தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உழவர் வாழ்க்கை

  • 3.5 உழவர் வாழ்க்கை

    உழவர்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்ட முக்கூடற் பள்ளுவில், பள்ளன், பள்ளி ஆகியோரிடம் நடைபெறும் சண்டைகளும், பிறவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

    • மூத்த பள்ளியின் முறையீடு

    மழை வெள்ளம் வந்து ஆற்றில் நீர் பெருகி உழவு வேலை தொடங்கும் சூழ்நிலை உருவாயிற்று. இந்நிலையில் பள்ளன் இளைய பள்ளியிடம் காதல் கொண்டு வேலை மறந்து கிடக்கிறான். இதனால் மூத்த பள்ளி பண்ணைக்காரனிடம் முறை இடுகின்றாள்

    ஆட்டுக்கிடைக்குக் காவலாகப் போக வேண்டிய பள்ளன் இளையாளைப் பிரிய மனம் இன்றி அவள் குடிசையிலேயே தங்கி விட்டான் ஆண்டே! (ஆண்டே = ஆள்பவர்/தலைவர்) இப்படி அவளுடன் படுத்துக் கிடக்கும் பள்ளன், பண்ணை வேலைகளைக் கெடுத்துவிடும் கள்ளன் ஆவான். அவளுக்காக மடலேறவும் (விரும்பிய பெண்ணை மணந்து கொள்ளப் பழங்காலத்தில் ஆண்கள் மேற்கொண்ட ஒரு வழக்கம் மடலேறுதல்) துணிந்தவன். காமப்பேய் பற்றி இருக்கும் உடலினை உடையவன். அவனுடைய கள்ளத்தனமான செயல்களை இன்னமும் நீர் அறியாது இருக்கின்றீர். இவனைச் சிறையிலே போட்டால்தான் வேலையிலே ஈடுபடுவான் ஆண்டே (முக்.பள். 85, 86)

    வரவை மீறிச் செலவு செய்பவனுக்குத் தரித்திரந்தான் வளர்ந்து கொண்டே போகும். கூத்தாட்டக்காரர்களுக்கும் கொட்டுக்காரர்களுக்கும் வாரி வாரி வழங்கி ஊதாரி ஆகிவிட்டான் ஆண்டே! காளை மாடுகள் சிலவற்றை அந்தப் புதியவனுக்குத் தந்து விட்டான். மற்றும் சிலவற்றை வில்லடிப் பாட்டுக்காரனுக்கு அளித்து விட்டான். பரத்தியிடம் (நெய்தல் நிலப்பெண்) வாங்கிய கருவாட்டிற்கும் கள்ளிற்கும் பணம் கொடுப்பதற்காக இருந்த ஐந்து பசு மாடுகளையும் கொண்டுபோய் விற்றுவிட்டான். இப்படிச் செய்வது அவமானம் அல்லவா என்ற எண்ணத்தையும் விட்டுவிட்டான். ஆண்டையே! இவன் இரண்டு கால்களிலும் விலங்கைப் பூட்டி வைப்பீரே! (முக்.பள். 87).

    இவன் பலராலும் ஏசப்படுவதற்கு என்றே வந்து பிறந்தானோ? வரவரக் கூச்சம் என்பதையே கூட மறந்துவிட்டான். வயலில் உழுவதைப் பற்றி இவன் கொஞ்சமும் நினைப்பது இல்லை. என்னைத் தேடி ஒரு கனைப்புக் கூடக் கனைப்பது இல்லை. (முக்.பள். 91).

    அவளுக்கு மீனைக் கொண்டு போய்க் கொடுப்பான். கருவாட்டு ஊனைக் கூட எனக்குக் காட்டாமல் அவளுக்கு மறைத்துக் கொண்டு போவான். நான் ஏதாவது சொன்னால் வீம்புக்காக என்னைப் போட்டு அடிப்பான். அவள் சொன்னால் பாம்பையும் கூடப் பிடிப்பான். இவ்வாறு மூத்த பள்ளி முறையிடுவதைப் பின்வரும் பாடல் விவரிக்கும்:

    மீனைக் கொண்டு அளிப்பான் - கருவாட்டு
    ஊனைக் கொண்டு ஒளிப்பான் - நான் சொன்னால்
    வீம்புக்கு அடிப்பான் - அவள் சொன்னால்
    பாம்பையும் பிடிப்பான்

