தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Vaigai

  • வைகை

    வைகை அல்லது வைகையாறு என்பது தென் இந்தியாவின் தமிழகத்தில் பாயும் ஆறுகளுள் ஒன்று. மேற்குத் மலைத் தொடரில் உள்ள பெரியாறு பீடபூமியில் தோன்றி வடகிழக்காகப் பாய்ந்து, வடக்கே பழனி குன்றுகளாலும் தெற்கே வருசநாடு குன்றுகளாலும் அரண் செய்யப்பட்டுள்ள கம்பம் பள்ளத்தாக்கை அடைகிறது.

    வைகையாறு

    பின்னர் வருசநாடு குன்றுகளின் கிழக்கு மூலையை அடைந்ததும், தென் கிழக்காகத் திரும்பி மதுரை மாநகர்வழி பாய்ந்து (இராமநாதபுரம்) மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் பாக்கு நீரிணையில் கலக்கிறது.வைகை ஆற்றின் நீளம் 258கி.மீ. பாசனப் பரப்பு 7031ச.கி.மீ. பொதுவாக மழைக்காலத்தில், குறிப்பாக வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மட்டும் இவ்வாற்றில் நீர்ப்பெருக்கு ஏற்படும்.

    வைகை ஆற்றுப்படுகை

    இவ்வாற்றுப் படுகை 9º 15’ மற்றும் 10º 20’ வடக்கு ரேகைக்கு இடையிலும், 77º 10’ மற்றும் 79º 05’ கிழக்கு ரேகைக்கு இடையிலும் அமைந்துள்ளது. மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் என மொத்தம் 7031 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. பெரியாறு அணை, வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, மருதநதி அணை, சாத்தையாறு அணை ஆகியவை இந்தப்படுகையில் உள்ள அணைகளாகும்.

    துணை ஆறுகள்

    சுருளியாறு, தேனியாறு, வட்டாறு, வராகநதி, மஞ்சளாறு, நாகலாறு, மருதநதி, சிறுமலையாறு, சாத்தையாறு முதலியவை வைகையின் துணை ஆறுகளாகும். பழனி மலையில் உற்பத்தியாகும் வராகநதி கொடைக்கானல் மலையிலிருந்து வரும் பாம்பாற்றுடன்(வெள்ளி அருவி உள்ள ஆறு) இணைந்து தேனிக்குக் கிழக்கே குன்னூருக்குத் தெற்கில் வைகையுடன் கலக்கிறது.

    சுருளியாறு

    பின்னர் முல்லையாறாகப் பயணித்து, இவ்வாறு பயணிக்கும் பொழுது சுருளியாறு இதனுடன் கலக்கிறது, பின்னர் வள்ளல் நதி என்று சொல்லப்படும் வருசநாட்டு பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் நதியுடன் கலந்து வைகையாறாக வைகை அணையைச் சென்று அடைகிறது. மேலும் கொடைக்கானல் மலையிலிருந்து உருவாகும் ஆறுகளும் பெரியகுளம் வழியாகச் சென்று வைகை அணை முன்பு இந்த ஆற்றில் கலக்கிறது. அவ்வாறு கலக்கும் ஆறுகளில் மஞ்சளாறு, வராக நதி குறிப்பிடத்தக்கது ஆகும். 1895ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின்படி, கேரள, தமிழக எல்லையில் உற்பத்தியாகும் பெரியாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் (இந்த நீர் தேக்கம் ஆங்கில பொறியாளரான பென்னி குக்கு என்பவரால் தனது சொந்த பணத்தால் கட்டப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது) கட்டப்பட்டு ஒரு பகுதி நீர் மேற்கு மலைத் தொடர்ல் உருவாக்கப்பட்டுள்ள ஒரு குடைவின் மூலம் வைகையில் திருப்பிவிடப்படுகிறது.

    அணைகள்

    இதன் தொடக்கம் கேரளா - தமிழ்நாடு எல்லையில் உள்ள தேக்கடி என்னும் பெரியாறு தேக்கத்தில் தேக்கப்படுகிறது.

