Primary tabs
-
மரக்காயர் பட்டினம்
அறிமுகம் :
இலக்கியம் மற்றும் வெளிநாட்டினர் குறிப்புகளில் காணப்படாத கடற்கரை பட்டினங்களில் மரக்காயர் பட்டினமும் ஒன்றாகும்.
அமைவிடம் :
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழக இணையமான நீரகழாய்வு மையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் கடற்கரையை ஒட்டிய ஊராக மரக்காயர் பட்டினம் அமைந்துள்ளது.
சிறப்பு :
பாண்டிய நாட்டில் இடைக்காலத்தில் சிறந்து விளங்கிய துறைமுகங்களாக எ.அப்பாதுரை (A.Appadurai, Economic Conditions in Southern India, University of Madras, 1936) குறிப்பிடுவதில் மரக்காயர் பட்டினமும் ஒன்றாகும். எனினும், கல்வெட்டுகளில் இவ்விடம் குறித்த செய்திகள் எதுவும் காணப்படவில்லை. இவ்வூரின் பெயரில் வருகின்ற ‘பட்டினம்’ என்ற பின்னொட்டும், இங்கு கள ஆய்வில் கிடைக்கப்பெற்ற கல்நங்கூரமும் இது துறைமுகமாக ஒரு காலத்தில் இருந்ததை உணர்த்துகின்றது. இசுலாம் மதம் சார்ந்த மரக்காயர்கள் இவ்வூரில் மிகுதியாக வசிக்கின்றனர். கி.பி 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ் எழுத்துப்பொறிப்புகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட வெண்கலத்தாலான மணி (bell) ஒன்று நியூசிலாந்து, வெல்லிங்டன் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இம்மணி வக்குசு என்பவரின் கப்பலுக்கு உரியது என்பதை எழுத்து வாசகம் மூலம் அறியமுடிகிறது. இதில் குறிப்பிடப்படும் வக்குசு என்பவர் மரக்காயர் பட்டினத்தைச் சேர்ந்தவர் என்பதும் இவர் அக்காலத்தில் வாணிபத்தில் முக்கியத்துவம் பெற்றவராக விளங்கியதோடு பல கப்பல்களுக்கு உரிமையாளராக இருந்தவர் என்பதையும் கட்டுரையாளர் இப்பகுதியில் 1988-1989இல் மேற்கொண்ட கள ஆய்வின் போது இவ்வூரில் அப்போது 101 வயதுடன் வாழ்ந்து வந்த முன்னாள் கப்பல் மாலுமியான ஹபீப் மரக்காயர் அவர்களின் மூலமாக சேகரித்த செய்திகளிலிருந்து தெரியவருகிறது. எனவே, மேற்சுட்டிய செய்திகளும் ஜகார்த்தாவில் உள்ள தமிழ்க் கல்வெட்டில் (பார்க்க:மரக்காயர்) குறிப்பிடப்படும் ‘மரக்கலநாயன்’ போன்ற சான்றுகளும் இவ்வூர் தொடர்ந்து மரக்காயர்களுடன் தொடர்புடையதாக இருந்து வருவதோடு இடைக்காலத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை பட்டினமாகவும் சிறந்து விளங்கியது என்பதை வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாம்.