                                     (முக்.பள். 90)

    (ஊன் = தசை)

    இவ்வாறாக மூத்த பள்ளி பலவாறாகப் பள்ளன் மேல் முறையீடு செய்கிறாள். இதனால் பண்ணைக்காரன் சினம் கொள்கிறான். திருமுக்கூடல் அழகர் ஏரிப் பற்றுகளிலே நீ ஆடு வைத்துத் தந்த விதமோ? மருதூர்ச் சங்காத்தி (சங்காத்தம் - நட்பு) வீட்டிலே கிடந்து உறங்கிய உறக்கமோ? நின் நெஞ்சைத் தொட்டுப் பாரடா? என்று சொல்லிப் பண்ணைக்காரன் சினத்தால் கண்கள் சிவந்தவனாகிறான். அங்கே வந்த பள்ளனின் காலிலே மரக்கட்டையைச் (தண்டனைக் கருவி) சேர்த்து அவனைக் காவலில் வைக்கிறான். பின்னர் மூத்த பள்ளி மனம் இரங்கி வேண்டப் பண்ணைக்காரன் பள்ளனை விடுவிக்கிறான்.

    3.5.1 பள்ளரின் தொழில்

    பள்ளன் விடுதலை ஆனவுடன் உழவுத் தொழில் தொடங்குகிறது. உழவு முகூர்த்தம் செய்வதற்காகச் சோதிடர்கள் நல்ல நாள் குறிக்கிறார்கள். சப்தமி திதியும், (சப்தமி நாள்) புதன்கிழமையும், சுவாதி நட்சத்திரமும் கூடிய நல்ல நாள் குறிக்கப்படுகிறது. இந்த நல்ல நாளில் நாள் ஏர் பூட்டப் பள்ளன் செல்கிறான். (முக்.பள். 114)

    சாத்தன், பெரியான், கூத்தன் முதலாகச் சேரியிலுள்ள பள்ளர் எல்லாம் கூடிக் குரவை இட்டு ஏர்மங்கலம் பாடி நாளேர் பூட்டி உழவைத் தொடங்கினார்கள் (முக்.பள். 115). ஏர்பூட்டி உழுது பின்பு அங்குள்ள பள்ளர்களை எல்லாம் கூப்பிட்டான், பள்ளன். எல்லோருடனும் கூடித் தொழுது தெய்வக் கடன்களை எல்லாம் செய்து கழித்தான்.

    அதன்பின் விதைகளை எடுத்துத் தெளிக்கத் தொடங்கினான். (முக்.பள். 121) விதைகள் முளைக்கத் தொடங்கின. நாற்றுகள் வளர்ந்தன. முறையாகத் தண்ணீர் விடப்பட்டது. அழகருடைய முக்கூடல் நகரிலே நாற்று நடுவதற்குரிய நாள் குறிக்கப்பட்டது. உழத்திகள் முக்கூடல் அழகரின் திருப்பாதங்களை வணங்கினர். நாற்று முடிகளை எடுத்து நெற்றியிலே வைத்துக் கொண்டு நாலுதிசையும் நோக்கி வாழ்த்திக் கும்பிட்டார்கள். பிறகு வயலில் நடத் தொடங்கினர். (முக்.பள். 125).

    பதிந்த நடவுகள் தேறிப் பசுமை நிறம் கொண்டன. பின்பு குருத்து அடர்ந்து நிலத்தில் பரந்து செறிந்தன. கதிர் விட்டு முற்றின. கதிர்கள் எல்லாம் நன்றாக முற்றி விளைந்த செய்தியைப் பண்ணைக்காரனிடம் பள்ளன் சென்று சொன்னான். பின்பு அறுவடைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. நாட்கதிர் கொள்வதற்குத் தெய்வ வழிபாடுகளைச் செய்தனர். உரிய பொருள்களையும் படையலாக இட்டனர். (முக்.பள். 138)

    பின்பு கதிர்களைக் கட்டிக் கொண்டு வந்து எருமைகளை விட்டுக் கதிர் அடித்தனர். தூசிகளைத் தூற்றித் தூய நெல்மணிகளைக் குவித்துப் 'பொலிபொலி' என்ற மங்கல ஒலியோடு அளந்து கட்டினர் (முக்.பள். 139). எது எதற்கெல்லாம் நெல் அளந்து கொடுக்கப்பட்டது என்பதைப் புலவர் பட்டியல் இட்டு உள்ளார்.

