பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்153


93.பேசாப் பிரமமடி! பேச்சிறந்த பேரொளிகாண்!
ஆசா பாசங்கள் அணுகாத வேரொளிகாண்!
  
94.தேசம் இறந்தவன் காண்! திசை இறந்த தென் கடல்காண்!
ஊசி முனை இன்றி இல்லா உருபொருள்காண்!
  
95.சிப்பியில் முத்தொளிகாண்! சின்மய நோக்கு இல்லார்க்கு
அப்பில் ஒளிபோல் அமர்ந்த அரும்பொருள்காண்!
  
96.ஆல விருட்சமடி! அளவிலாச் சாகையடி!
மேலாம் பதங்கள் விசும்புஊடுருவும் மெய்ப்பொருள்காண்!
  
97.வங்கிஷம் எல்லாம் கடந்து மருவா மலர்ப்பதம்காண்!
அங்கிஷமாய் எங்கும் ஆழ்ந்த அரும்பொருள்காண்!
  
98.நாமநட்டம் ஆனதடி! நவில இடம் இல்லையடி!
காமனைக் கண்ணால் எரிக்கக் கனல் விழித்த காரணன் காண்!
  
99.கொட்டாத சொம்பொனடி! குளியாத் தரளமடி!
எட்டாத கொம்பிலடி ஈப்புகாத் தேனமுதம்.
  
100.காணிப்பொன் னாணியுடன் கல்லுரைமாற்று இன்னதென்றே
ஆணியுடன் கூட்டி அடங்கலிட்டுக் கொண்டாண்டி!
  
101.அளவிறந்த அண்டத்தார் அத்தனைபேர் உண்டாலும்
பிளவளவும் தான்சற்றும் பேசாப் பிரமமடி!
  
102.கல்நெஞ்சின் உள்ளே கழுநீலம் பூத்தாற்போல்
என்நெஞ்சின் உள்ளே இணை அடிகள் வைத்தாண்டி!
  
103.வேதப் புரவியடி! விரைந்தோடியும் அறியார்;
காதற்ற ஞானமடி! காண்பார் கருத்துடையோன்.
  
104.பாச வினையைப் படப்பார்த்த பார்வையுடன்
நேசத்தைக் காட்டி நில் என்று சொன்னாண்டி!
  
105.ஓசை ஒடுங்கும் இடம் ஓங்காரத்து உள் ஒளிகாண்!
பேசாது இருக்கும் பிரமம் இது என்றாண்டி!