பக்கம் எண் :


திருச்செந்தூர்733

அந்த வாய் தந்தபற் சந்த மோகின்ப முத்தென:-

அழகிய மகளிர் வாயிலுள்ள பல் முத்து போன்றது என்று உவமித்து மகிழ்வர்.அவர்கள் புன்னகைப் புரிந்தால், காணிக்கையாகப் பொன்னகைத் தந்து பணிவர் காமுகர். அப்பல் ஒரு காலம் உதிர்ந்து போவதுதான். உதிர்ந்த பல் முத்து போலவா இருக்கும்?

வானில் தங்கு கார் பைங்குழல்:-

உதிர்ந்து போவதும், பஞ்சு போல் நரைத்துப் போவதும், கசக்கவில்லையானால் அழுக்குப் பிடித்து நாறுவதும் சிக்குப்பிடித்துச் சீரழிவதும் ஆகிய கூந்தலை வானில் தங்கும் கரிய மேகம் என்று வியந்து கூறுவர். இன்னும் என்ன என்னவோ உவமை கூறியுழல்வர்.

கொங்கை நீள் தண்பொருப்பென்று:-

ஒரு காலம் திரைத்துத் தொங்கியொழியுந் தனத்தினை நீண்ட மலை யென்று மதித்து மதிமயங்குவர். இவையனைத்துங் கானலை நீரெனக் கருதுவது போலாகும்.

“வனமழியு மங்கை மாதர்களின்
   நிலைதனை யுணர்ந்து தாளிலுறு
   வழியடிமை அன்பு கூருமது     சிந்தியாதோ”     
                          -(உததியறல்) திருப்புகழ்.

உலகோரை..........கொண்டல் நீ யென்று சொற்கொண்டு:-

மகளிரைப் புகழ்ந்து மதிமயங்கி மோகாந்தகாரம் மூடி, அவர்கட்கு அள்ளி வழங்குதற்கெனப் பொருளை நாடி, செல்வரைத் தேடிச்சென்று, அழகில்லாதவரை அநங்கனே என்றும், கொடாத லோபியைக் கொண்டலே யென்றும் பொய்மை யாகப் புகழ்ந்து பாடித் தலைமை சான்ற புலமையை அவமாக்குவர்.