    அடியார்க்குச் சோறிடும் தினச்சத்திரம் பெரியநம்பி அய்யங்காருடைய திருமாளிகைச் செலவு ஏழு திருப்பதிகள் காவை வடமலையப்பப் பிள்ளையன் மடம் முதலியவற்றிற்கு நெல் கொடுக்கப்பட்டது. மேலும் ஆடித் திருநாளுக்கு 1000 கோட்டைகள் பங்குனித் திருநாளுக்கு 1000 கோட்டைகள் மண்டகப்படி (திருவிழாக்காலங்களில் செய்யும் செலவு) சாத்து (கடவுளுக்கு மாலை முதலியன அணிவித்தல்) வகைகளுக்கு 1000 கோட்டைகள் நா வாணர்களுக்கும் மறையவர்களுக்கும் (அந்தணர்) 4000 கோட்டைகள் தினப்பூசைக்கு 8000 கோட்டைகள் (முக்.பள். 141-149) இவ்வாறாக வயல் வேளாண்மை முடிந்து நெல் பங்கிட்ட முறை விளக்கப்பட்டுள்ளது.

    3.5.2 உழவுத் தொழிலின் ஆதாரம்

    உழவுத் தொழிலைத் தொடங்குவதற்கு மழை வேண்டும். உழவர்கள் / பள்ளர்கள் மழை வேண்டி வழிபாடு நடத்துகின்றனர். மழை பெய்வதற்கான அறிகுறியும் தோன்றுகிறது. அது மிகவும் சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது.

    • மழை வழிபாடு

    அழகருடைய நல்ல நாட்டிலே மழை வளம் சிறக்க வேண்டும் என்று மன்னர்கள் வழிபாடு நடத்துகின்றனர்; மழை வரம் வேண்டுகின்றனர்; சேரியிலே குரவை ஒலிக்கத் தெய்வத்தைப் போற்றினர் (முக்.பள். 32)

    பூலா உடையாருக்குப் பொங்கல் இட்டுத் தேங்காயும் கரும்பும் நிறைய படைத்தனர். குமுக்கா உடையார் அய்யனுக்குக் குங்குமத்தையும் சந்தனத்தையும் கலந்து சாத்திப் போற்றினர். கரையடிச் சாத்தானுக்குக் காப்புக் கட்டி ஏழு செங்கிடாய்களை வெட்டிப் பலியிட்டனர். புலியூர் உடையார் ஏற்றுக் கொள்ளுமாறு சேவலைச் சாத்திர முறைப்படி பலியிட்டனர். சாராயத்தையும், பனையில் இருந்து இறக்கும் கள்ளையும் வடக்குவாசல் செல்லி உண்ணுமாறு வைத்தனர். பள்ளர்கள் எல்லோரும் ஒன்று கூடினர். பண் பாடிப் போற்றினர். கூத்தாடித் தொழுதனர். அழகரின் திருநாமங்களை ஏத்தினர். (முக்.பள். 33, 34) (பூலா உடையார், கரையடிச் சாத்தான், புலியூர் உடையார், செல்லி - நாட்டுப்புறத் தெய்வங்கள்)

    • மழை அறிகுறி

    பள்ளர்கள் அனைவரும் மழை வேண்டித் தெய்வங்களை வழிபட மழைமேகம் சூழ்ந்தது. மழைக் குறி தென்பட்டது. எல்லாத் திசைகளில்இருந்தும் மேகங்கள் வரத் தொடங்கின.