    வைகை அணை

    இது கேரளம் தமிழ்நாடு எல்லையில் இருப்பதால் இரு மாநிலங்களுக்கிடையே முல்லைப் பெரியாறு சிக்கல் தொடர்கிறது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து 7கி.மீ தொலைவில் உள்ள நரசிங்கபுரத்தில் வைகை அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் 21.64மீ (71அடி). மொத்த கொள்ளளவு 6091 மில்லியன் கன மீட்டர் (172 மில்லியன் கன அடி). நிலக்கோட்டை அருகில் உள்ள பேரணை, மதுரை விரகனூர் மதகு அணை போன்றவை வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குறிப்பிடத்தகுந்த பிற அணைகளாகும்.

    பண்பாட்டு முக்கியத்துவம்

    தமிழ் இலக்கியத்தில் வெகுவாக வைகை புகழப்பட்டுள்ளது."வையை என்னும் பொய்யாக் குலக்கொடி", "ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை" என்பன போன்ற தொடர்கள் நிலவுகின்றன. வடமொழி நூல்கள் வைகை ஆற்றை "கிருதமாலா" ஆறு என்று குறிக்கின்றன. இபின் பட்டுடாவாலும் மார்க்கோபோலோவாலும் வைகை ஆறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஏராளமான தமிழ்த் திரைப்படப் பாடல்களிலும் வைகையாறு குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணமுடியும். ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் "வைகை ஆற்றில் இறங்குதல்" பல்லாயிரக் கணக்கானோரை ஈர்க்கிறது. தனிநபர்களின் இயற்பெயர்களிலும், புனைபெயர்களிலும் மேலும் அங்காடிகள், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றின் பெயர்களிலும் "வைகை" இடம்பெறுவது கண்கூடு. வைகை வினாவு வண்டி அத்தகையவற்றுள் முக்கியமான ஒன்று.

    வைகையுடன் தொடர்புடைய திருவிழா

     

    மதுரை மீனாட்சியம்மன்
    கோயில் கோபுரம்

    சித்திரைத் திருவிழா மதுரையில் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழாவிற்கும், வைகை ஆற்றிற்கும் மிகுந்த தொடர்புண்டு.

    அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா

    மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்தைக் காணவரும் அழகர் வைகை ஆற்றைக் கடந்து திருமணத்திற்கு செல்கையில், சில காரணங்களால் வைகை ஆற்றிலிருந்த படியே மீண்டும் தன் இருப்பிடம் சென்று விடுவார். அப்போது அங்கே அவருக்கு பல்வேறு ஆராதனைகளும், பக்தர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் அரங்கேறும். அதே மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு, உணவு உண்ண வந்த குண்டோதரனின் தாகத்தை அடக்க, சிவபெருமான் வைகை ஆற்றினைப் பயன்படுத்தியதாகவும் புராணங்கள் கூறும்.

    வள்ளல் நதியும் வைகையும்:

    வைகை ஆற்றிர்க்கு இரண்டு இடங்களில் இருந்து நீர் ஆதாரங்கள் கிடைக்கின்றது. அவற்றில் ஒன்று முல்லைப் பெரியாறு அணை. மற்றொன்று வருசநாடு பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் ஆறு (இது அரசின் பேரேட்டில் மட்டுமே இவ்வாறு உள்ளது ஆனால் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த ஆற்றையும் வைகை ஆறு என்றே அழைக்கின்றனர்).
    இந்தப் பகுதி மக்களுக்கு ஆறும் ஆற்றைச் சார்ந்த பகுதியும் (வேளாண் நிலங்களின் விளைபொருள்கள்) இவர்களின் வாழ்வாதரங்கள்.இங்கு உள்ள வேளாண் நிலங்கள் 90% கிணற்று-ஆற்றுப் பாசனத்தையும், 10% ஆற்றுப்பாசனத்தையும் நம்பி இருக்கின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:00:15(இந்திய நேரம்)