பக்கம் எண் :


1192 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 
 14. ஆனாய நாயனார் புராணம்

                           தொகை

     "அலைமலிந்த புனன்மங்கை ஆனாயர்க் கடியேன்"

                             - திருத்தொண்டத்தொகை

                            வகை

  தாயவன் யாவுக்குந் தாழ்சடை மேற்றனித் திங்கள்வைத்த
தூயவன் பாதந் தொடர்ந்துதொல் சீர்துளை யாற்பரவும்
வேயவன் மேன்மழ நாட்டு விரிபுனன் மங்கலக்கோன்
ஆயவ னானாய னென்னை யுவந்தாண் டருளினனே.
 

                       - திருத்தொண்டர் திருவந்தாதி

                          விரி

926.



மாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்,
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற,
ஈடு பெருக்கிய போர்களின் மேக மிளைத்தேற,
நீடு வளத்தது மேன்மழ நாடெனு நீர்நாடு.



1

     புராணம் :- ஆனாயர் என்ற பெயராலறியப்படும் நாயனாரது சரித
வரலாறும் பண்புங் கூறும் பகுதி. நிறுத்த முறையானே இலை மலிந்த
சருக்கத்து ஏழாவது ஆனாய நாயனாரது புராணங்கூறத் தொடங்குகின்றார்.

     தொகை :- அலைகள் பெருகிய புனல் சூழ்ந்த திருமங்கலம் என்ற
தலத்தில் அவதரித்த ஆனாயருக்கு அடியேனாவேன்.

     மங்கை - திருமங்கலம். ஆனாயர் - ஆன் ஆயர் - ஆ மேய்க்கும்
ஆயர் குலத்தவர். ஆனாயர் (933) என்றது காண்க. நாயனாரது இயற்பெயர்
விளங்கவில்லை. ஊரும் ஊர்ச்சிறப்பும், பேரும், தொழிலும் திருத்தொண்டின்
குறிப்பும் முதனூல் பேசிற்று.

     வகை :- யாவைக்கும் தாயானவரும், சடைமேற் பிறைவைத்த
தூயவரும்ஆகிய சிவபெருமானுடைய திருவடிகளை மனதில் விடாதுபற்றி,
அத்தொடர்ச்சியாலே அவருடைய பழமையாகிய சீர்களை வேய்ங்குழல்
நாதத்தினாற் பரவுகின்ற மேன்மழ நாட்டு நீர்வளம் மிக்க திருமங்கலத்தின்
ஆனாயர் என்னை மகிழ்ந்து ஆட்கொண்டருளியவர்.

     மேன்மழ நாட்டு மங்கலக்கோன் ஆனாயன், தூயவன் பாதம்
தொடர்ந்து அவனது சீர் துளையாற் பரவுபவன்; அவன் என்னை ஆண்டவன்
எனமுடித்துக் கொள்க. தாயவன் யாவுக்கும் "தாயவன்காண் உலகுக்கு"
(கச்சித்திருத்தாண்டகம்). தொடர்தல் - விடாது பற்றுதல் குறித்தது.
துளைவேயாற் பரவுபவன் என மாற்றுக. துளைகளின் வழியே பண் எழுப்பிப்
பரவுதலால் துளையாற் பரவும் என்றார். மங்கலம் - நகரப்பெயர்.
விரிபுனன் மங்கலம் - "அலைமலிந்த புனன் மங்கை" என்பது முதனூல்;
(தொகை). என்னை உவந்து ஆண்டவன் - "அடியேன்" என்ற முதனூல்
முடிபின் தாற்பரிய முணர்த்திற்று. யான் அடியேன் எனப் பணிதலும்,
அவனும் என்னை ஆண்டனன். உவந்து - அடிமையை