    நண்பர்களே! இந்த மழைக் குறி பற்றிப் புலவர் பாடிய பாடல் சிறந்த இசைநயமும் அழகுணர்வும் கொண்டது. அறிவியல் செய்தி பொதிந்தது. நாளைய தினம் ஆற்றிலே வெள்ளம் வர இருப்பதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன. தென்மேற்குத் திசையிலே மலையாள மின்னல் மின்னிக் கொண்டுள்ளது. தென் கிழக்குத் திசையிலே ஈழத்து மின்னல் மின்னிக் கொண்டுள்ளது. நேற்றும் இன்றும் மரக்கொம்புகளைச் சுற்றியவாறு காற்று அடிக்கிறது. கிணற்றிலே உள்ள சொறித்தவளைகள் கூப்பாடு போடுகின்றன. நண்டுகள் தம் வளைகளுள் மழை நீர் புகுந்து விடாதபடி வாயில்களைச் சேற்றினால் அடைக்கின்றன. மழை நீரைத் தேடிக் கோடி வானம்பாடிகள் அங்கும் இங்கும் பறக்கின்றன. இவ்வாறாக மழை வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதனை விவரிக்கும் பாடல் வருமாறு:

    ஆற்று வெள்ளம் நாளை வரத்
    தோற்றுதே குறி - மலை
    யாளமின்னல் ஈழமின்னல்
    சூழ மின்னுதே
    நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக்
    காற்று அடிக்குதே - கேணி
    நீர்ப்படு சொறித் தவளை
    கூப்பிடுகுதே
    சேற்று நண்டு சேற்றில் வளை
    ஏற்று அடைக்குதே - மழை
    தேடி ஒருகோடி வானம்
    பாடி யாடுதே
    போற்றுதிரு மால்அழகர்க்கு
    ஏற்றமாம் பண்ணைச் - சேரிப்
    புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்
    துள்ளிக் கொள்வோமே

    (முக்.பள். 30)

    3.5.3 விதை வகைகளும் மாட்டு வகைகளும்

    உழவர்கள் பயன்படுத்திய நெல்விதைகளைப் பற்றியும், மாட்டுவகைகளைப் பற்றியும் விரிவான செய்திகள் இடம் பெற்றுள்ளன.

    • விதை வகைகள்

    முக்கூடற்பள்ளு உழவுத் தொழிலை மையமாக வைத்துப் பாடப்பட்டது. உழவுத் தொழிலுக்கு அடிப்படையான வித்து (விதை), மாடு, ஏர் ஆகியன பற்றிய விரிவான விளக்கங்களும் அவற்றின் வகைகளும் இங்கே கூறப்பட்டுள்ளன. இவை பழங்கால வேளாண்மைக் கலைச் சொல்லாக விளங்குவதை அறிய முடிகிறது. சீரகச் சம்பா, நெடுமூக்கன், மூங்கிற் சம்பா, கருங்குறுவை, புனுகுச் சம்பா, பூம்பாளை முதலிய இருபதுக்கும் மேற்பட்ட நெல்விதை வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன (முக்.பள்.109).

    • மாட்டு வகைகள்

    மேலே கூறப்பெற்ற பெயர்கள் நெல்வகையின் பெயர்களாகும். இதைப் போல் மாட்டுவகைகளுக்கும் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. குடைக் கொம்பன், குத்துக் குளம்பன், கூடு கொம்பன், மயிலை, மட்டைக் கொம்பன், கருப்பன், மஞ்சள்வாலன், வெள்ளைக்காளை முதலிய இருபதுக்கும் மேலான பல்வகை மாடுகளின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன (முக்.பள். 110). இப்பெயர்கள் மாட்டு வகைகளைக் குறிக்கும்.

    3.5.4 பள்ளியர் ஏசல்

    அறுவடைக்குப் பின் ஒவ்வொருவருக்கும் உரிய நெல் பங்குக் கணக்குகளைக் கூறிவந்த பள்ளன் மூத்த பள்ளி கணக்கை மட்டும் விட்டுவிட்டான். இதனால் மூத்தபள்ளி பள்ளன் மீதிலே கொடுமை சொல்லத் தொடங்கினாள். ''குடும்பன் மிகவும் கெட்டிக்காரன்! அவன் செய்த கர்வ மிகுந்த செயல்களையும் வஞ்சகமான செயல்களையும் நீங்களே கேளுங்களடி பள்ளியர்களே! பள்ளனுக்கு எப்போதும் அந்த மருதூர்ப் பள்ளி மீதுதான் ஆசை. பிள்ளையார் அடி வயலிலே (நெல் விளையும் வயல்களுக்கு வழங்கப்படும் பெயர்) உறை நெல் (உணவுக்குரிய நெல்) எடுத்தான். அதை அவள் கூலி நெல்லுடன் கலந்து அவள் பெட்டியிலே வைத்து விட்டான். எனக்குள்ள பங்கைக் கூட எனக்குத் தராமல் எல்லாவற்றையும் உழப்பிப் போட்டுவிட்டான். மண்ணும் கல்லும் அதனோடு கொஞ்சம் நெல்லும் கல்லும் பங்கு தந்தோம் என்று பேருக்கு எனக்குத் தந்தானடி பள்ளியரே'' என்று முறையிட்டாள் (முக்.பள். 150-152).

