிர்கள் அனைத்திற்கும் முழுமுதல்வன் சிவபெருமான். அவன் ஒன்றாய் வேறாய் உடனாய் என்றும் நின்றருளும் மெய்ப்புணர்ப்பு நிலையில் மெய்ம்மையினை ஒரு சிறிதும் உணரார். விந்துவாகிய மாயை, உடையானாகிய கடவுளையும்
1. வாசி தீரவே. சம்பந்தர். 1. 92 - 1. " திருஞான. 12."569. 2. தந்ததுன்தன்னைக். 8. கோயில் திருப்பதிகம், 10.
|