தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

  • அரச மரம்

    மூலிகை வேதிமக்கூறுகளும் மருத்துவப் பயன்களும்


    முனைவர் வீ.இளங்கோ,
    உதவிப்பேராசிரியர்,
    சித்த மருத்துவத்துறை


    தமிழ் மருத்து நூலான அகத்தியர் குணபாடம் இதன் வேறு பெயர்களைக் கூறுகிறது. அவை திருமரம், கணையம், பிப்பிலம், அச்சுவத்தம் ஆகியன. இது தெய்வத்தன்மை உடையதெனக் கருதப்படுவதால் கோயில்களில் வளர்க்கப்படுகிறது. இதன் இலை, விதை, பட்டை மற்றும் வேர்கள் மருந்தாகப் பயன்படுகின்றன.

    அரச மரத்தின் செயற்பண்புக் கூறுகள்

    அரசமரத்தின் பட்டையில், டானின், சப்பானின் பிளவனாய்டுகள், ஸ்டீரீராய்டு, டெர்பினாய்டு மற்றும் இருதய கிளைக்கோசைடுகள் உள்ளதெனக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பட்டையில் பெர்கேப்டன், வைட்டமின் K மற்றும் பைக்கோ ஸ்டீரோலின் ஆகிய வேதிமங்கள் உள்ளன. மேலும் இதன் பட்டையில் லியூகோ, பெனக்சானிடின், லிப்பியால் அசிடேட், லியூக்கோ ஆந்தோ சைனிடின் ஆகிய பாலிபீனால்கள் உள்ளன. மேலும், இதன் பால மற்றும் பட்டையில் அமினோ அமிலங்கள் உள்ளன. இதன் பாலில் இம் மரத்துக்கே உண்டான முக்கியக் குறியீட்டு வேதிமமான ரிலிஜியோசின் என்ற புரோட்மீயல் என்ற வேதிமம் உள்ளது. இது ஒரு புரத அமிலமாகும். அரசமரத்தின் பட்டை, மற்றும் வடியும் பாலில் அதிக அளவு பிளேவனாய்டுகள் குவர்செட்டின், கேம்பிரால் மற்றும் ராம்நெட்டின் ஆகியவை உள்ளன.

    அரச மரத்தின் மருத்துவப் பயன்கள்

    அரச மரத்தின் இலைக்கொழுந்தில் சூலகத்தில் உண்டாகும் குறைபாடுகளை நீக்கி சூல்கொள்ளும் செயல்திறன் உடையதாகப் பயன்படுகிறது. அரச மரத்தினைச் சுற்றியுள்ள களத்திலேயே இத்தகைய மருத்துவப் பயன்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் இலைப்பொடி மலச்சிக்கலை நீக்கிப் பசி உண்டாக்கப் பயன்படுகிறது. பட்டைத்துளை வெளி உபயோகமாகப் புண்கள் குணமாக்கப் பயன்படுகிறது. அரசம்பட்டைக் குடிநீர் வாய்ப்புண்கள், வெள்ளைப்படுதல், நீர்க்கடுப்பு ஆகியவற்றைக் குணமாக்குகிறது. இம்மரத்தில் வளரும் புல்லுருவி பெண்களின் சூல்நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. அரசமரப் பட்டைக் குடிநீர் விக்கல் மற்றும் தீப்புண்களுக்கும், இலைச்சாறு தோல் நோய்களுக்கும் பயன்படுகிறது. மேலும், அரச இலைச்சாறு பல்வலி குணமாக்கவும், ஆஸ்துமா, இருமல் ஆகியவற்றுக்கும், சிறுநீர் இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும் மருந்தாகப் பயன்படுகிறது.

    அறிவியல் ஆய்வுகள்

    உலகின் பல்வேறு ஆய்வகங்களில் மேற்கொண்ட மருந்தியல் ஆய்வுகளில், அரசமரப்பட்டையின் வடிச்சாறு செயற்கையாக உண்டாக்கப்பட்ட நீரிழிவு நோயில் தோன்றும் அதிகரித்த இரத்த சர்க்கரையைக் குறைக்க வல்லதெனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இவ்வடிச்சாறு இன்சுலின் சுரப்பை அதிகரித்து கிளைகோஜன் சேமிப்பை ஊக்குவித்து ஆய்வக நீரிழிவு நோய்குணப்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அரச மரப் பட்டையில் பைட்டோஸ்டீ«ரொலின் மூலிகை வேதிமக்கூறு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வல்லதெனக் கண்டறியப்பட்டுள்ளது. வாத அழற்சி நோயில், நோய்க்கான காரணிகளை அழித்து பல்வேறு சுரப்புச் சிதைவு நோய்களையும் குணமாக்கும் செயல்திறன் பெற்றுள்ளதென்பதை ஆய்வகச் சோதனைகள் உறுதிசெய்துள்ளன. மேலும் வலிபோக்கும் செயல்திறன் அதிவளியேற்றத்தைக் குறைக்கும் செயல்திறன் பெற்றுள்ளதென்பதை ஆய்வகச் சோதனைகள் உறுதிசெய்துள்ளன. மேலும், வலிபோக்கும் செயல்திறன் அதிவளியேற்றத்தைக் குறைக்கும் செயல்திறன் ஆகிய மருத்துவக் குணங்கள் கொண்டுள்ளது. இதன் பழங்களிலிருந்து பெறப்படும் பகுதி வடிச்சாறு மின்சாரம் மற்றும் பிகரோடாக்சின் வேதிமம் மூலம் தூண்டப்படும் வலிப்பு நோயைக் குணப்படுத்தும் செய்கை கொண்டுள்ளன. இது பல்வேறு பாக்டீரியா சத்துக்கள் அழிக்கும் திறன் பெற்றுள்ளதென்று நுண்ணுயிர் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இதன் பட்டையிலிருந்து பெறப்படும் மெத்தனால் வடிச்சாறு நோய்களின்போது தோன்றும் பாக்டிரியாக்களை அழிப்பதற்கும் புழுக்களின் முட்டைகளை அழித்துப் புழுக் கொல்லியாகவும் பயன்படுகிறது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:14:02(இந்திய நேரம்)