    இதனைக் கேட்ட இளைய பள்ளி, ''பள்ளியரிடம் முறையிட்டு என்னைப் பழித்து என்னடி பேச்சு முக்கூடற்பள்ளி, உன் பழைய செல்வம் எதையாவது எனக்குக் கொடுத்தானோ? தொண்டை கட்டிப் போகும்படி கூவாதேடி'' என்று திருப்பித் திட்டுகிறாள் (முக்.பள். 153).

    நாவி (புனுகுபூனை) என்றாய்! பூனை என்றாய்! மருதூர்ப்பள்ளி! இந்த நாவி நான்தானடி; பூனை மட்டுமல்ல, மூளி (அழகில்லாத / குறை உடைய) நாயும் நீதானடி.

    சாகத்துடிப்பவள் போல் ஆட்டம் போட வேண்டாம் முக்கூடற் பள்ளி! மிஞ்சிப் பேசில் நெஞ்சை யறுப்பேன் அஞ்சிப் பேசடி!

    மருதூர்ப் பள்ளி! உன்னைப் போல மந்திரமும் தந்திரமும் எனக்கு வகையாக வந்ததானால் பள்ளன் எனக்கு வசமாக மாட்டானோ?

    சந்தியில் கிடக்கும் மாங்கொட்டையடி நீ முக்கூடற் பள்ளி! உன்னைப் போலச் சாரங்கெட்ட மருதூர்க்காரி என்றோ என்னையும் நினைத்தாய்? (முக்.பள். 160)

    3.5.5 பிற செய்திகள்

    இதில் முக்கூடற்பள்ளு காட்டும் அக்காலச் சமயநிலையும் இலக்கியச் சிறப்பும் விளக்கப்படுகின்றன. இவ்வாறாக ஒருவர்க்கு ஒருவர் ஏசிக்கொள்ளும் பள்ளிகளின் ஏசல் இறுதியில் சமயச் சண்டையாக/சமயப்பூசல் ஏசலாக மாறுகிறது. சிவனை ஒருத்தியும் திருமாலை ஒருத்தியும் பழித்து உரைக்கின்றனர்.

    ஏசலில் சிவன், திருமால் ஆகியோரின் திருவிளையாடல், அவதாரச் செயல்கள் குறிப்பிடப்படுகின்றன.

    அவதார நிகழ்ச்சிகள் குறிக்கப்படுவதில் உள்ள ஒரு செய்தியை இங்கே குறிப்பிட வேண்டும். ஒரு அவதாரத்தில் உள்ள நிகழ்ச்சியை வேறொரு அவதாரத்தின் பெயரால் சுட்டப்படுவதைக் கூறலாம். உதாரணமாக அகலிகை நிகழ்ச்சி இராமாவதாரத்தில் வருகிறது. ஆனால் பாடல் அகலிகைக்கு விமோசனம் கொடுத்தவன் கண்ணன் என்று குறிப்பிடுகிறது.

    சாதிக்கிற தந்திரம் எல்லாம் உனக்குத்தான் வரும் மருதூர்ப்பள்ளி! நரிகளைப் பரிகளாக மாற்றிச் சாதித்தவன் உங்கள் சிவபெருமான் தானடி; இப்படிப் பேசிச் சாதிக்க வருகிறாய் முக்கூடற் பள்ளி! கல்லையும் பெண்ணாகச் சாதித்தவன் உங்கள் கண்ணன் தானடி (முக்.பள். 162).

    பெண் ஒருத்திக்காக ஆசைப்பட்டுப் பொன் மயமான பனிமலை ஏறிப் போனவன் உங்கள் சிவபெருமான் அல்லோடி என்றும்.

