பக்கம் எண் :

159
 

(பொ-ள்.)மெல்லிய நல்லாருள் மென்மை - மென்றன்மையுடைய மகளிரிடம் மென்றன்மையாகவும், அது இறந்து ஒன்னாருள் கூற்று உட்கும் உட்கு உடைமை - பகைவரிடத்தில் அம் மென்றன்மை நீங்கிக் கூற்றுவனும் அஞ்சும் மிடுக்குடைமையாகவும், எல்லாம் சலவருள் சாலச்சலமே - முழுதும் பொய்ராயனாரிடத்து மிக்க பொய்ம்மையாகவும், நலவருள் நன்மை - மெய்யியல்புடைய மேலோரிடம் மெய்ம்மையாகவும், வரம்பாய் விடல் - அவ்வவற்றின் எல்லையாய் நடந்துகொள்க.

(க-து.)மாந்தரின் பல்வேறு நிலைக்கு ஏற்பப் பல்வேறு வகையாக உலகத்தில் நடந்துகொள்ள வேண்டும்.

(வி-ம்.)முன்னிரு வரிகள் மென்மைக்கும் ஆண்மைக்கும் பின்னிரு வரிகள் பொய்ம்மைக்கும் மெய்ம்மைக்கும் வந்தன. ‘நல்லார்' என்றது, ஈண்டுச் சிறப்பாய் மகளிரை யுணர்த்திற்று. "மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து"1எனப் பிறரும் இக் கருத்தியைபு கூறுமிடத்தான் அறிக. உட்கு, ஈண்டு மிடுக்கு; எல்லாம், முழுமையென்னும் பொருட்டு, நன்மை, சலம் என்பதன் மறையாக வந்த மையின் மெய்ம்மையென் றுரைக்கப்பட்டது. ‘வரம்பாய் விடல்' என்றார், அவ்வக்குணங்களின் மேனிலையுடை யீராய் நடந்து கொள்க என்றற்கு, பொய்யற்குப் பொய்யரா யொழுகுதல், அவர் திருந்தும் பொருட்டும் அவரால் தாம் ஏதமுறாமைக்கும் என்க.

(8)

189. கடுக்கி யொருவன் கடுங்குறளை பேசி
மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
துளக்க மிலாதவர் தூய மனத்தார்;
விளக்கினுள் ஒண்சுடரே போன்று.

(பொ-ள்.)கடுக்கி ஒருவன் கடுங்குறளை பேசி மயக்கி விடினும் - ஒருவன் முகஞ் சுளித்துப் பிறரைப்பற்றிக் கொடிய கோளுரை கூறித் தம்மை மயக்கினாலும், மனப் பிரிப்பு ஒன்று இன்றித் துளக்கம் இலாதவர் - அப் பிறர்பால்


1. புறம். 221 : 5.