தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 5.2 விடை  

    வினாக்களுக்குத் தக்கவாறு கூறப்படும் விடை எட்டு வகைப்படும். அவை,

    1) சுட்டு விடை
    2) மறை விடை
    3) நேர்விடை
    4) ஏவல் விடை
    5) வினா எதிர் வினாதல் விடை
    6) உற்றது உரைத்தல் விடை
    7) உறுவது கூறல் விடை
    8) இனமொழி விடை

    என்பன ஆகும்.

    சுட்டு மறைநேர் ஏவல் வினாதல்
    உற்றது உரைத்தல் உறுவது கூறல்
    இனமொழி எனும்எண் இறையுள் இறுதி
    நிலவிய ஐந்தும் பொருண்மையின் நேர்ப

    (நன்னூல் - 386)

    ஒன்றைக் கருதி அல்லது சுட்டிக்காட்டிச் சொல்லும் விடை சுட்டுவிடை எனப்படும்.

    ‘சென்னைக்குப் போகும் வழி யாது?’ என்னும் வினாவிற்கு ‘இது’ என்று சொல்வது சுட்டுவிடை எனப்படும்.

    ‘மாவீழ் நொச்சி என்பதற்குப் பொருள் யாது?’ என்பதற்கு ‘வண்டு விரும்பித் தேன் உண்ணும் நொச்சிப் பூ’ என்று விளக்கம்  கருதிக் கூறும் விடை முதலியன சுட்டுவிடை ஆகும்.
     

    வினாவிற்கு எதிர்மறையாகக் கூறும் விடை மறைவிடை எனப்படும்.

    செழியா, விளையாடினாயா? என்னும் வினாவிற்கு ‘விளையாட வில்லை’ எனக் கூறுவது மறைவிடை எனப்படும்.

    இங்கு மறை என்பது எதிர்மறை எனப் பொருள்படும்.

    நேர்விடை என்பது வினாவிற்கு உடன்பட்டுக் கூறும் விடையாகும்.

    செழியா, விளையாடினாயா? என்னும் வினாவிற்கு ‘விளையாடினேன்’ எனக் கூறுவது நேர்விடை எனப்படும்.
     

    வினாவில் உள்ள செயலை வினவியவரைச் செய்யச் சொல்வது ஏவல்விடை எனப்படும். வினவியவரையே ஏவுவதால் ஏவல்விடை  எனப்பட்டது.

    கபிலா, நீ பாடுவாயா? என்னும் வினாவிற்கு, ‘நீயே பாடு’ என்பது ஏவல்விடை எனப்படும்.

    வினவப்பட்ட வினாவிற்கு விடையாக வினாவாகவே விடை அளிப்பது வினா எதிர் வினாதல் விடை எனப்படும். 

    கபிலா, நீ பாடுவாயா? என்னும் வினாவிற்கு, ‘நான் பாடாமல் இருப்பேனா’ என விடையளித்துத் தான் அச்செயலைச் செய்யவிருப்பதை உறுதி செய்வது, வினா எதிர் வினாதல் விடை  எனப்படும்.
     

    வினவப்பட்ட வினாவிற்குத் தனக்கு நேர்ந்ததை விடையாகக் கூறுவது உற்றது உரைத்தல் விடை எனப்படும்.

    நீ படித்தாயா? என்னும் வினாவிற்குத் ‘தலைவலித்தது’ எனத் தனக்கு நேர்ந்ததைக் கூறுவதால் இஃது, உற்றது உரைத்தல் விடை எனப்பட்டது. இஃது இறந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் விடையளிப்பதாகும்.

    வினவப்பட்ட வினாவிற்குத் தனக்கு நிகழ உள்ளதை விடையாகக் கூறுவது உறுவது கூறல் விடை எனப்படும்.

    நீ படிப்பாயா? என்னும் வினாவிற்குத் ‘தலைவலிக்கும்’ எனத் தனக்கு நிகழ உள்ளதைக் கூறுவதால் இதனை, உறுவது கூறல் விடை எனப்பட்டது. இஃது எதிர்கால வினை கொண்டு முடியும்.

    ஒன்றை வினவ அதற்கு இனமான வேறு ஒன்றைக் கூறுவது இனமொழி விடை எனப்படும்.

    ‘துவரம் பருப்பு உள்ளதா’ என்னும் வினாவிற்குக் ‘கடலைப் பருப்பு உள்ளது’ என விடை கூறுவது, இனமொழி விடை எனப்படும்.

    துவரம் பருப்பு இல்லை எனக் கூறாமல், அதற்கு இனமான கடலைப் பருப்பு உள்ளது எனக் கூறியதால், இனமொழி விடை எனப்படும்.

    மேலே கூறப்பட்ட எண்வகை விடைகளுள் முதல் மூன்றையும் செவ்வன் இறை என்றும், ஏனைய ஐந்தையும் இறை பயப்பன என்றும் குறிப்பிடுவர். (செவ்வன் - நேரடியான, இறை - விடை; இறை பயப்பன - விடை தருவன; பயத்தல் - தருதல்)

    வினாவிற்குச் சொல்லப்படும் விடை நேரடியாக அமைவது செவ்வன் இறை எனப்படும். சுட்டுவிடை, மறைவிடை, நேர்விடை என்னும் மூன்றும் செவ்வன் இறை ஆகும்.

    வினாவிற்குச் சொல்லப்படும் விடைகள் நேரடியாக அமையாமல் வேறுவகையாக அமைந்தாலும், அவையும் வினாவிற்குரிய விடைப் பொருளைத் தருதலால் இறை பயப்பன எனப்பட்டன. ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை என்னும் ஐந்தும் இறை பயப்பன ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 17:01:54(இந்திய நேரம்)