    காதல் கொண்டு தம்பியோடு சீதை பொருட்டாகக் கடல் கடந்து போனான் உங்கள் கண்ணன் அல்லோடி என்றும் பள்ளியர்கள் பேசுவதைக் கீழ்வரும் பாடல் காட்டுகிறது.

    மாதொருத்திக்கு ஆசைப்பட்டுப்
    பொன்னின் மாயமாம் - பனி
    மலையேறிப் போனான் உங்கள்
    மத்தன் அல்லோடி

    காதலித்துத் தம்பியுடன்
    சீதை பொருட்டால் - அன்று
    கடலேறிப் போனான் உங்கள்
    கண்ணன் அல்லோடி

    (முக்.பள். 165)

    (மத்தன் = சிவன்)

    அடுத்து வருவது பெரியபுராணத்தில் வரும் செய்தி. சுந்தரமூர்த்தி நாயனார் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சிவபெருமான் ஒரு முதியவர் வடிவில் சென்று, திருமணத்தைத் தடுத்தார்; சுந்தரர் தமக்கு அடிமை என்று வாதிட்டார். இதனால் கோபமுற்ற சுந்தரர் அந்த முதியவரைப் பார்த்துப் 'பித்தரோ நீர்!' என்று கேட்டு ஏசுகிறார். (தடுத்தாட்கொண்டபுராணம்) இந்தச் செய்தியையே மூத்த பள்ளி இங்கே குறிப்பிடுகிறாள். சுந்தரன் திருமணத்திலே வல்வழக்குப் பேசிச் சென்று அவன் வாயால் வையக் கேட்டு நின்றான் உங்கள் ஐயன் (சிவன்) அல்லோடி.

    சிசுபாலன் புலிபோல எழுந்து நின்று வையவே சபை நடுவிலே ஏழை போல ஒடுங்கி நின்றான் உங்கள் நீலவண்ணன் (கண்ணன்) அல்லோடி!

    வலிய வழக்குப் பேசிச் சுந்தரன் வாயால் அன்று
    வையக் கேட்டு நின்றான் உங்கள் ஐயன்
    அல்லோடி
    புலிபோல் எழுந்து சிசுபாலன் வையவே - ஏழை
    போல நின்றான் உங்கள் நெடுநீலன் அல்லோடி

    (முக்.பள். 167)

    (சிசுபாலன் = பாரதத்தில் வரும் ஒரு பாத்திரம், நீலன் = திருமால்)

    இடுப்பிலே சுற்றிக் கட்டுவதற்கு நாலுமுழத் துண்டு கூட இல்லாமல் புலித் தோலை உடுத்திக் கொண்டான் உங்கள் சோதி (சிவன்) அல்லோடி. கற்றையாகச் சடையைக் கட்டி இடுப்பில் மர உரியையும் (ஆடை) கட்டிக் கொண்டான் சங்கு கையனாகிய உங்கள் திருமால் அல்லோடி


    சுற்றிக் கட்ட நாலுமுழத் துண்டும் இல்லாமல் - புலித்
    தோலை உடுத்தான் உங்கள் சோதி அல்லோடி
    கற்றைச் சடை கட்டி மரஉரியும் சேலைதான் - பண்டு
    கட்டிக் கொண்டான் உங்கள் சங்குக் கையன்
    அல்லோடி

    (முக்.பள். 169)

    (சோதி = சிவன், சங்குக் கையன் = திருமால்)

    ஏறிச் செல்வதற்குத் தக்க ஒரு வாகனமும் இல்லாமல் மாட்டின்மேல் ஏறித் திரிந்தான் உங்கள் ஈசன் அல்லோடி! வீறாப்பான பேச்சு என்னடி? அந்த மாடு கூட இல்லாமல் போனதால்தான் பறவை (கருடன்) மீது ஏறிக் கொண்டான் உங்கள் கீதன் அல்லோடி!


    ஏறவொரு வாகனமும் இல்லாமையினால் - மாட்டில்
    ஏறியே திரிந்தான் உங்கள் ஈசன் அல்லோடி
    வீறு சொன்னது என்ன மாடுதானும் இல்லாமல்-பட்சி
    மீதில் ஏறிக்கொண்டான் உங்கள் கீதன் அல்லோடி

    (முக்.பள். 171)


    (பட்சி = பறவை, கீதன் = திருமால்)

    இவ்வாறு பேசிக்கொண்டே வந்த இருவரின் ஆத்திரமும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டே வந்தது. அவர்கள் பேச்சிலே ஒத்துப் போகும் எண்ணமும் பிறந்தது.

    ''மருதூர்ப் பள்ளி என்னதான் கோபப்பட்டாலும் சீர் அழியச் சொல்லலாமோ?'' என்று மூத்தபள்ளி கேட்க இளையபள்ளி ''முதலில் வைதவரை வாழ்த்தினவர் உலகத்தில் உண்டோ'' என்று வினவிச் சமாதானம் ஆனாள் (முக்.பள். 173)

    ''நீயும் பொறு. நானும் பொறுத்தேன். நம் உறவினர்கள் சூழ்ந்திருக்க நாம் இருவருமே ஒற்றுமையாகக் கூடி வாழலாம்'' என்று கூறிய பள்ளியர் முக்கூடல் அழகர் பாதங்களை வாழ்த்திப் பாடுகின்றனர். சமாதானம் ஆகி ஒன்று சேர்கின்றனர்.

    இவ்வாறாகப் பள்ளியர் சண்டை முடிவுக்கு வருவதோடு முக்கூடற் பள்ளு நிறைவு பெறுகின்றது. சைவ, வைணவப் பூசல் அந்தக் காலத்தில் இருந்ததை ஏசல் வெளிப்படுத்துகிறது. என்றாலும் இரு சமயங்களின் பிணைப்பை நிறைவாக வலியுறுத்தி முழுமை பெறுகிறது. பள்ளியர் ஏசுவது என்பது திட்டிக் கொள்வதாக ஆகாது. ஏசுதல் என்ற உத்தி மூலம் சமயப் பெருமையைக் கூறுவதே நோக்கமாகும்.

    • சிலேடை

    விதை வகைகள் மாட்டுவகைகள் முதலியவற்றைக் கூறும் புலவர் சிலேடை நயம் தோன்றுமாறு பாடலை அமைத்துள்ளார். ஒரு சில சான்றுகளைப் பார்ப்போம்.

    • ஆயிரம் மல்லியன்

    மாடுகள் பற்றிப் பண்ணைக்காரனிடம் கூறிவரும் பள்ளன் ஆயிரம் மல்லியன் எனும் மாடு மேல்திசை நோக்கி ஓடிப்போனது; அது எங்குப் போயிற்றோ இன்னமும் திரும்பி வரக்காணோம் என்று கூறுகிறான். இக்கூற்றில் ஒரு சிலேடை மறைந்துள்ளது. ஆயிரமல்லியன் என்பது ஆயிரமல்லி என்ற ஊரில் வாங்கிய மாடு என்று பொருள்படும். இதனைப் பிரித்து ஆயிரம் அல்லியன் என்று பொருள் காணமுடியும். ஆயிரம் அல்லி மலர்களை மலரச் செய்த சந்திரன் என்று ஒரு பொருள் உண்டு. ஆயிரம் இதழ்களை உடைய தாமரையை மலரச் செய்த சூரியன் எனவும் ஒரு பொருள் உண்டு. இவ்வாறு மலரை மலரச் செய்தவன் மேல் திசையில் மறைந்தான் என்பது இத்தொடரின் சிலேடைநயம் ஆகும்.(முக்.பள்.70).

    'ஒற்றைக் கொம்பன் எனும் காளையைத் தாண்டவராயன் என்பவன் உள்ளூர்க் கோயிலில் அடைத்து வைத்துவிட்டான் என்று ஒற்றைக் கொம்பன் காளையைப் பற்றிப் பள்ளன் கூறினான். இத்தொடரிலும் ஒரு சிலேடை உள்ளது. ஒற்றைக் கொம்பனாகிய யானைமுகனைத் (விநாயகன்) தாண்டவராயனாகிய சிவபெருமான் (நடராசன்) தன்னோடு கோயிலிலேயே வைத்துக் கொண்டான் என்பது சிலேடை ஆகும். (முக்.பள்.71).

    இவ்வாறு புலவர் சிலேடைநயம் தோன்றுமாறு பாடல்களை அமைத்தவிதம் படித்து இன்பம் அடையத்தக்கது.

புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 18:14:07(இந்திய நேரம்)